இந்திய அரசால் தடை செய்யப்பட்ட ஏமன் நாட்டுக்கு சென்று திரும்பிய வாலிபர் சென்னையில் கைது✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்
இந்திய அரசால் தடை செய்யப்பட்ட ஏமன் நாட்டுக்கு சென்று திரும்பிய வாலிபர் சென்னையில் கைது
மீனம்பாக்கம்: இந்திய அரசால் பாதுகாப்பு காரணங்களுக்காக தடை செய்யப்பட்டுள்ள ஏமன் நாட்டிற்கு சென்று குவைத் வழியாக சென்னை திரும்பிய ராமநாதபுரத்தை சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டார். குவைத்தில் இருந்து குவைத் ஏர்லைன்ஸ் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது ராமநாதபுரத்தை சேர்ந்த முனிய செல்வம் (37) என்பவரின் பாஸ்போர்ட்டை அதிகாரிகள் சோதனையிட்டனர். அவர், ‘கடந்த 2021ம் ஆண்டில் டிரைவர் வேலைக்காக சவுதி அரேபியா சென்றுள்ளார். பின்னர், இந்திய அரசால் பாதுகாப்பு காரணங்களுக்காக தடை செய்யப்பட்ட ஏமன் நாட்டிற்கு சென்று சில மாதங்கள் தங்கியிருந்தது’ தெரியவந்தது.
இதையடுத்து அவரை வெளியே விடாமல் குடியுரிமை அதிகாரிகள் நிறுத்தி வைத்து விசாரித்தனர். அப்போது, அவர், ‘ஏமன் தடை செய்யப்பட்ட நாடு என்று எனக்கு தெரியாது. நான் வேலை செய்த சவுதி அரேபியா நிறுவனம் கூறியதால்தான் நான் ஏமன் நாட்டுக்கு சென்றேன்’ என்றார். ஆனாலும் அவரது விளக்கத்தை அதிகாரிகள் ஏற்கவில்லை. இதையடுத்து முனிய செல்வத்தை அதிகாரிகள் கைது செய்து, மேல்நடவடிக்கைக்காக சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைக்கப்பட்டார். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.