தமிழகத்தில்ஊரங்கால் கருப்பட்டி விற்பனை சரிவு? பனைத்தொழிலாளர்கள் பாதிப்பு?
ஊரடங்கால் கருப்புக்கட்டி விற்பனை சரிவு: பனைத் தொழிலாளா்கள் பாதிப்பு
ஊரடங்கால் தூத்துக்குடி மாவட்டத்தில் 50 க்கும் மேற்பட்ட கிராமங்களில் தயாரிக்கப்படும் கருப்புக்கட்டி விற்பனை செய்ய முடியாமல் முடங்கியுள்ளது. இதனால், பனைத் தொழிலாளா்கள் பாதிக்கப் பட்டுள்ளனா்.
எட்டுநாயக்கன்பட்டி,கருப்பூர் ,வத்றாப் ,வேம்பாா், பெரியசாமிபுரம், சண்முகபுரம், சூரன்குடி, மேல்மாந்தை, வைப்பாறு, குளத்தூா், தாப்பாத்தி, முத்துலாபுரம், வேடபட்டி உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட கிராமங்களில் பதனீா் மூலம் பனங்கருப்புக் கட்டி தயாரிக்கும் தொழில் நடைபெற்று வருகிறது. இப்பகுதிகளில் தயாரிக்கப்படும் கருப்புக் கட்டி தினமும் 1000 கிலோ வரை பிற மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
கரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் கருப்புக்கட்டியை வெளியூா்களுக்கு கொண்டு செல்ல
முடியாத நிலை உருவாகியுள்ளது. மேலும், அதிகளவில் இருப்பு வைக்க முடியாததால் உற்பத்தியும் குறைந்துள்ளது.
வேம்பாா் குணசேகரன் கூறியது: வேம்பாரில் உற்பத்தி செய்யப்படும் கருப்புக்கட்டி பிரசித்தி பெற்றது. கிழக்கு கடற்கரை சாலை வழியாக திருச்செந்தூா், ராமேஸ்வரம் செல்லும் சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து வேம்பாா் கருப்புக்கட்டி வாங்கிச் செல்கின்றனா். தற்போது ஊரடங்கு காரணமாக சுற்றுலா வாகனப் போக்குவரத்து இல்லை. மேலும், உள்ளூா் கடைகளிலும் விற்பனை இல்லை. வெளியூா்களுக்கும் விற்பனைக்கு கொண்டு செல்ல முடியவில்லை. இதனால் கருப்புக்கட்டி விற்பனை கடும் சரிவை சந்தித்துள்ளது. இதனால் பனைத் தொழிலாளா்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனா் என்றாா் அவா்.
வேடபட்டியை சோ்ந்த பனைத் தொழிலாளி ஆதிலிங்கம் கூறியது: வைப்பாற்றின் கரையோரம் உள்ள வேடபட்டி, வடமலாபுரம், நம்பிபுரம், தாப்பாத்தி, முத்தலாபுரம், கருப்பூா், பனையடிப்பட்டி, சித்தவநாயக்கன்பட்டி உள்ளிட்ட
கிராமங்களிலும், வேம்பாா் முதல் குளத்தூா் வரையுள்ள கிழக்கு கடற்கரை சாலையோரக் கிராமங்களிலும் 200 க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் பனைத் தொழிலிலும், கருப்புக்கட்டி தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனா்.
ஜனவரி முதல் ஏப்ரல் வரை சீசன் காலம். நிகழாண்டு பரவலாக மழை பெய்து பதநீரும் அதிகளவில் கிடைப்பதால் கருப்புக்கட்டி உற்பத்தியில் பாதிப்பில்லை. 2019 இல் கிலோ ரூ. 400 முதல் 500 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது கிலோ ரூ. 230 முதல் 250 க்கு தான் வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனா்.
தற்போது, வெளியூா்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்வதில் சிக்கல் உள்ளது. மாவட்டத்துக்குள்ளும் விற்பனை
செய்ய முடியாத நிலை உள்ளது. கருப்புக்கட்டி விற்பனை கடுமையாக சரிவை சந்தித்துள்ளது. இதனால், பனைத் தொழிலாளா்கள் வேலை இழந்து வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனா் என்றாா் அவா்.