சட்டமேதை அம்பேத்கர் பிறந்த தினமும் சுவாரஸ்யமான தகவல்களும் – விண்மீன் நியூஸ்
விண்மீண்நியூஸ்:
ஏப்ரல் 14,
வரலாற்றில் இன்று.
சட்ட மேதை அம்பேத்கர் பிறந்த தினம் இன்று.
1891 ஏப்ரல் 14ம் நாள் ராணுவ வீரராய் இருந்த ராம்ஜிக்கும், பீமாபாய்க்கும் மகனாகப் பிறந்தார் அம்பேத்கார்.
தந்தையின் பணிக்காலம் சில வருடங்களிலேயே முடிந்துவிட, இளமை வறுமையை கைகளில் திணித்தது.
ஓய்வூதியத்தின் வெளிச்சத்தில் அவருடைய கல்வி ஆரம்பமானது.
சிறுவயதில் ஆனந்தமாய் விளையாடிய அவர் தன்னுடைய பள்ளிக் காலத்தில் தான், தானும் தன்னுடைய குடும்பமும் மற்றவர்களை விட வித்தியாசமாக நடத்தப்படுவதை அறிந்தார்.
தாழ்த்தப்பட்ட சமூகத்தில் தான் பிறந்திருக்கிறோம் என்பதும், இந்தியாவின் சாதீய அமைப்பு தன்னை இழிவாக நடத்துகிறது என்பதும் சிறுவனுக்கு தெரிந்திருக்கவில்லை.
அம்பேத்கார் என்ற பிராமண ஆசிரியர்,பீமராவின் கல்வி தாகத்தை அறிந்து அவர்மீது மிகுந்த அக்கறைக் கொண்டார். ஆசிரியர் மீது கொண்ட பக்தியால் தனது பெயருடன் அவரது பெயரையும் இணைத்துக் கொண்டார்.
டாக்டர் அம்பேத்கார் மிகச் சிறந்த கல்வியாளராகவும் திகழ்ந்தார். பரோடா மன்னரின் உதவியுடன் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் உயர்கல்வி பயின்றார். தன்னுடைய பதினேழாவது வயதில், பள்ளிப்படிப்பை முடித்த கையோடு ரமாபாயைத் திருமணம் செய்து கொண்டார்.
கல்வியில் மிக அதிக ஆர்வமும் திறமையும் கொண்டிருந்த அம்பேத்கார் 1912ல் இளங்கலைப் பட்டம் பெற்றார். 1915-ல் “பண்டைய இந்தியாவின் வர்த்தகம்’ என்ற ஆய்வுக்கு முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர், “இந்திய லாபப்பங்கு ஒரு வரலாற்றுப் பகுப்பாய்வு’ என்ற ஆய்வுக்கு கொலம்பியா பல்கலைக் கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது. “பிரிட்டிஷ் இந்தியாவில் அரசு நிதியைப் பரவலாக்குதல்’ என்ற ஆய்வுரைக்கு 1921-ல் முதுகலை அறிவியல் பட்டம் பெற்றார். “ரூபாயின் பிரச்சினை’ என்ற ஆய்வுரைக்கு 1923-ல் டிஎஸ்சி பட்டம் பெற்றார்.
பெரிய படிப்புகளை முடித்த கையோடு வெளிநாடுகளில் மிகப் பெரிய பதவிகளில் அமரும் வாய்ப்புகள் அவருக்கு கிடைத்தன. அவற்றை வைத்து அவர் வசதியாக வாழ்ந்திருக்க முடியும். ஆனால் சொந்த தாய்நாட்டில் வசிக்கும் தன் இன மக்களின் உரிமைக்காகவே அவர் வாழத் தீர்மானித்தார். அதனால் பட்டப்படிப்பு முடித்தவுடன் அவர் இந்தியா திரும்பினார். இங்கும் அவருக்கு பல்வேறு வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் அவற்றை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை.
