தமிழகத்தில் டாஸ்மாக் ஆன்லைன் விற்பனை வருமா?ஆஃப்லைன் தொடருமா?அரசின் வெறித்தனம்? முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
டாஸ்மாக்: ஆன் லைன் விற்பனை வருமா? ஆஃப் லைன் தொடருமா? -அரசின் வெறித்தனம்!
ஊரடங்கு உத்தரவு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை அரசு திறக்கக் கூடாது என்று மே 8 ஆம் தேதி மாலை, சென்னை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டபோது, தமிழக அரசு சற்றே அதிர்ந்து போனது. வேண்டுமானால் ஆன் லைனில் மது விற்பனை செய்துகொள்ளலாம் என்றும் கூறியிருக்கிறது நீதிமன்றம்.
இதை எதிர்த்து நேற்று (மே 9) உச்ச நீதிமன்றத்துக்கு அப்பீல் சென்றிருக்கிறது தமிழக அரசு. ‘மதுபானக் கடைகளைத் திறப்பது என்பது அரசின் கொள்கை முடிவு. அதில் நீதிமன்றம் தலையிட முடியாது’ என்று அப்பீல் மனுவில் தமிழக அரசு கூறியிருக்கிறது.
இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளை மே 7 ஆம் தேதி திறக்கக் கூடாது என்று தொடரப்பட்ட வழக்கில், மே 6 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த விவாதம் கவனிக்கத் தக்கது.
அன்று நடந்த விசாரணையில், “ஆன் லைனில் மதுபானம் விற்க முடியுமா, டோர் டெலிவரி செய்ய நடவடிக்கை எடுக்க முடியுமா?” என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
அதற்கு பதிலளித்த தமிழக அரசு வழக்கறிஞர், “டாஸ்மாக் மதுவிற்பனையை ஆன் லைனில் மேற்கொள்ள முடியாது. அதற்கு வாய்ப்பே இல்லை. அதற்கான பொறிமுறைகளை உருவாக்க கால தாமதம் ஆகும். கொரோனா தொற்று முடிய நாளாகும் என்பதால் மற்ற கடைகள் திறக்கப்படுவது போல தான் மதுக்கடைகள் திறக்கப்படுகிறது. எனவே மதுவை மொத்தமாக யாருக்கும் விற்பனை செய்ய முடியாது. தனிநபர்களுக்கு தான் விற்கப்படும், அதோடு சமூக விலகல் முழுமையாக பின்பற்றப்படும், பாதுகாப்பு நடவடிக்கைகளும் வழங்கப்படும்” என்று திட்டவட்டமாக கூறினார்.
இந்த நிலையில் மே 8 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம், “டாஸ்மாக் கடைகளை ஊரடங்கு முடியும் வரை திறக்கத் தடை விதிக்கிறோம். ஆன் லைனில் வேண்டுமானால் மது விற்பனை செய்துகொள்ளலாம்” என்று உத்தரவிட்டது. இதை எதிர்த்துதான் மாநில அரசு உச்ச நீதிமன்றத்துக்கு அப்பீல் சென்றிருக்கிறது.
ஏற்கனவே உச்ச நீதிமன்றமும் மது விற்பனையை ஆன் லைனில் விற்கலாமா என்று மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியிருந்தது. இந்த பின்னணியில் தமிழகத்தில் மது விற்பனை ஆன் லைனில் நடப்பது சாத்தியமா என்று விசாரித்தோம்.
தமிழகத்தில் சில்லரை விற்பனைக் கடைகளில் இருந்து நட்சத்திர ஹோட்டல்கள் வரை டாஸ்மாக்கில் இருந்துதான் மது கொள்முதல் செய்ய வேண்டும். இந்த நிலையில் மதுவை ஆன் லைன் விற்பனை செய்வதற்கு இதுவரை சட்ட விதிகளில் இடமில்லை. சில நாட்களுக்கு முன் பஞ்சாப் அரசு ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகள் திறந்த நிலையில் சமூக இடைவெளி இல்லாமல் கூட்டம் அதிகமாவதால் ஒரு நாளின் குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டும் ஆன் லைனில் மது விற்பனை செய்யப்படும் என்று அமைச்சரவை கூடி முடிவெடுத்தது. ஆனால் அது நேரடி விற்பனை அளவுக்கு இல்லை என்பதே அங்கு நிலைமை.
இந்த நிலையில் தமிழகத்தில் ஆன்லைன் மது விற்பனை சாத்தியம் இல்லை என்கிறார் டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளன பொதுச் செயலாளர் திருச்செல்வன். மின்னம்பலத்துக்காக அவரிடம் பேசினோம்.
“டாஸ்மாக் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து இன்று வரை மேலிருந்து கீழே வரை ஒட்டுமொத்த நிர்வாகக் கட்டமைப்பும் ஊழல் மலிந்திருக்கிறது. எதிலும் வெளிப்படைத் தன்மை இல்லை. டீக்கடைகளில் கூட டோக்கன் கொடுக்கப்பட்டு கணக்கு வைக்கப்படுகிறது. ஆனால் அரசு நிறுவனமான மதுக்கடைகளில் எந்த கணக்கும் இல்லை. கடைகளில் கொண்டு இறக்கிவைக்கப்படும் மதுபாட்டில்களுக்கான பணம், அதற்கு ஏற்ற மாமூல் அதிகாரிகளுக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்பதால் இங்கே பில் முறையே இல்லை. பில் மெஷினே இல்லாதவர்கள், எப்படி ஆன் லைன் மது விற்பனைக்கு தயாராவார்கள்?
