பரபரப்பான எதிர்பார்ப்பில் இந்தியா?பிரதமர் மாநில முதல்வர்களுடன் ஏப்ரல்27ல் ஆலோனைக்கு பிறகே ஊரடங்கை மே3க்கு பிறகு நீட்டிப்பதா Or வேண்டாமா முடிவு?முழுவிபரம் – விண்மீன் நியூஸ்
ஏப்ரல் 27ம் தேதி என்ன வேண்டுமானாலும் ஆலோசனை பண்ணுங்க.. ஆனால் இந்த 7 முடிவையும்.. மறக்காம எடுங்க.
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 27ம் தேதி மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு என்ன சொல்லப் போகிறார், மத்திய அரசு என்ன செய்ப் போகிறது என்பதுதான் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க வரும் மே 3 ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகிறது… ஏப்ரல் 27-ம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொலி மூலம் பிரதமர் மோடி ஆலோசனை மாநிலங்களில் எடுக்கப்பட்டுவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிவார் என்றும் கூறப்படுகிறது.. காணொலியில் இவர்கள் என்ன பேசுவார்கள் என்பதைவிட, ஆலோசனைக்கு பிறகு மத்திய அரசு என்ன செய்ய போகிறது என்பதில்தான் பெருத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது!!
உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் தொற்று பாதிப்பும், உயிரிழப்பும் குறைவுதான்.. ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை கவலைக்கிடமான வகையில்தான் எல்லாம் போய்க் கொண்டிருக்கிறது. தமிழகத்தை போலவே பல மாநிலங்களும் வைரஸின் பிடியில் சிக்கி உள்ளன. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை கூடி வருகிறது. இந்த சூழலில் மத்திய அரசு என்னென்ன முடிவுகளை எடுக்க போகிறது என்பது தெரியவில்லை. மத்திய மாநில அரசுசகளை பொறுத்தவரை சில விஷயங்களை செய்ய வேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்:
முதலாவதாக, நிதி விவகாரம்.. இந்த விஷயத்தை பிரதமர் இந்த முறை பேசியே ஆக வேண்டும்.. இதனை அறிவிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.. போதுமான அழுத்தத்தை மாநில அரசு பலமுறை தெரிவித்தும் நிதி இன்னும் வந்து சேரவில்லை.. நடக்கவிருக்கும் முதல்வர்கள் ஆலோசனையிலாவது மாநில அரசுகளின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்க வேண்டி உள்ளது மத்திய அரசின் தலையாய கடமை!”உலக நாடுகள் நம்மை பாராட்டுகின்றன, உலக நாடுகளுக்கு நாம் முன் மாதிரி” என்றெல்லாம் தற்புகழ்ச்சியாக இல்லாமல் இந்தமுறை ஏதாவது ஆக்கப்பூர்வமான அறிவிப்புகள் நிதி குறித்து வெளிவருமா என்பதே நம்முடைய முதல் எதிர்பார்ப்பாக உள்ளது!!
இரண்டாவதாக, கிடங்கில் உள்ள அரிசி, கோதுமைகளை நாடு முழுவதும் உள்ள ஏழை, எளியோருக்கு வழங்கப்பட வேண்டும்.. “மாநில அரசு தரும் 1000 ரூபாய் பணமும், 500 ரூபாய் ரேஷனும் ஒரு நடுத்தர குடும்பத்திற்கு போதாது.. அதனால் 5 ஆயிரம் ரூபாயாவது எல்லா குடும்பங்களுக்கும் வழங்க வேண்டும்” என்று அதிமுக அரசை திமுக தலைமை ஏற்கனவே கேட்டுக் கொண்டது.. இந்த 5 ஆயிரம் ரூபாய் என்பது பெரிய தொகை இல்லைதான்.. ஆனால் மாநில அரசிடம் இப்போதைக்கு நிதி இல்லை.. எனவே அடிப்படை தேவையான அரிசி, கோதுமையை ஏழைகளுக்கும், தொழிலாளர்களுக்கும் மூலை முடுக்குகளில் உள்ள கிராமங்களுக்கும் மத்திய அரசு கொண்டு சேர்க்க வேண்டி உள்ளது. இதை செய்தாலே குறைந்தபட்சம், பசி, பட்டினி இல்லாத ஒரு சூழல் மாநிலங்களில் நிலவும்!!
