கசகசா சமையல் பொருளா?மருந்து பொருளா?செடி -காய் மட்டும் போதை பொருளா? எதிலிருந்து எடுக்கப்படுகிறது? அற்புமான மருத்துவ பயன்கள்?இவ்வளவு விஷயமா?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
கசகசாவின் அற்புதமான மருத்துவ பயன்கள்
பல நூற்றாண்டுகளாக நம் நாட்டில் மருந்துகளிலும் உணவுகளிலும் கசகசாவை பயன்படுத்தி வருகிறோம். பாப்பி என்னும் செடியில் விதைகளை தாங்கி நிற்கும் விதைப்பை முற்றி, காய்ந்த பின்பு அதிலிருந்து எடுக்கப்படும் விதை தான் கசகசா எனப்படுகிறது.
விதை முற்றாமல் இருக்கும் போது விதைப்பையை கீறி, உறிஞ்சிகள் மூலம் பாலை சேகரித்து உறைய வைத்து தயாரிக்கப்படுவதுதான் அபின். இது போதைப்பொருள்.
நாம் உணவில் பயன்படுத்தும் கசகசா முற்றிய விதைகளாகும். அதில் போதைக்குரிய அம்சம் எதுவும் இல்லை.
கசகசா இனிப்புச் சுவையையும் வெப்பத் தன்மையையும் கொண்டது. துவர்ப்புச் சுவையைத் தூண்டும்,உள் உறுப்புகளின் புண்களை ஆற்றும்.
கசகசா உடலை பலப்படுத்தும், ஆண்மையைப் பெருக்கும்; குடல் புழுக்களைக் கொல்லும். கசகசாவை அன்றாட உணவில் சேர்த்துவர, ஆழ்ந்த நித்திரை உண்டாகும்.
கசகசா, உணவில் சுவையை மட்டுமின்றி, உடலின் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் உதவுகிறது.
கசகசாவில் 50 சதவீதம் எண்ணெய்த்தன்மை இருக்கிறது. இந்த எண்ணெயில் இருக்கும் கொழுப்பு உடலுக்கு நன்மை செய்வதாகும்.
அசைவ உணவுகளில் ருசியை அதிகரிப்பதற்காக கசகசா சேர்க்கப்படுவது உண்டு.கசகசாவை அரைத்து நாம் உணவில் சேர்க்கிறோம்.
அதனால் உணவுக்கு சுவையும், மணமும் கிடைக்கிறது. கூடவே அதில் இருக்கும் மருத்துவ சக்தி உடல் உறுப்புகள் நன்றாக இயங்கச்செய்கிறது.
இதில் வைட்டமின் – பி, மக்னீசியம், கால்சியம், துத்தநாகம் போன்ற தாதுக்கள் உள்ளன. இது உடல் இயக்கத்திற்க்கு உதவுகிறது.
கசகசாவின் மருத்துவ நன்மைகள் :
கசகசா முந்திரி பருப்பு இரண்டையும் சம அளவு எடுத்து பால் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி வந்தால் முகப்பரு மறையும், முகம் அழகு பெறும்.
கசகசாவை தேங்காய்ப் பாலில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.இரண்டு தேக்கரண்டி அளவு கசகசாவை, கால் டம்ளர் பாலில் ஊறவைத்து, பசைபோல அரைத்து, அதை குழந்தைகளுக்கு கொடுத்தால், சீதபேதி குணமாகும்.
கொத்தமல்லி 20 கிராம் உடன் கசகசா 3 கிராம் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் நன்றாக தூக்கம் வரும்.
அரை கோப்பை அளவு கொப்பரைத் தேங்காயைப் பூவாகச் சீவி, அரை தேக்கரண்டி கசகசா சேர்த்து, அரைத்து, அதை துவையலாக, சாப்பிட்டால், வாய்ப்புண் குணமாகும்.
கசகசா முந்திரி பருப்பு , பாதாம் பருப்பு தலா 100 கிராம் எடுத்து அரைத்துக்கொள்ளவும் . இதில் ஒரு ஸ்பூன் பொடியை காலை, மாலை சாப்பிட்டு வந்தால் உடல் வலுப்பெறும்.
உடல் பலம்பெற கசகசா, வால்மிளகு, பாதாம் பருப்பு, கற்கண்டு ஆகியவற்றைச் சமஅளவாக எடுத்துக்கொண்டு, நன்கு தூளாக்கி, பசும்பால், தேன், நெய், தேவையான அளவு சேர்த்து, இலேகியமாக செய்து வைத்துக் கொண்டு, அரை தேக்கரண்டி அளவு, இரவில் பாலுடன் சேர்த்துச் சாப்பிட்டுவர வேண்டும்.
கசகசா, மிளகு, பாதாம், கற்கண்டு ஆகியவற்றைச் சமஅளவாக எடுத்து, நன்கு தூளாக்கி, அதனுடன் பசும்பால், தேன், நெய் ஆகியவற்றை தேவையான அளவு சேர்த்து, இலேகியமாக்கி, அதில் அரை தேக்கரண்டி அளவு, இரவில் பாலுடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், உடலின் வலிமை அதிகரிக்கும்.
குழந்தைகளின் அழுகையை குறைக்க கசகசாவை மைபோல் அரைத்து, குழந்தையின் தொப்புளைச் சுற்றித் தடவினால், குழந்தையின் அழுகை குறையும்.
கசகசா ஜவ்வரிசி பார்லி மூன்றையும் தலா பத்து கிராம் எடுத்து பச்சரியுடன் சேர்த்து கஞ்சி காய்ச்சி குடித்தால் இடுப்புவலி குணமாகும்.
