ஜிஎஸ்டி லாட்டரி அறிமுகம்? பொருளுக்கு பில் வாங்கினால் பரிசு?
வருகிறது ஜி.எஸ்.டி., லாட்டரி; பொருளுக்கு பில் வாங்கினால் பரிசு.
டில்லி: கடையில் பொருட்கள் வாங்கும் போது, ‘பில்’ எனப்படும் ரசீது கேட்கும் பழக்கத்தை ஊக்குவிக்க, ‘ஜி.எஸ்.டி., லாட்டரி’ திட்டம் விரைவில் அறிமுகமாக உள்ளது.
இது குறித்து, மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்கத் துறை உறுப்பினர், ஜான் ஜோசப் கூறியதாவது: அனைவரும், பொருட்கள் வாங்கும் போதும், சேவைகளை பெறும் போதும், ரசீது கேட்டு வாங்க வேண்டும். இதை ஊக்குவிக்க, புதிய ‘ஜி.எஸ்.டி., லாட்டரி’ திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
நுகர்வோர், பொருட்கள் வாங்கும் போதும் சேவைகளை பெறும்போதும், 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் வரை வரி செலுத்துகின்றனர். இந்த வரி செலுத்தப்பட்ட ரசீதை ஒருவர், மத்திய அரசு அறிவிக்க உள்ள, லாட்டரி சீட்டு வலைதளத்தில் பதிவேற்ற வேண்டும். அவற்றின்படி, குலுக்கல் முறையில், வெற்றி பெற்றோர் தேர்வு செய்யப்படுவர்.
அவர்களுக்கு, 10 லட்சம் முதல், 1 கோடி ரூபாய் வரை ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும். மின்னணு முறையில், குலுக்கல், குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து நடைபெற்று, பரிசுகள் வழங்கப்படும். ரசீதின் குறைந்தபட்ச மதிப்பை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜி.எஸ்.டி., கவுன்சில் தீர்மானிக்கும்.
தயாரிப்பு நிறுவனங்கள், ஜி.எஸ்.டி., வரி குறைப்பின் பலனை, நுகர்வோருக்கு வழங்க வேண்டும். அவ்வாறு வழங்காத நிறுவனங்கள் மீது, மிகை லாப தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அபராதம் வசூலிக்கப்படுகிறது.இந்த அபராத தொகை, நுகர்வோர் நல நிதியத்தில் சேர்க்கப்பட்டு வருகிறது. இத்தொகையில் ஒரு பங்கு, லாட்டரியில் வெற்றி பெறுவோருக்கு பரிசு வழங்க ஒதுக்கப்படும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
பல நிறுவனங்கள், குறிப்பாக உணவகங்கள், ஜி.எஸ்.டி., என்ற பெயரில், நுகர்வோரிடம் பணம் வசூலித்து மோசடி செய்கின்றன.இது போன்ற மோசடிகளை தடுக்கவும், நுகர்வோரிடம் ரசீது கேட்கும் பழக்கதை ஊக்குவிக்கவும், புதிய லாட்டரி திட்டத்தை, மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளது. இதனால், போலி ஜி.எஸ்.டி., எண் மூலம் நுகர்வோர் ஏமாற்றப்படுவதும் தடுக்கப்படும்.