ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு தேவையா?கள நிலவரத்தை கவனிக்குமா அரசு?
கட்டுப்பாடுகள் தளர்வு தேவையா : கள நிலவரத்தை கவனிக்குமா அரசு?
சென்னை : ‘கொரோனா’ தொற்று நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலையில், இன்று முதல், ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவது தேவையா என, பொது மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.தமிழகத்தில், மார்ச், 25 முதல், ஊரடங்கு அமலில் உள்ளது.
சில நாட்களாக, வைரஸ் தொற்று உறுதியாகும் நபர்களின் எண்ணிக்கை, குறைந்து வருவதாக, மத்திய, மாநில அரசுகள் தெரிவித்துள்ளன.இந்நிலையில், இன்று முதல், ஊரடங்கில் சில கட்டுப்பாடுகளை தளர்த்த, மத்திய, மாநில அரசுகள் முன்வந்துள்ளன. சில தொழில்கள் மற்றும் தொழில் நிறுவனங்களை நடத்தவும், அரசு அலுவலகங்கள், 33 சதவீத ஊழியர்களுடன் இயங்கவும், அனுமதி தரப்பட்டுள்ளது.
எதிர்மறை விளைவு
போக்குவரத்து அலுவலகங்கள், பத்திரப்பதிவு துறை, கல்வி துறை அலுவலகங்கள், தனியார் நிதி நிறுவனங்கள் இயங்கலாம் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. கட்டட பணிகளை துவங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இதுபோன்ற தளர்வால், பொது மக்கள் மத்தியில், மீண்டும் அச்சம் ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலையில், இந்த நடவடிக்கைகள் தேவையா என, பொது மக்களும், சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்பியுள்ளனர்.’ஆக்கப் பொறுத்தவர்கள், ஆற பொறுக்க வேண்டும்’ என்ற, முதுமொழிக்கு ஏற்ப, ஒரு மாதமாக, ஊரடங்கையும், அது சார்ந்த நடவடிக்கைகளையும் மேற்கொண்டு விட்டு, நிலைமை கட்டுக்குள் வரவேண்டிய நிலையில், திடீரென தளர்த்துவது, எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும் என்கின்றனர்.
சமூக பரவல் அச்சம்
இத்தனை வாரங்களாக, பொது மக்களை வீட்டில் இருக்க வைத்து, நோய் தொற்றை தடுக்க எடுத்த, எல்லா நடவடிக்கையும் வீணாகும் அபாயம் ஏற்படும் என்றும், மக்களும், சமூக ஆர்வலர்களும் கவலை தெரிவிக்கின்றனர்.கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக, அரசு அமைத்துள்ள குழு, களத்தில் உள்ள அலுவலர்கள், பணியாளர்களிடம் ஆய்வு நடத்தியதா என்பது தெரியவில்லை. சமூக பரவல், இதுவரை துவங்காத நிலையில், கட்டுப்பாடுகளை திடீரென தளர்த்துவது, பரவலுக்கு வழி வகுத்து விடுமோ என்ற அச்சம், மக்களுக்கு ஏற்பட்டு உள்ளது.
எந்தவித பயணத் தொடர்பும் இல்லாத, ஒரு சிலரும் பாதிக்கப்பட்டுள்ள தகவல், ஆங்காங்கே வெளிவரத் துவங்கி இருக்கிறது. இது, சமூக தொற்றா என்பது உறுதி செய்யப்படா விட்டாலும், இந்த நேரத்தில் தான், அரசு கவனமாக, கட்டுப்பாடுகளை கையாள வேண்டும்.எனவே, தமிழக அரசு, அதிகார மட்டத்தில் மட்டும் ஆலோசித்து, ‘டெஸ்க் ஒர்க்’ அளவிலான, அவசர முடிவு எடுக்கக் கூடாது. முதல்வர், இ.பி.எஸ்., தன் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் வழியாக, களத்தின் நிலையை சரியாக தெரிந்து, இவ்விவகாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.
எனவே, ஊரடங்கை தளர்த்துவதற்கு பதில், கட்டுப்பாடுகளை அதிகப்படுத்தி, மே, 3 வரை, மக்களை வீடுகளில் இருக்க வைப்பதே, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர உதவும். இவ்வளவு கெடுபிடி இருக்கும் நேரத்திலும், ஊரடங்கை மீறியதாக, தினமும் ஆயிரக்கணக்கில் வாகனங்களை பறிமுதல் செய்யும் நிலைமை தான், மாநிலத்தில் உள்ளது.எனவே, அவரசப்பட்டு எடுக்கும் முடிவுகள், மக்களின் வாழ்க்கையோடு விளையாடுவதாக ஆகி விடும் என, சமூக ஆர்வலர்களும், களப் பணியாளர்களும் எச்சரிக்கின்றனர்.