சென்னையில் 15-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் -எடப்பாடி பழனிசாமி பிரசாரம்
சென்னை:பாராளுமன்ற தேர்தல் அடுத்த வாரம் 19-ந்தேதி நடைபெறுவதையொட்டி ஒவ்வொரு வேட்பாளர்களும் வீதிவீதியாக சென்று பிரசாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக கட்சித் தலைவர்களும் பிரசாரம் செய்து வருகின்றனர்.இந்த தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., பாரதிய ஜனதா, நாம் தமிழர் கட்சி இடையே 4 முனை போட்டி நிலவுகிறது. ஒவ்வொரு கட்சித் தலைவர்களும் கடந்த மாதத்தில் இருந்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலையில் நடைபயிற்சி சென்றும் மாலையில் பொதுக்கூட்டங்களில் பங்கேற்றும் பேசி வருகிறார்.கடந்த மாதம் 25-ந்தேதியில் இருந்து பிரசாரம் செய்து வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாரம் ஒருமுறை சென்னை வந்து செல்கிறார். 12-ந்தேதி வரை வெளியூர் பிரசாரத்தில் இருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற திங்கட்கிழமை முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பிரசாரம் செய்கிறார்.15-ந்தேதி திருவள்ளூர் வடசென்னை, 16-ந்தே காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் (கர சங்கால் மைதானம்), 17-ந்தேதி தென்சென்னை, மத்திய சென்னை தொகுதியில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசுகிறார்.இதே போல் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 24-ந்தேதியில் இருந்தே பிரசாரம் செய்து வருகிறார்.அவர் தனது பிரசாரத்தை திருச்சியில் தொடங்கி ஒவ் வொரு தொகுதி வாரியாக சென்று பேசி வருகிறார். காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து கடந்த 29-ந்தேதி மதுராந்தகம் ஹைவே அருகே நடைபெற்ற பிரமாண்ட கூட்டத்தில் பேசினார். அதன் பிறகு வெளியூர்களுக்கு சென்று பேசி வருகிறார்.வருகிற 15-ந்தேதி காஞ்சிபுரத்தில் வேன் பிரசாரத்தில் ஈடுபடும் எடப்பாடி பழனிசாமி, மாலையில் மத்திய சென்னை, வேட்பாளரை ஆதரித்து புரசைவாக்கம் தானா தெருவில் பேசுகிறார். அதன் பிறகு அன்றிரவு 7 மணியளவில் தென் சென்னை தொகுதிக்கான சைதை சின்னமலை வேளச்சேரி ரோட்டில் பேசுகிறார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், எடப்பாடி பழனிசாமியும் தலைநகர் சென்னையில் பிரசாரம் செய்ய இருப்பதால் அதற்கான ஏற்பாடுகளை இப்போதே கட்சி நிர்வாகிகள் பார்க்க தொடங்கிவிட்டனர்.இதே போல் ஒவ்வொரு கட்சித் தலைவர்களும் இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.