கோவில்பட்டி தீப்பெட்டி தொழிலில் தீ வைக்கும் சீன லைட்டர்! – கவலையில் தொழிலாளர்கள்✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்
கோவில்பட்டி தீப்பெட்டி தொழிலில் தீ வைக்கும் சீன லைட்டர்! – கவலையில் தொழிலாளர்கள்*
‘‘மூலப்பொருள் விலையேற்றம், ஜி.எஸ்.டி வரி விதிப்பு நெருக்கடிகளால் திணறிவந்த தீப்பெட்டித் தொழிலுக்கு, ஒட்டுமொத்தமாகவே உலைவைத்துவிட்டது சீன லைட்டர்களின் வருகை’’ என்று கொதிக்கின்றனர் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள்!
தமிழ்நாட்டில் கோவில்பட்டி, சாத்தூர், சிவகாசி, வெம்பக்கோட்டை, சங்கரன்கோவில், திருவேங்கடம், குடியாத்தம், காவேரிப்பட்டினம் பகுதிகளில் தீப்பெட்டி உற்பத்தி நடைபெற்றுவருகிறது என்றாலும், 80 சதவிகிதத் தீப்பெட்டி உற்பத்தி என்பது கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மட்டுமே நடைபெறுகிறது. இந்தவகையில், 50 முழுநேர இயந்திரத் தீப்பெட்டி ஆலைகள், 320 பகுதி நேர இயந்திரத் தீப்பெட்டி ஆலைகள், 2,000-க்கும் மேற்பட்ட தீப்பெட்டி பேக்கிங் சார்பு ஆலைகள் இங்கு இயங்கிவருகின்றன. நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் ஐந்து லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில், 90 சதவிகிதம் பேர் பெண்கள்.
தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டிகள், இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த நிலையில், ஏற்கெனவே மூலப்பொருள்களின் விலை உயர்வால் பாதிப்புக்குள்ளான தீப்பெட்டித் தொழில், தற்போது சீன லைட்டர்களின் வருகையால் முற்றிலும் அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.
“சீன லைட்டர் இறக்குமதிக்குத் தடை விதிக்க வேண்டும்!”
இது குறித்துப் பேசிய, நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளர் சேது ரத்தினம், “மோடி அரசு பதவியேற்றதும், சிறு தொழில்கள் பட்டியலிலிருந்து தீப்பெட்டித் தொழிலை நீக்கியதுதான் எங்களுக்கு முதல் பாதிப்பு. தீப்பெட்டி உற்பத்திக்கு விதிக்கப்பட்ட 18 சதவிகித ஜி.எஸ்.டி வரி விதிப்பை, 5 சதவிகிதமாகக் குறைக்க வேண்டும் என்று ஐந்து வருடங்களாகப் போராடியும், 12 சதவிகிதமாகத்தான் குறைக்கப்பட்டிருக்கிறது. தீப்பெட்டி உற்பத்திக்குத் தேவையான அட்டை, பேப்பர், மெழுகு, சிவப்பு பாஸ்பரஸ், பொட்டாசியம் குளோரைடு உள்ளிட்ட மூலப்பொருள்களின் விலையும் அதிகரித்தது. எனவே, 14 வருடங்களாக ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்துவந்த தீப்பெட்டியின் விலையை, கடந்த 2021, டிசம்பர் 1-ம் தேதியிலிருந்து இரண்டு ரூபாயாக விலை உயர்த்தினோம். அதற்குப் பிறகும் மூலப்பொருள்களின் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டேயிருக்கிறது. கடந்த மூன்று மாதங்களில் மட்டும் எட்டு முறையாக, மொத்தம் 40 சதவிகிதம் வரைக்கும் விலை அதிகரித்திருக்கிறது. இதனால், 600 தீப்பெட்டிகள்கொண்ட ஒரு பண்டலின் விலையை 300 ரூபாயிலிருந்து 350 ரூபாயாக உயர்த்தினோம். ஆனால், இந்த விலையேற்றத்தை வியாபாரிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால், ஆர்டர்களும் குறைந்துவிட்டன.