மூன்றாவதாக, சுங்க கட்டணத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.. ஒரு பழமொழி சொல்வார்களே, “கிடக்கிறது கிடக்கட்டும் கிழவனை தூக்கி மனையில வை”ன்னு.. அந்த மாதிரி உள்ளது உயிர் போகும் அவஸ்தையில் மக்கள் சிக்கி உள்ள நிலையில் டோல்கேட்டில் வசூலில் இறங்கி உள்ளது.. இது அநியாயமான ஒன்று. பாவச் செயலாகும்.. கட்டணம் வசூலித்தால் அத்தியாவசிய பொருட்களின் விலை பெரும்.. அந்த விலை மக்கள் தலையில்தான் வந்து வழக்கம்போல விடியும்.. ஏற்கனவே நொந்து போயுள்ள மக்களால் இந்த டோல்கேட் கட்டணத்தை ஜீரணிக்கவே முடியவில்லை.. மத்திய அரசின் மீது வெறுப்புணர்வு வர இந்த கட்டணமும் ஒரு காரணமாகி வருகிறது என்பதால் இதனை ரத்து செய்வதே சிறப்பானது!!
நான்காவதாக, உயிர்காக்கும் ரேபிட் கிட்-உபகரணங்களுக்குகூட யாராவது ஜிஎஸ்டி போடுவார்களா? ஏழை மக்களுக்கு பரிசோதனைகளை செய்வது அரசின் அடிப்படை கடமைதானே.. ரேபிட் 337+ஜிஎஸ்டி என்று சத்தீஸ்கர் மாநில முதல்வர் அன்று சொல்லும்போதே நாட்டு மக்களுக்கு சுரீர் என்றிருந்தது.. இதுபோன்ற கருவிகளுக்கு ஜிஎஸ்டியே கூடாது.. இதை உடனடியாக நீக்க வேண்டும்.. ஒருவேளை இனிமேல் ஜிஎஸ்டியை மத்திய அரசு ரத்து செய்தாலும், வரி விதித்தது தப்பு தப்புதான்.. எனவே உடனடியாக நீக்க அறிவிப்பு வெளியிட வேண்டும். “யாரையும் வேலையைவிட்டு தூக்கிடாதீங்க.. வாடகையை இப்போதைக்கு வசூல் பண்ணாதீங்க” என்று சொல்லும் இதே அரசு, இன்னொரு பக்கம் இப்படி ஈஎம்ஐ, வங்கி வட்டி, கரண்ட் பில்களில் கரிசனம் இல்லாமல் சுங்கக்கட்டணம், ஜிஎஸ்டி என்று வசூலிப்பது மட்டும் எந்த மாதிரியான நிலைப்பாடு என்று தெரியவில்லை.
ஐந்தாவதாக, தமிழக அரசு, நிதியை பெறுவதற்கான அழுத்தத்தை மேலும் காட்ட வேண்டும்.. கொரோனா தொற்று தடுப்பு விவகாரத்தில் அதிமுக அரசு செய்துவரும் அத்தனை செயல்பாடுகளுமே சபாஷ்தான்.. குறை சொல்ல எதுவுமே இல்லை.. ஆனால் மத்திய அரசிடம் மேலும் காட்டத்தை காட்ட வேண்டி உள்ளது.. “எதிர்க்கட்சிகள் என்ன டாக்டர்களா?” என்று சீறும் ஆவேசம், மத்திய அரசிடம் நிதி வாங்குவதில் காணவில்லை… இதுவே ஜெயலலிதாவாக இருந்திருந்தால், இந்நேரம் டெல்லியை அலற விட்டிருப்பார்.. அவரது ஆவேசத்தாலும், கண்டிப்பு நிறைந்த வார்த்தைகளாலும் நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி நிதி என்றோ தமிழகம் வந்து சேர்ந்திருக்கும்.. இது மிரட்டல் விடுப்பதாக அரசு கருத கூடாது.. உண்மையிலேயே தமிழகத்தின் நிலைமை இப்போது மிகவும் பரிதாபமாக உள்ளது.. எதையுமே சத்தமாக கேட்டால்தான் எடுபடும் என்ற நிலை ஏற்பட்டு விட்டது.. அதனால் தமிழக அரசு, மத்திய அரசிடம் அணுகும் முறையில் சற்று கண்டிப்புடன் கூடிய பிடிவாதம் தேவையாக இருக்கிறது!!