இந்தியா திரும்பியதும் 1924இல் பம்பாய் வழக்கறிஞர் சங்கத்தில் இணைந்தார். பம்பாய் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் பணியாற்றினார். ஆனால் அங்கும் தீண்டாமை கொடுமை நிலவவே செய்தது.
அவர் தன் அழுத்தமான சமுதாயப் பொதுத்தொணடையும் ஆரம்பிக்கின்றார். 1924-மார்ச் 9-ம் நாள் தாமோதர் கூடத்தில் ஒடுக்கப்பட்ட இன மக்களின் நிலையின் மீதான கவனத்தை ஈர்க்க ஓர் பொதுக் கூட்டத்தை ஏற்பாடு செய்து “ஒடுக்கப்பட்டோர் நலக்கழகம்” என்ற அமைப்பை உருவாக்கினார். இவ்வமைப்பு ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி-பொருளாதார-நிலையை உயர்த்தலும் இவ்வகுப்பினரின் பெருந் துன்பங்களையும் வெளிப்படுத்துவதுமே உடனடி வேலையாக அமைந்தது. இக்காலகட்டத்தில் அவருக்கு வழங்கப்பட்ட ஓர் கல்லூரிப் பேராசிரியர் பதவியையும் கோலாப்பூர் அரசின் அமைச்சர் பதவியையும் சமூகத்தொண்டினை தொடர வேண்டுமென்பதற்காக ஏற்க மறுத்துவிட்டார்.
1927-ஏப்ரலில் “பகிஸ்கரிக் பாரத்” என்ற இதழைத் தொடங்கினார். இவ்விதழ் ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களுக்காகவும் குறைகளுக்காகக் குரல் கொடுக்கவும் குறிப்பாக நடக்கவிருக்கும் அரசியல் சட்டச் சீர்திருத்தங்களின் கண்ணோட்டத்திலும் ஆரம்பிக்கப்பட்டது. ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் ஒட்டுமொத்த நிலையை உயர்த்த கல்வியே சிறந்த கருவியென அம்பேத்கார் கருதினார். கல்வியை குறிப்பாக மேல்நிலைக் கல்வியை பெறுவதன் வாயிலாக மட்டுமே சமூக-பொருளாதாரச் சமத்துவம் கைகூடும் என்று அவர் கருதினார்.
1930-ல் லண்டனில் நடைபெற்ற வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்வதற்காகப் புறப்படுகையில், “என் மக்களுக்கு என்ன நியாயமாகக் கிடைக்க வேண்டுமோ, அதற்காகப் போராடுவேன். அதே சமயத்தில் சுயராஜ்யக் கோரிக்கையை முழு மனதுடன் ஆதரிப்பேன்’ என்று கூறிச் சென்றார்.இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் குறித்த பிரச்சினை முக்கியமாக விவாதிக்கப்பட்டது. தாழ்த்தப்பட்டோருக்குத் தனி வாக்குரிமையும், விகிதாசாரப் பிரதிநிதித்துவமும் வழங்கப்பட வேண்டுமென டாக்டர் அம்பேத்கர் வலியுறுத்தினார். இதன் விளைவாக ஒரு தொகுதியில் பொது வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும், அதே தொகுதியில் தாழ்த்தப்பட்ட சமூக வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும் அளிக்கும் “இரட்டை வாக்குரிமை’ தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது. காந்திஜி இதனை எதிர்த்தார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனித் தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி காந்திஜி உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். இதன் விளைவாக 24-9-1931-ல் காந்திஜிக்கும், டாக்டர் அம்பேத்கருக்கும் இடையே “புனா ஒப்பந்தம்’ ஏற
்பட்டது.