`தீப்பெட்டி உற்பத்திக்குத் தேவையான எல்லா மூலப்பொருள்களையும், தமிழக அரசின் சிட்கோ மூலம் மானிய விலையில் தர வேண்டும்’ என்று பல ஆண்டுகளாகக் கோரிக்கைவைத்து வருகிறோம். முந்தைய அ.தி.மு.க அரசும் கண்டுகொள்ளவில்லை. தற்போதைய தி.மு.க அரசும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில், சீனாவிலிருந்து நூற்றுக்க ணக்கான கன்டெய்னர்களில் இறக்குமதி செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக்காலான சிகரெட் லைட்டர்களால், ஒட்டுமொத்தத் தீப்பெட்டி விற்பனையும் சரிந்து கொண்டிருக்கிறது. 20 தீப்பெட்டிகளின் பயன்பாட்டை ஒரு லைட்டர் ஈடுகட்டுகிறது. புகை பிடிப்பவர்கள் மட்டுமல்லாமல், வீட்டு அடுப்படிகளிலும் லைட்டரைப் பயன்படுத்துகிற அளவுக்குச் சூழல் மாறியிருக்கிறது.
இருபது ஆண்டுகளுக்கு முன்னால் பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தீப்பெட்டிகளால், தமிழ்நாட்டில் தீப்பெட்டி உற்பத்தி பாதிக்கப்பட்டது. அப்போதைய முதல்வர் கருணாநிதியிடம் இது குறித்துக் கோரிக்கை மனு கொடுத்தோம். உடனே தமிழ்நாட்டில் பாகிஸ்தான் தீப்பெட்டிக்குத் தடைவிதித்ததோடு, ‘இறக்குமதி செய்ய அனுமதிக்கக் கூடாது’ என்று மத்திய அரசுக்கும் கடிதம் எழுதினார். இப்போது சீன லைட்டர்களால் திரும்பவும் ஆபத்து வந்திருக்கிறது. தமிழகம் மட்டுமல்லாமல், இந்தியா முழுக்க சீன லைட்டர் இறக்குமதிக்குத் தடைவிதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
“இதே நிலைமை நீடிச்சா… நாங்க பட்டினியாத்தான் கிடக்கணும்!”
தீப்பெட்டித் தொழிலில் ஈடுபட்டிருக்கும் பெண்களோ, “கொரொனா காலத்துல வேலை யில்லாம ரொம்பவே பாதிக்கப்பட்டிருந்தோம். நிலைமை கொஞ்சம் சரியாகி, மறுபடியும் தீப்பெட்டி உற்பத்தி ஆரம்பிச்சுடுச்சேன்னு சந்தோஷப்பட்ட நேரத்துல, மூலப்பொருள்கள் விலை ஏறிப்போச்சு, ஆர்டர் குறைஞ்சுபோச்சுன்னு மாசத்துல பாதி நாளுதான் வேலை கொடுக்குறாங்க. இதே நிலைமை நீடிச்சா நாங்க பட்டினியாத்தான் கிடக்கணும்” என்று வேதனை தெரிவிக்கின்றனர்.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழியிடம் இந்த விவகாரம் குறித்துக் கேட்டோம். ‘‘தீப்பெட்டி உற்பத்தித் தொழிலில் பெரும்பாலும் பெண்களே ஈடுபட்டு வருகிறார்கள். எனவே, அந்தத்
தொழில் பாதுகாக்கப்படவேண்டிய ஒன்று. லைட்டர்களின் இறக்குமதியை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் எனத் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள், தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர், அதிகாரி களுடன் ஆலோசித்து அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
ஊரகத் தொழில்துறை அமைச்சரான தா.மோ.அன்பரசன், “தீப்பெட்டி உற்பத்திக்குத் தேவையான மெழுகு உள்ளிட்ட மூலப்பொருள்களை சிட்கோ மூலம் வழங்குவது குறித்து அதிகாரி களுடன் ஆலோசனை மேற்கொண் டதுடன், முதல்வரின் கவனத்துக்கும் இந்தப் பிரச்னையை எடுத்துச் சென்றிருக்கிறேன். எனவே, விரைவில் சிட்கோ மூலம் மூலப்பொருள்கள் வழங்கப்படும்” என்றார் உறுதியாக.
லட்சக்கணக்கான ஏழை, எளிய மக்கள் நம்பியிருக்கும் தீப்பெட்டித் தொழிலை, அழிவுநிலைக்குச் செல்லாமல் பாதுகாக்கவேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை!