தேவேந்திர குல வேளாளர் சமுதாய உட்பிரிவுகளை ஒன்றாக்கி அரசாணை வெளியிடக் கோரி உண்ணாவிரதம்?முழுவிவரம் – விண்மீன்நியூஸ்
தேவேந்திர குல வேளாளர் சமுதாய உட்பிரிவுகளை ஒன்றாக்கி அரசாணை வெளியிடக் கோரி உண்ணாவிரதம்
கோவில்பட்டி மற்றும் கயத்தாறு வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த 6 உட்பிரிவுகளை ஒன்றாக்கி அரசாணை பிறப்பித்திட வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியினர் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேவேந்திர குல சமுதாயத்தைச் சேர்ந்த 6 உட்பிரிவுகளை ஒன்றாக்கி அரசாணைப் பிறப்பிக்க வலியுறுத்தியும், அவர்கள் தற்போது இடம்பெற்றிருக்கக் கூடிய பட்டியல் பிரிவில் இருந்து நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியின் சார்பில் கோவில்பட்டி வள்ளுவர் நகர், தெற்கு திட்டங்குளம், கூசாலிபட்டி ஆகிய இடங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
வள்ளுவர் நகர் சமுதாய நலக் கூடம் அருகே நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு புதிய தமிழகம் கட்சி நகரச் செயலர் ரஞ்சித்பாண்டியன், தெற்கு திட்டங்குளத்தில் ஒன்றியச் செயலர் அதிகுமார், கூசாலிபட்டியில் கிளைச் செயலர் செல்வம் ஆகியோர் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
இதுபோல, கோவில்பட்டியையடுத்த அய்யனேரி, அப்பனேரி, சித்திரம்பட்டி, ஆண்டிப்பட்டி, வடக்குப்பட்டி, புளியங்குளம், சாலைப்புதூர், கங்கன்குளம், ஆலம்பட்டி, இளையரசனேந்தல், கழுகுமலை இந்திரப்பிரதேசம் தெருவில் நகரச் செயலர் நாகராஜ் தலைமையிலும், கடம்பூர் குறுவட்டத்துக்கு உள்பட்ட இளவேளங்கால், ஓணமாகுளம், வானரமுட்டியையடுத்த கல்லூரணி, செட்டிக்குறிச்சி ஊராட்சிக்கு உள்பட்ட வடக்கு கோணார்கோட்டை, தெற்கு கோணார்கோட்டை, கயத்தாறு குறுவட்டத்துக்கு உள்பட்ட கயத்தாறு, புதுக்கோட்டை, தலையால்நடந்தான்குளம், ராஜாபுதுக்குடி, சன்னதுபுதுக்குடி, கலப்பைபட்டி, ஆத்திகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புதிய தமிழகம் கட்சி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.