அமைச்சர் எம்.ஆர்.விஜ பாஸ்கரின் ரியல் எஸ்டேட் தொழிலுக்காக கரூரில் பேருந்து நிலையத்தை மாற்றுவதா? செந்தில் பாலாஜி எம்எல்ஏ கேள்வி?
”அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ரியல் எஸ்டேட் தொழிலுக்காக கரூரில் பேருந்து நிலையத்தை மாற்றுவதா?” – திரு. செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ., கேள்வி
கரூர் நகராட்சியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க வலியுறுத்தி, கரூர் மாவட்ட தி.மு.க பொறுப்பாளரும் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது. கரூர் நகரின் மையத்தில் செயல்பட்டுவரும் பேருந்து நிலையம் பொதுமக்களுக்கு போக்குவரத்து நெரிசலை உண்டாக்குவதால், புதிய பேருந்து நிலையம் அமைக்க 2013-ல் முடிவுசெய்யப்பட்டது.
`புதிய பேருந்து நிலையம் அமைக்க கருப்பம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட திருமாநிலையூர் பகுதியில் பேருந்து நிலையம் அமைக்க 2013-ல் கரூர் நகராட்சி அரசாணை வெளியிட்டும், நீதிமன்ற வழக்கு மூலம் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும், கரூர் நகராட்சி நிர்வாகமும் தமிழக அரசும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை’ என்று குற்றம்சாட்டு எழுந்தது.
இதைக் கண்டித்து, காலை தொடங்கிய உண்ணாவிரதப் போராட்டம், மாலை 5 மணியளவில் தி.மு.க மாநில பொதுக்குழு உறுப்பினர் சுப.ராஜகோபால் பழச்சாறுக் கொடுத்து முடித்து வைக்கப்பட்டது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், காங்கிரஸ் மாநில செய்தித் தொடர்பாளரும் கரூர் எம்.பி-யுமான ஜோதிமணி, தி.மு.க-வின் தோழமைக் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
போராட்டத்தின் நிறைவில் பேசிய செந்தில் பாலாஜி, “மக்கள் விரோத அரசு, தமிழ்நாட்டில் செயல்பட்டு வருகிறது. நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் அவமதிக்கும் இந்த அரசை எதிர்த்து, இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. நீதிமன்றம் திருமாநிலையூரில் பேருந்து நிலையம் அமைக்க உத்தரவிட்டும், இதுவரை புதிய பேருந்து நிலையத் திட்டத்தை ஏன் செயல்படுத்தவில்லை?
கரூரில் நாரதகானா சபா அருகே 4 கோடி ரூபாய் மதிப்பில் சமுதாயக்கூடம் கட்டப்பட்டு வருகிறது. 4 ஆண்டுகள் கடந்தும் இதுவரை பணி நிறைவு செய்யாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. 10 நாள்களுக்குள் இந்தப் பணியை முடித்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வராவிட்டால், தி.மு.க கட்சி சார்பில் மக்களை ஒன்றுதிரட்டி, சமுதாயக் கூடத்தின் பணியை முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவோம் என அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு எதிராகப் போராட்டம் நடத்தி எச்சரிக்கை விடுப்போம். கரூர் திருமாநிலையூரில் புதிய பேருந்து நிலையம் அமைய வேண்டும் எனத் தாரணி சரவணன் தொடர்ந்த வழக்கில், ‘அதே இடத்தில் 22 மாதங்களில் கட்டி முடிக்க வேண்டும்’ எனச் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.
ஆனால், இதுவரை நீதிமன்ற உத்தரவை அரசு பின்பற்றவில்லை. நகராட்சி தீர்மானம் போட்ட, நீதிமன்றமே உத்தரவிட்ட திருமாநிலையூரிலேயே புதிய பேருந்து நிலையத்தை உடனே அமைக்க வேண்டும். ஆனால், அங்கே அமைக்கவிடாமல், போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முட்டுக்கட்டை போட்டு வருகிறார்.
கரூர் சுக்காலியூர் அருகே போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சுமார் 120 ஏக்கர் இடம் வாங்கியுள்ளார். அதனால், திருமாநிலையூர் அருகே அமைய வேண்டிய புதிய பேருந்து நிலையத்தை. சுக்காலியூர் பகுதில் மாற்றிக்கொண்டு போய் அமைக்க முயல்கிறார்.
அதன்மூலம், அங்கே தான் வாங்கிப் போட்டிருக்கும் 120 ஏக்கர் நிலத்தின் மதிப்பை உயர்த்தப் பார்க்கிறார். அமைச்சரின் சுயநலத்தை தி.மு.க வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காது. திருமாநிலையூரில் பேருந்து நிலையம் அமைக்கப்படும் வரை, அடுத்தடுத்து அமைச்சருக்கு எதிராக எங்களது போராட்டம் வேறு வேறு வடிவங்களில் தொடரும்” என்று பேசினார்.