போடி அருகே போதை ஊசி பயன்படுத்திய 3 வாலிபர்கள் கைது✍️கல்வி நிறுவனங்களுக்கு செல்ல முடியாத மாணவர்கள் இதுபோன்ற போதை மருந்துகளை பயன்படுத்தி வருவதாக, தெரிவித்ததைக் கேட்டு போலீசார் அதிர்ச்சி✍️ இந்த விற்பனைக்கு மூளையாக செயல்படும் நபர்களை போலீசார் வலைவீசி தேடல்✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்
போடி:தேனி மாவட்டம் போடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு போதை ஊசி பயன்படுத்திய கும்பல் சிக்கியது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் கோவை மற்றும் கேரளாவில் இருந்து போதை ஊசிகளை வாங்கி வந்து இங்குள்ள கல்லூரி மாணவர்களை குறி வைத்து விற்று வந்தது தெரிய வந்தது.இதனைத் தொடர்ந்து பலரை போலீசார் கைது செய்து இந்த மருந்துகளை விற்பனை செய்யும் முக்கிய குற்றவாளியை தேடி வந்தனர். இதனால் போதை ஊசி கும்பலின் நடமாட்டம் சற்று குறைந்தது. இந்நிலையில் மீண்டும் போதை ஊசி கும்பல் சிக்கியுள்ளது.போடி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இத்ரீஸ்கான் தலைமையிலான போலீசார் சிலமலை, மயான பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது சந்தேகத்திற்கிடமாக திரிந்த வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்களிடம் தடை செய்யப்பட்ட போதை மருந்து மற்றும் ஊசிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.விசாரணையில் போடி சிலமலை பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த மணிமாறன் மகன் சுஜித்குமார் (25). அதே பகுதியைச் சேர்ந்த சன்னாசி மகன் தங்கதமிழ்வாசன் (23), போடி குலாளர் பாளையம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் மகன் திலீபன்குமார் (23) என தெரிய வந்தது.அவர்களை கைது செய்த போலீசார் இந்த மருந்துகளை யாரிடம் இருந்து வாங்கி வந்தனர் என விசாரித்தனர். ஆனால் முன்னுக்கு பின் முரணான தகவல் தெரிவித்தனர். மேலும் போதை மருந்து பயன்படுத்திய பிரவீன், ராசிங்காபுரத்தைச் சேர்ந்த கார்த்திக், பரத்குமார் ஆகியோரையும் தேடி வருகின்றனர்.கல்லூரி மாணவர்கள் போதை பழக்கத்துக்கு அடிமையாவதை தடுக்க கஞ்சா விற்பனை தடுக்கப்பட்டு வருகிறது. இந்த விற்பனையில் ஈடுபடுபவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். மதுபானம் அருந்தி கல்வி நிறுவனங்களுக்கு செல்ல முடியாத மாணவர்கள் இதுபோன்ற போதை மருந்துகளை பயன்படுத்தி வருவதாக அவர்கள் தெரிவித்ததைக் கேட்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். எனவே இந்த விற்பனைக்கு மூளையாக செயல்படும் நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.