கரூர் அருகே லாரி மோதியதால் மொபட்டில் சென்ற பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழப்பு✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
கரூர் அருகே மொபட் மீது லாரி மோதி விபத்து: பள்ளி மாணவி உயிரிழப்பு
கரூர் அருகே லாரி மோதியதால் மொபட்டில் சென்ற பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
கரூர் மாவட்டம் பவித்திரம் பாரதி நகர் காலனியைச் சேர்ந்தவர் ரங்கசாமி. ஆட்டு வியாபாரி. இவர் மகள் ஹர்சனா (14). பவித்திரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்புப் படித்து வந்தார். இவர் இன்று (மே 12ஆம் தேதி) காலை பால் கூட்டுறவுச் சங்கத்தில் பால் ஊற்றிவிட்டு மொபட்டில் வீடு திரும்பியுள்ளார். அப்போது பவித்திரம் புன்னம்சத்திரம் சாலையில் முனியப்பன் கோயில் அருகில் வரும்போது எதிரே வந்த டிப்பர் லாரி அவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ஹர்சனா உயிரிழந்தார்.
விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர் பாலசுப்பிரமணி (26), அப்பகுதியில் உள்ள தனியார் ஹாலோ பிரிக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இதையடுத்து விபத்தை ஏற்படுத்திய லாரியைச் சிறைப்பிடித்து, மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்துத் தகவலறிந்த க.பரமத்தி காவல் ஆய்வாளர் ரமாதேவி, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து மக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.
க.பரமத்தி போலீஸார் மாணவி சடலத்தை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பள்ளி மாணவி லாரி மோதி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.