நாமக்கல்: நாமக்கல்லில் உள்ள தனியார் அசைவ உணவகத்தில் ‘ஷவா்மா’ சாப்பிட்ட பள்ளி மாணவி திங்கள்கிழமை காலை உயிரிழந்தார்.
நாமக்கல்-பரமத்தி சாலையில் உள்ள தனியாா் அசைவ உணவகத்தில் சனிக்கிழமை இரவு ஷவா்மா, பிரியாணி உள்ளிட்ட பல்வேறு அசைவ உணவுகளை சாப்பிட்ட பொதுமக்கள் சிலருக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
இந்த நிலையில் அந்த தனியார் அசைவ உணவகத்தில் சாப்பிட்ட நாமக்கல் ஏ எஸ்.பேட்டையைச் சேர்ந்த தவமணி- சரோஜா தம்பதியின் மகள் கலையரசி (14) என்ற ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு, வாந்தி, பேதி ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டது.
இதையும் படிக்க |மகளிர் உரிமைத் திட்டத்திற்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
இதையடுத்து, கலையரசி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டிற்கு வந்து தூங்கியவர் திங்கள்கிழமை காலை உயிரிழந்தார்.
இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட அசைவ உணவகத்தில் ஆட்சியா், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, அங்கிருந்த ரூ.10 ஆயிரம் மதிப்பிலான அசைவ உணவுகளைக் கைப்பற்றி அழித்தனா். நாமக்கல்லைச் சோ்ந்த உணவக உரிமையாளா் நவீன்குமாரிடம் விளக்கம் கேட்டு உணவு பாதுகாப்புத் துறையினா் நோட்டீஸ் அளித்தனா். பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட உணவுகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதன்பிறகு, சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை ‘சீல்’ வைத்தது குறிப்பிடத்தக்கது.