குஜராத் மாநிலம் சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு – காங்கிரஸ் வேட்புமனு நிராகரிப்பு ஏன்? முழு பின்னணி
குஜராத்தில் உள்ள 26 மக்களவைத் தொகுதிகளுக்கும் மே 7ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 19ம் தேதியுடன் நிறைவடைந்தது.
இந்நிலையில் மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்ற போது, சூரத் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த தொகுதியில் புதிய திருப்பம் ஏற்பட்டது.
காங்கிரஸ் வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்திருந்த சுயேச்சை வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை திரும்ப பெற்றனர்.
இதனால், அந்த தொகுதியில் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வாகும் நிலை உருவாகியுள்ளது.
பாஜக தொண்டர்கள் ஏற்கனவே இதை கொண்டாட தொடங்கிவிட்ட நிலையில், தேர்தல் ஆணையம் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.
சூரத்தில் உள்ள பிபிசியின் ரூபேஷ் சோன்வானே அளித்த தகவலின்படி, நிலேஷ் கும்பானியின் வேட்புமனு ரத்து செய்யப்பட்ட பிறகு போட்டியில் 9 வேட்பாளர்கள் இருந்துள்ளனர். ஆனால், அடுத்தடுத்து ஒவ்வொரு சுயேச்சை வேட்பாளர்களாக தங்களது வேட்புமனுக்களை திரும்ப பெற்றுள்ளனர்.
ஆனாலும், பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் வேட்பாளர் பியாரேலால் பாரதி தன்னுடைய வேட்புமனுவை திரும்ப பெறாமல் தான் இருந்தார். இறுதியில் அவரும் திரும்ப பெற்றுவிட்டார்.
இதனால், பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி வெற்றி பெறும் சூழல் உருவானது.
குஜராத்தின் சூரத் மக்களவைத் தொகுதியில் வாக்குப்பதிவுக்கு முன்பே, எதிர்க்கட்சிகள் பெரும் பின்னடைவைச் சந்திக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்புமனுவுக்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் அதிகாரிகள் அளித்த தகவல்படி, காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்புமனுவில் அவரை முன்மொழிந்திருந்த 5 பேரில், மூன்று பேர் அது தங்களது கையெழுத்து இல்லை என்று கூறியதால், நிலேஷின் வேட்புமனு ரத்து செய்யப்பட்டுள்ளது. காங்கிரசின் டம்மி வேட்பாளர் சுரேஷ் பத்சலாவின் மனுவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசியுள்ள பாஜக வேட்பாளர் முகேஷ் தலாலின் தேர்தல் முகவர் தினேஷ் ஜோதானி, கும்பானியை முன்மொழிந்தவர்கள் தகுதியவற்றவர்கள் என்று பாஜக வாதத்தை முன்வைக்க, ஞாயிற்றுக்கிழமை இருதரப்பு வாதங்களையும் கேட்டு முடிவை அறிவித்தார் தெரிதல் அதிகாரி.
நிலேஷ் கும்பானியை முன்மொழிந்த ஐவரில் மூவர் தாங்கள் கையெழுத்திடவில்லை என்று கூறிய நிலையில், இதுகுறித்து விளக்கமளிக்க நிலேஷ் கும்பானிக்கு ஏப்ரல் 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி வரை அவகாசம் அளித்தார் மாவட்ட ஆட்சியர்.
ரமேஷ்பாய் பல்வந்த்பாய் போலரா, ஜகதீஷ் நாக்ஜிபாய் சவாலியா மற்றும் துர்வின் திருபாய் தமேலியா ஆகியோர் நிலேஷ் கும்பானியின் ஆதரவாளர்களாக கையெழுத்திட்டவர்கள். இதில் ஜகதீஷ் சவாலியா நிலேஷ் கும்பானியின் மருமகன், துர்வின் தமேலியா அவரது சகோதரர் மகன், ரமேஷ் போலாரா அவரது தொழில் கூட்டாளி ஆவார்.
இப்படி இவருக்கு இவ்வளவு நெருக்கமானவர்களாக இருந்த போதும் ஏன் அவர்கள் இப்படி செய்தார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த விவகாரம் வெளியே வந்ததில் இருந்து அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை.
எனவே, தங்களது வேட்பாளரின் ஆதரவாளர்கள் கடத்தப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கோபால் இத்தாலியா, நிலேஷ்பாயின் ஆதரவாளர்கள் கடத்தப்பட்டு ரகசிய இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களின் தொலைபேசிகள் வேலை செய்யவில்லை. யாரோ ஒருவர் அவர்களுக்கு மிரட்டல் மற்றும் அழுத்தம் கொடுத்து வாக்குமூலம் வாங்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடுத்துள்ளார்” என்று கூறினார்.
இதற்கிடையில் தனது ஆதரவாளர்கள் கடத்தப்பட்டுள்ளதாக கும்பானி உம்ரா காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
இந்த கடத்தல் விவகாரம் தொடர்பாக பாஜக தலைவரும், சூரத் முன்னாள் மேயருமான ஜெகதீஷ் படேல் கூறுகையில், “தேர்தல் வந்தாலும் இல்லாவிட்டாலும் பாஜக மீது குற்றச்சாட்டுகளை முன்வைப்பதே காங்கிரஸ் தலைவர்களின் வேலை. அனைவரின் முன்னிலையிலும் தான் படிவங்கள் நிரப்பப்பட்டுள்ளன. திடீரென்று காங்கிரஸ் வேட்பாளர்களின் ஆதரவாளர்களுக்கு என்ன ஆனது? இது அவர்களது படிவம், அவரது ஆதரவாளர்கள். இதில் பாஜகவுக்கு எந்த தொடர்பும் இல்லை” என்றார்.