✍✅கோவை மத்திய சிறையில் நன்னடத்தை சிறைவாசிகளை திருப்திப்படுத்தும் விதமாக புதியதாக சிறிய அளவிலான திறந்த வெளிச்சிறைச்சாலை அமைக்கப்பட்டு விவசாய பணிகள் நடைபெற்று வருகிறது.
கோவை மத்திய சிறைச்சாலையானது தமிழக அளவில் முக்கிய சிறைச்சாலையாக உள்ளது.
இது 1872 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது.செக்கிழுத்த செம்மல் வ உ சிதம்பரனார் உள்ளிட்ட பல்வேறு சுதந்திர போராட்ட தியாகிகள் இந்த சிறையில் தண்டனையை கழித்துள்ளனர்.
இந்த சிறையில் கிட்டத்தட்ட 1800க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். அதே போல இந்த சிறைச்சாலையில் ஆண்களுக்கு , பெண்களுக்கு என்று தனித்தனி சிறைகள் உள்ளது.
இந்த சிறைச்சாலைக்குட்பட்ட திறந்தவெளி சிறைச்சாலை ஒண்டிபுதூர் அருகே செயல்பட்டு வருகிறது.
அந்தத் திறந்தவெளி சிறைச்சாலையைப் போலவே கோவை மத்திய சிறை வளாகத்தில் சிறியளவிலான திறந்தவெளிச்சிறை (செமி ஓப்பன் பிரிசன்) அமைக்கப்பட உள்ளது.
இதற்காக நிலத்தை தயார் செய்யும் பணிகளும், விவசாய பணிகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அரசின் இந்த சிறந்த திட்டத்தினால் நன்னடத்தை கைதிகள் பெரிதும் பயன் பெறுவார்கள்.
இந்த பணிகளுக்காக தற்போது 5 ஏக்கர் நிலத்தில் கைதிகளால் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதில் அரைக் கீரை, தக்காளி, கத்திரி, பீட்ரூட், முள்ளங்கி, வெண்டைக்காய், முருங்கைக்கீரை கொத்தவரங்காய் உள்ளிட்ட பல்வேறு சாகுபடிகள் செய்யப்பட்டு வருகிறது.
அதேபோல இந்த விவசாய பணிகளை நூறு கைதிகள் வரை மேற்கொள்ளலாம் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இப்படி இருக்க முதற்கட்டமாக 23 கைதிகள் விவசாய பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து மேலும் கொலை-கொள்ளை, கற்பழிப்பு வழக்கு, ஆள் கடத்தல் வழக்கு, தேசத்துரோக வழக்கு உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்ட கைதிகளும்,தொடர் குற்றங்களில் ஈடுபட்டு சிறைக்கு வரும் கைதிகளும் இந்த திறந்தவெளி சிறைக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
மேலும் இந்த சிறிய திறந்தவெளிச் சிறையில் கைதிகளை இணைக்க தேர்வுக் குழு அமைக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விரைவில் 100 கைதிகள் இந்த விவசாய பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
அதேபோல இந்த விவசாய பணிகளில் ஈடுபடும் கைதிகளுக்கு சிறை நிர்வாகத்தால் மற்ற கைதிகளை விட 100 கிராம் அதிக உணவு வழங்கப்படுகிறது.
இதில் முக்கியமாக தண்டனை காலங்கள் பாதிக்குப் பாதி குறைக்கப்படுவதுடன் உழைப்புக்கேற்ற ஊதியமும் கைதிகளின் கணக்கில் வைக்கப்படுகிறது.
இதனால் இந்த விவசாய பணிகளில் ஈடுபடும் நன்னடத்தை கைதிகள் மிகவும் மனநிறைவுடன் செயல்படுகின்றனர்.
இந்த சிறிய அளவிலான திறந்தவெளி சிறை எங்கள் வாழ்வில் புது உத்வேகத்தை கொடுத்துள்ளது எனவும் நன்னடத்தை கைதிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.