ஆறாவதாக, ஊரடங்கு தளர்வு இல்லை என்பதுதான் இந்த முறையும் முடிவாக இருக்கும்.. அதேபோல ஊரடங்கை நீடிப்பதும் என்பதும் அநேகமாக முடிவாகலாம். அதேசமயம், ஊரடங்கு மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது என்று உலக சுகாதார சொல்லி உள்ளது.. ஊரடங்கு மட்டும் போதுமானதா என்பதுதான் நம்முடைய அடுத்த கேள்வி.. ஊரடங்கு அமலில் உள்ளபோதே சில விஷங்களை தமிழக அரசு செய்தாக வேண்டியதும் அவசியம்.. ஹாட்ஸ்பாட்களை கண்டறிந்து, அந்த பகுதியில் பாதிக்கப்பட்ட, அவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் சோதனைகள் நடத்தி முடிக்க வேண்டும். காரணம், பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் அறிகுறி இல்லாதவர்கள்தான்.. அதனால் டார்கெட் வைத்து டெஸ்ட்டுகளை நடத்தக்கூடாது.. ரேண்டம் டெஸ்தான் ஒன்றுதான் வழி.. அதற்கான நேரமும் நமக்கு வந்தாகிவிட்டது. தமிழகத்தில் ஏழரை கோடி 7 கோடி பேர் இருக்கிறோம் என்றால், குறைந்தது 2 கோடி பேருக்காவது இந்த லாக்டவுன் முடிவதற்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்ற நிலை உள்ளது.. ஒருவேளை இந்த எண்ணிக்கையை தவற விட்டால், அடுத்தக்கட்ட ஊரடங்கை நீட்டித்துதான் மீதமுள்ள பரிசோதனைகளை செய்து முடித்தாக வேண்டும்.
ஏழாவதாக, எதிர்க்கட்சிகளுக்கு என்ன தெரியும் என்று கேட்டு புறம் தள்ளாமல் அவர்களது ஆலோசனையும் ஏற்க வேண்டும்.. ஆலோசனை சொன்னால் ஏற்கிறோம் என்று பேட்டி அளிப்பதைவிட, அனைத்து கட்சி கூட்டத்தை நடத்த முடிவெடுக்க வேண்டும்.. எதிர்க்கட்சிகள் பங்கேற்று ஆலோசனைகளை சொல்லலாம் என்று கூட பகிரங்கமாக அழைப்பு விடுக்கலாம்.. அவர்கள் என்ன டாக்டர்களா என்று கேட்டு ஒதுக்குவது தவறு.. நிதி பற்றின படிப்பே படிக்காமல் 10 வருடமாக நிதியை சிறப்புடன் தாக்கல் செய்து வருகிறார் துணை முதல்வர்.. அதனால் யாருக்குமே எதுவுமே தெரியாது என்ற முடிவுக்கு வராமல், இந்த விஷயத்தில் அனைத்து கட்சிகளுமே ஒன்று சேர்ந்து தமிழகத்துக்கு ஏதுவான சூழலை உருவாக்க வேண்டும்… எனவே பிரமரிடம் ஆலோசிப்பதற்கு முன்பு திமுக மட்டுமில்லாமல் அனைத்து எதிர்க்கட்சிகளின் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் பெற மாநில அரசு முயல வேண்டும்.
இவ்வளவும் செய்தால்தான், கொரோனாவை எதிர்கொள்ள முடியும்.. இத்தனை நாள் ஊரடங்கில் முடங்கி கிடக்கும் மக்களுக்கும் ஏதாவது ஒருவிதத்தில் பலன் கிடைக்கும்.. இவை எல்லாம் நம் பெருத்த எதிர்பார்ப்புகள்.. ஆனால் முதல்வர்கள் – பிரதமர்கள் என்ன பேச போகிறார்கள், அதையொட்டி என்னவிதமான அறிவிப்புகளை வெளியிட போகிறார்கள் என்று தெரியவில்லை.. கவிஞர் கண்ணதாசன் சொன்னது போல, “தெளியும் அறியாது, முடிவும் தெரியாது மயங்குது எதிர்காலம்” என்றுதான் மக்களின் இன்றைய நிலை உள்ளது… நம்பிக்கையுடன் காத்திருப்போம்!!