சிவகங்கை மாவட்டத்தில் தேங்காய்கள் தேக்கம்? விவசாயிகள் வேதனை?முழுவிபரம் – விண்மீன் நியூஸ்
வெளிமாநிலங்களுக்கு வாகன போக்குவரத்து இல்லாததால் சிவகங்கை மாவட்டத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தேங்காய்கள் விறப்னை செய்ய முடியாமல் தேங்கி கிடக்கின்றன. இதனால் தென்னை விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம், லாடனேந்தல், மடப்புரம், திருப்பாச்சேத்தி, மானாமதுரை, சிங்கம்புணரி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் மூன்று லட்சம் தென்னை மரங்கள் உள்ளன.
சிவகங்கை மாவட்டத்தில் பெரும்பாலும் நெட்டை ரக தென்னை மரங்களே அதிகளவில் வளர்க்கப்படுகின்றன.
மற்ற மர காய்களை விட நெட்டை மரங்களின் தேங்காய்களில் எண்ணை சத்தும் அதிகம் ரூசியும் அதிகம் என்பதால் மும்பை பகுதியில் திருப்புவனம் பகுதி தேங்காய்களுக்கு தனி மவுசு உண்டு.
தேங்கி கிடக்கும் தேங்காய்கள்
மதுரை நகர் மொத்த வியாபாரிகள் திருப்புவனம் பகுதி தென்னை விவசாயிகளிடம் இருந்து தேங்காய்களை வாங்கி விற்பனை செய்து வருகின்றனர்.
ஊரடங்கிற்கு முன்னதாக ஒரு தேங்காய் 10 ரூபாயில் இருந்து 18 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.
ஒரு லோடுக்கு 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் தேங்காய்கள் வரை ஏற்றப்பட்டு மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
திருப்புவனம் பகுதியில் இருந்து வாரத்திற்கு இரண்டு முதல் 5 லோடுகள் வரை அனுப்பி வைக்கப்பட்டது.
ஊரடங்கு காரணமாக வாகன போக்குரத்து நிறுத்தப்பட்ட நிலையில் சரக்குகளை ஏற்றிய லாரிகளை இயக்க டிரைவர்கள் பலரும் முன்வருவதில்லை.
வழிநெடுகிலும் சோதனை சாவடிகளில் கெடுபிடி நோய் தொற்று சான்று, வாகனச்சான்று என பல சோதனைகள் இருப்பதால் லாரி டிரைவர்கள் வர மறுக்கின்றனர்.
மேலும் திருப்புவனம் பகுதியில் தேங்காய்களை வெட்ட பேரையூர் பகுதியில் இருந்துதான் கூலி ஆட்களை வரவழைப்பதுண்டு, ஊரடங்கால் அவர்கள் யாரும் வராததால் தேங்காய்கள் மரங்களிலேயே பழுத்து விழுகின்றன.
காய்ந்து கிடக்கும் தேங்காய் சில்கள்
பேரையூர் பகுதியில் இருந்துதான் அதிகளவு கூலி ஆட்கள் தேங்காய் வெடட வருவார்கள், ஊரடங்கால் அவர்கள் ஊரை விட்டு வெளியேற முடியவில்லை. 45 நாட்களுக்கு ஒருமுறை தேங்காய்கள் வெட்டப்படும்.
கடந்த 25 நாட்களாக தேங்காய்கள் வெட்டப்படாததால் மரத்திலேயே பழுத்து கீழே விழுந்து வருகின்றன.
தேங்காய்கள் உரிக்கவும் ஆட்கள் இல்லை. வெயில் காரணமாக தேங்காய்களில் உள்ள ஈரப்பதமும் காயந்து வருகிறது.
இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட வாய்ப்புண்டு. தேங்காய் வெட்ட கூலி ஆட்கள் வருவதற்கு அரசு அனுமதி சீட்டு வழங்க வேண்டும்.
திருப்புவனம் பகுதி தேங்காய்கள் மும்பைக்குதான் அதிகமாக அனுப்படுகிறது.
ஒரு தேங்காய் 18 ரூபாய் வரை விற்பனை செய்த நிலையில் மதுரை வியாபாரிகள் 6 ரூபாய்க்கு கேட்பதால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
தேங்காய்களை வெளிமாநிலங்களுக்கு அனுப்ப மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தென்னை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.