தமிழ்நாட்டில் ஏற்கனவே HIP BAR என்றொரு ஆப் டாஸ்மாக்கில் செயல்படுத்தப்பட்டது. சென்னை போன்ற பெருநகரங்களில் இருக்கும் ஷாப்பிங் மால்களில் இருக்கும் எலைட் மதுக் கடைகளில் மட்டுமே இதற்கு அனுமதி. அதை உங்கள் மொபைல் தரவிறக்கிக் கொள்ள வேண்டும். இந்த ஆப்பில் போய், மாலில் இருக்கும் கடையின் கோட் நம்பரை பதிவு செய்து உங்களுக்குத் தேவையான மது வகையைக் குறிப்பிட்டு அதில் பணம் செலுத்தலாம். அதன் ரசீது ஆன் லைனிலேயே உங்களுக்கு வரும். அதை எடுத்துக் கொண்டு, மால் ஷாப்புக்கு போய் க்யூஆர் கோட் ஸ்கேன் செய்து உங்களுக்கான மதுபானத்தை நேரில் போய் பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த ஆப் பிளாப் ஆகிவிட்டது என்பதை விட ஆக்கப்பட்டது. இதுதான் டாஸ்மாக் தொழில் நுட்ப ரீதியாக மது விற்பனை செய்ய எடுத்த முயற்சி. அதன் பிறகு எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.
இப்படி ஒரு ஆப் அல்லது போர்ட்டல் உருவாக்கவே குறிப்பிட்ட நாட்கள் ஆகும். அதற்கான பொறிமுறைகளை பூர்த்தி செய்வது எளிதானதல்ல. எனவேதான் தமிழக அரசு நீதிமன்றத்தில் ஆன் லைனில் விற்பனை செய்ய முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறது” என்றவரிடம்,
“சொமேட்டோ போன்ற ஆன் லைன் உணவு வழங்கும் நிறுவனங்கள் மது விற்பனை செய்ய ஆர்வமாக இருக்கின்றனவே?” என்று கேட்டோம்.
“அதற்கு சாத்தியமே இல்லை. அதற்காக தமிழகம் முழுதும் பணியாளர்கள் தேவை. ஆன் லைனில் விற்பனை செய்ய அவர்களோடு ஒப்பந்தம், போட்டால் குறிப்பிட்ட சதவிகிதத்தை அந்த நிறுவனங்கள் கேட்கும். தனக்குக் கிடைக்கும் லாபத்தில் குறைவு ஏற்பட தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது. அதனால்தான் விஜய் சொல்லும் வெறித்தனம் என்பதைப் போல கடைகளைத் திறந்தே ஆவது என்று வெறித்தனமாக அரசு அப்பீலுக்குப் போயிருக்கிறது. ஆன் லைன் விற்பனை என்பது தொழில் நுட்ப ரீதியாகவும், வருமான ரீதியாகவும் டாஸ்மாக் நிர்வாகத்துக்கு சவாலானது என்பதால் அதில் அரசு முனைப்பு காட்டாது” என்கிறார் திருச்செல்வன்.
நாம் டாஸ்மாக் அதிகாரிகள் சிலரிடம் பேசியபோது, “கோடி கோடியாய் கொட்டுவதே வெளிப்படைத் தன்மை இல்லாத முறையால்தான். ஆன் லைன் விற்பனை என்று கொண்டு வந்தால் மது விற்பனையின் ஒவ்வொரு காசும் கணக்குக் காட்டப்படவேண்டும். இந்தப் பணம் டாஸ்மாக் அதிகாரிகள் முதல் ஆளுங்கட்சி மேலிடம் வரை பாய்வதால் ஆன் லைன் விற்பனை என்பது அவர்களுக்கு மிகவும் கசப்பானதாகவே இருக்கும். அதனால்தான் அதற்குத் தடையாக இருக்கிறார்கள். உள்ளபடியே ஆன் லைன் மூலம்தான் விற்பனை என்று அறிவித்தால் குடிமகன்கள் பலர் ஓரிரு நாட்களில் அதற்குப் பழக்கமாகிவிடுவார்கள். அப்டேட் ஆகிவிடுவார்கள். இப்போது எத்தனையோ ஆப்களை செல்போன்களில் பயன்படுத்தி வருபவர்கள்தானே.
ஆனால் ஆன் லைன் விற்பனை அமலுக்கு வந்தால் கொள்முதல், விற்பனை எல்லாவற்றிலும் ஊழல் மயமாகியிருக்கும் டாஸ்மாக் நிர்வாகம் வெளிப்படையான முறையில் செயல்பட வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படும். எனவேதான் ஆன் லைன் முறைக்கு செல்லாமல் ஆஃப் லைனிலேயே விற்க தமிழக அரசு துடியாய் துடிக்கிறது” என்கிறார்கள்.
தமிழகத்தில் ஆன் லைன் மதுவா, வழக்கம்போல் ஆஃப் லைன் மதுவா என்பது உச்ச நீதிமன்றத்தின் கையில் இப்போது இருக்கிறது.
-ஆரா