பத்து கிராம் கசகசாவுடன் ஒரு பிடி வேப்பிலை, ஒரு துண்டு கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து அரைத்து அம்மை விழுந்த இடத்தில் தடவினால் அம்மை தழும்புகள் மறையும்.
கசகசாவை, மாதுளம் பழச்சாறில் ஊறவைத்து அரைத்து சாப்பிட்டால் தூக்கமின்மை பிரச்சனை தீரும்.
வயிற்றுப்போக்கு ஏற்படும் போது சிறிதளவு கசகசாவை எடுத்து வாயில் போட்டு நன்றாக மென்று கொஞ்சம் தண்ணீர் குடித்தால், வயிற்றுப்போக்கு குறையும்.
கசகசா , மாம்பருப்பு இரண்டையும் விழுதாக அரைத்து பத்து கிராம் அளவு காலை, மாலை இருவேளையும் தயிருடன் கலந்து சாப்பிட்டால் ரத்த பேதி ,சீதபேதி போன்றவை குணமாகும்.
பெண்கள் மாதவிடாய் காலத்திற்கு முன் ஒருவாரம் இதனைப் பாலில் அரைத்துக் கலக்கிச் சாப்பிட மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அடிவயிற்று வலி குறையும்.
கசகசா ,சாலாமிசிரி ,பூனைக்காலி விதை, மூன்றையும் தலா 100 கிராம் எடுத்து அரைத்து கொள்ளவும் .,இதில் ஐந்து கிராம் பொடியை , தினமும் இரவில் பாலில் கலந்து குடித்து வந்தால் நரம்பு தளர்ச்சி குணமாகும்.
கசகசாவை முதல் நாளிரவு ஊற வைத்துக் காலையில் அரைத்து பாசிப்பயறு பொடி, பால் சேர்த்து கலக்கி உடலில் பூசிக் குளிப்பதால் அரிப்பு குறையும். முகம் பொலிவு பெறும்.
தடை:கசகசா… நம்ம ஊர் மளிகைக் கடைகளில் சர்வசாதாரணமாக கிடைக்கும் உணவுப்பொருள். ஆனால், இதை வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வளைகுடா நாடுகள் கசகசாவுடன் வருபவர்களுக்கு கடுமையான தண்டனையை கொடுத்து வருகிறது.
சொந்த ஊரில் இருந்தவரை, மணக்க, மணக்க மசாலாவுடன் சாப்பிட்டு பழகிய நம்ம ஊர் இளைஞர்கள், வளைகுடா நாடுகளுக்கு வேலைக்குச் செல்லும்போது, ஊறுகாய் பாட்டில்களுடன், கசகசாவையும் எடுத்துச் சென்றதற்காக தண்டனை விதிக்கப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது.
இப்படி தண்டனைக் கொடுக்கும் அளவுக்கு, என்னதான் கசகசாவில் இருக்கிறது என்று ஆராய்ந்து பார்ப்போம்.
இந்திய உணவுகளில் கசகசாவுக்கு தனி இடம் உண்டு. இந்தி மொழியில் ‘கஸ்கஸ்’ என்று அழைக்கப்படுகிறது. இது உணவுப் பொருள் மட்டுமல்ல, மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகையும் கூட. கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் இரும்பு போன்ற கனிமங்களை நிறைய அளவு பெற்றிருக்கின்றன. ‘கசகசாவினால் குடற்புழு, தினவு, குருதிக் கழிச்சல், தலைக்கனம், தூக்கமின்மை போகும். அழகும் ஆண்மையும் கூடும்’ என்கிறது சித்தர் பாடல்.
காரசாரமான மட்டன், சிக்கன் குழம்பு மற்றும் பிரியாணி போன்ற அசைவ உணவுகளில் ருசியைக் கூட்ட கசகசா சேர்க்கப்படுகிறது. மேற்குலக நாடுகளிலும் ‘பாப்பி விதை’ (POPPY SEED) என்று அழைக்கப்படும் கசகசாவுக்கு சிறப்பான மரியாதை உண்டு. பாப்பி மலர்கள் அலங்காரத்துக்காக பல்வேறு நாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த பாப்பிச் செடியில் விதைகளை தாங்கியிருக்கும் பை முற்றி, அது முழுவதுமாகக் காய்ந்த பிறகு அதிலிருந்து எடுக்கப்படுவதுதான் கசகசா. ஆனால், விதைப் பை பசுமை நிறத்தில் இருக்கும் போது, அதாவது பையில் இருக்கும் விதைகள் முழுமை அடையாமல் இருக்கும் சமயத்தில், அந்த விதைப்பையைக் கீறி அதிலிருந்து வடிகிற பாலை சேகரித்தால் அதுதான் ஓபியம்.
மதுபானம், புகையிலை, அபின், ஹெராயின், கஞ்சா, கோக்கைன், பிரவுன் சுகர் போன்று ஓபியமும் போதை தரக்கூடியது. போதைபொருள் பழக்கம் உடல் நலத்திற்கும், சமூக நலத்திற்கும் பெரும் கேடு விளைவிக்கும். இதனால் வளைகுடா நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. கசகசாவில் போதை இல்லை என்றாலும், ஓபியம் தயாரிக்கப்படும் செடியின் விதை என்பதால், தடை செய்துள்ளார்கள். காரணம், இந்த விதையை விதைத்து, கசகசா செடியை வளர்த்து ஓபியம் எடுத்துவிட முடியும். அதனால்தான், கசகசாவுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.