வாணியம்பாடியில் கரோனா தொற்றால் எஸ்.ஐ. உயிரிழப்பு? அஞ்சலி செலுத்த வந்த எஸ்.பி.க்கு ,எஸ்.ஐ. மனைவி சல்யூட் அடித்து மரியாதை?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
வாணியம்பாடியில் கரோனா தொற்றால் எஸ்.ஐ. உயிரிழப்பு: அஞ்சலி செலுத்த வந்த எஸ்.பி.க்கு எஸ்.ஐ. மனைவி சல்யூட் அடித்து மரியாதை!
கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு இன்று உயிரிழந்த குற்றப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் உடலுக்கு திருப்பத்தூர் எஸ்.பி. விஜயகுமார் நேரில் அஞ்சலி செலுத்த வந்தார். அப்போது, எஸ்.ஐ. மனைவி கண்ணீர் மல்க எஸ்.பி.க்கு சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினார்.
வேலூர் மாவட்டம், ஒடுக்கத்தூர் அடுத்த கொட்டாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கே.கே.சண்முகம் (50). இவர், ஆம்பூர் காவல் உட்கோட்டத்தில் குற்றப்பிரிவில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த 24-ம் தேதி இரவு பணி முடிந்து வீடு திரும்பிய சண்முகத்துக்குக் காய்ச்சல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, 25-ம் தேதி வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சண்முகம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்குக் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், சண்முகத்துக்குக் கரோனா தொற்று இருப்பது 26-ம் தேதி உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் கரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், நேற்று காலை அவரது உடல் நிலை மோசடைந்தது. மூச்சுத் திணறல் காரணமாக இன்று (செப். 27) காலை 10 மணியளவில் சிகிச்சை பலனின்றி சண்முகம் உயிரிழந்தார். இதையறிந்த அவரது மனைவி திலகவதி (45), 2 மகன்கள், ஒரு மகள் மற்றும் உறவினர்கள் மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர்.
சண்முகம் உயிரிழந்ததை அறிந்த அவர்கள் மருத்துவமனை வளாகத்தில் கதறி அழுதனர். இந்நிலையில், உதவி ஆய்வாளர் சண்முகம் கரோனா தொற்றால் உயிரிழந்த செய்தியை அறிந்ததும், திருப்பத்தூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்தார்.
பிறகு, எஸ்.பி. விஜயகுமார், ஆம்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் பாதுகாப்பு உடை அணிந்து சண்முகம் உடல் வைக்கப்பட்ட இடத்துக்குச் சென்று அவரது உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பிறகு, வெளியே வந்த எஸ்.பி. விஜயகுமார், உயிரிழந்த சண்முகம் மனைவி திலகவதி, அவரது மகன்கள் மற்றும் மகளுக்கு ஆறுதல் கூறினார்.
அப்போது, காவல் துறையில் உயர் அதிகாரிகளுக்கு உரிய மரியாதை செலுத்த வேண்டும் என என் கணவர் அடிக்கடி என்னிடம் கூறுவார் என அழுதபடி கூறிய சண்முகம் மனைவி திலகவதி, கண்ணீர் மல்க எஸ்.பி. விஜயகுமாருக்கு ‘சல்யூட்’ அடித்து மரியாதை செலுத்தினார். இதை ஏற்றுக்கொண்ட எஸ்.பி. விஜயகுமார், கரோனாவால் உயிரிழந்த சண்முகம் குடும்பத்துக்குத் தேவையான உதவிகளைச் செய்து கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்
⬇️⬇️⬇️