காந்திஜியை மதித்த அதே நேரத்தில் அவரது கருத்துக்களில் முரண்படவும் அம்பேத்கார் தயங்கவில்லை. தாழ்த்தப்பட்ட இனத்தவர்களை ஹரிஜன் என்று காந்திஜி அழைத்தார். ஆனால் அந்த பெயரை அம்பேத்கார் வெறுத்தார். “தாழ்த்தப்பட்டவர்கள் கடவுளின் குழந்தைகள் என்றால் மற்றவர்கள் சாத்தானின் குழந்தைகளா” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
சோதனைகளையும் சாதனைகளாக மாற்றியவர் டாக்டர் அம்பேத்கார். வாழ்க்கையில் பல்வேறு வெறுப்பூட்டும் சம்பவங்கள் நடந்த போதும் யாரையும் தனிப்பட்ட முறையில் அவர் எதிரியாகக் கருதவில்லை. வெறும் போராட்டங்கள் மூலம் தனது சமுதாயத்தை முன்னேற்றுவதில் அவருக்கு உடன்பாடில்லை. தாழ்த்தப்பட்டவர்கள் படிப்பின் மூலமே உச்சநிலையை எட்டமுடியும் என்று அவர் உறுதியாக நம்பினார். அதற்கு தானே முன்னுதாரணமாக இருந்தார். அதனால்தான் அப்போது இருந்த பல தலித் இனத் தலைவர்களை விடவும் அம்பேத்கார் பிரபலமாகத் திகழ்ந்தார். அவரை கொள்கை ரீதியாக எதிர்த்தவர்கள்கூட அவருக்கு நண்பர்களாகத் திகழ்ந்தார்கள்.
இந்து மதத்தின் சாதிமுறைகளைக் கடுமையாக எதிர்த்தவர் அம்பேத்கார். ஆனால் இந்து மத புராணங்களையும் தத்துவங்களையும் கரைத்துக் குடித்திருந்தார். அவைதாம் இந்த நாட்டின் அடையாளங்கள் என்றும் கூறினார். அதே போல அவர் ஆரிய – திராவிட இனக் கோட்பாட்டையும் ஏற்கவில்லை. தீண்டாமையால் பாதிக்கப்பட்ட அம்பேத்கார், சாகும் போது இந்துவாக சாக மாட்டேன் என்றார். இந்தியாவில் முஸ்லிம், கிருஸ்துவ மதங்களிலும் சாதிமுறைகள் தொடருகின்றன என்பது அவரது வாதம். அதனால் 1956இல் புத்த மதத்தில் இணைந்தார். அவருடன் லட்சக்கணக்கான மக்களும் இணைந்தார்கள். சுதந்திரத்திற்குப் பிந்தைய புத்த மத வளர்ச்சிக்கு அம்பேத்காரின் இயக்கம் பெரும் காரணமாக அமைந்தது எனலாம்.
அம்பேத்கார் தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவராக மட்டும் திகழவில்லை. அவர் சிறந்த பேச்சாளராகவும், கல்வியாளராகவும், சட்ட மேதையாகவும் திகழ்ந்தார். சுதந்திர இந்தியாவின் அரசியல் நிர்ணய சபையின் தலைவராக சட்டமியற்ற பெரும் பாடுபட்டார். சட்டம் இயற்றும் நேரத்தில் தனது தீர்க்கமான சிந்தனையாலும், தொலைநோக்குப் பார்வையாலும் பல முக்கிய சட்டங்களை உருவாக்கினார். நம் நாட்டின் முதல் சட்ட அமைச்சராக விளங்கினார். 1951இல் “இந்து சட்டத் தொகுப்பு மசோதா” அறிமுகப்படுத்தப்பட்ட போது அதை எதிர்த்து பதவி விலகினார்.
இந்திய குடியரசு கட்சியை நிறுவிய அம்பேத்கார் தனது இறுதி காலத்தில் புத்த மதத்தைப் பிரச்சாரம் செய்வதில் கழித்தார். 1956ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி காலமானார்.
அவரது மறைவு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டுமல்லாது,
இந்திய வரலாற்றுக்கும், புத்துணர்ச்சிக்கும் பெரும் இழப்பாக அமைந்தது.