கோவில்சிலைகள் மோடியிடம் ஒப்படைக்கப்படுகிறது? பொன் மாணிக்கவேலுக்கு வெற்றி?
பாண்டியர்கால சிலைகள் மோடியிடம் ஒப்படைக்கபடுகிறது..! பொன்மாணிக்க வேல்.
தமிழகத்தில் இருந்து ஆஸ்திரேலியாவிற்கு கடத்தப்பட்ட இரு துவாரபாலகர் சிலைகள் வருகிற ஜனவரி மாதம் இந்திய பிரதமர் மோடியிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேலின் தொடர் முயற்சியின் காரணமாக சிலைகள் மீண்டும் கோயிலுக்கே திரும்பி வர உள்ளது குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அடுத்த திருப்புடைமருதூரில் 600 ஆண்டுகளுக்கு முந்தைய பாண்டிய மன்னர்கள் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பழமையான மூன்றீசுவரமுடையார் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் கடந்த 1995 ஆம் ஆண்டு நான்கரை அடி உயரமுள்ள இரு துவார பாலகர்கள் கல்சிலைகளும் பெயர்த்து எடுத்து திருடப்பட்டது. இந்தவழக்கில் துப்பு துலக்க இயலாமல் வீரவ நல்லூர் போலீசார் கைவிட்ட நிலையில் பொன் மாணிக்கவேல் சிலைகடத்தல் தடுப்பு பிரிவு டிஐஜியாக பொறுப்பேற்ற பின்னர் மறு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
பிரபல கல்சிலை கடத்தல் மன்னன் லட்சுமி நரசிம்மன் தூண்டுதலின் பேரில் சங்சீவ் அசோகன் மூலமாக சிலையை திருடி கார் மூலம் மும்பைக்கு கொண்டு சென்று இந்தோ நேபாள் ஆர்ட் கேலரியின் வல்லப பிரகாஷிடம் ஒப்படைத்துள்ளனர். அதனை கப்பல் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு 4 கோடியே 98 லட்சம் ரூபாய்க்கு விற்றுள்ளதை கண்டுபிடித்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
திருட்டு சிலைகளை காட்சிக்கு வைத்திருப்பது குற்றம் என்று தகுந்த ஆதாரங்களோடு பொன்மாணிக்க வேல், ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்துக்கு கடிதம் எழுதியை தொடர்ந்து சிலைகளை எடுத்து செல்ல அவர்கள் ஒப்புக் கொண்டனர். ஆனால் தமிழக காவல்துறை உயர் அதிகாரிகள் பொன்மாணிக்க வேலுக்கு தகுந்த ஒத்துழைப்பு வழங்காமல் இழுத்தடித்ததாக கூறப்படுகின்றது.
தொல்பொருள் துறையினரும் இதனை கண்டு கொள்ளாமல் இருந்த நிலையில் இந்திய வெளியுறவுதுறை அமைச்சகத்திற்கு இது தொடர்பாக பொன் மாணிக்க வேல் கடைதம் எழுதி உள்ளார்.
அவர்கள் ஆஸ்தேரிலிய தூதரக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் பொன்மாணிக்க வேலுவின் தொடர் முயற்சிக்கு வெற்றி கிடைத்தது. அதன்படி தமிழகத்தில் இருந்து திருடி ஆஸ்திரேலியாவுக்கு கடத்தப்பட்ட பழமையான அந்த இரு துவார பாலகர் சிலைகளையும் ஆஸ்திரேலிய பிரதமர் முறைப்படி பாரத பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒப்படைக்க இருப்பதாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வருகிற ஜனவரி மாதம் முதல் வாரத்தில் இருந்த இரு சிலைகளும் பிரதமர் மோடியிடம் ஒப்படைக்கப்படும் என்று அதன் பின்னர் அவை தமிழகம் அனுப்பி வைக்கப்படும். அதனை தொடர்ந்து இரு சிலைகளையும் மூன்றீசுவரமுடையார் கோவிலுக்கு கொண்டு செல்லப்படும் என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்மாணிக்க வேல் தெரிவித்தார்.
அத்தோடில்லாமல் ஆஸ்திரேலியா அருங்காட்சியகத்தில் உள்ள ஆறுமுகர் கல்சிலை, கலை வேலைபாடுகள் மிக்க நந்தி கல் சிலை, வேலில் காளி இருக்கும் உலோக சிலை, நடனமாடும் நிலையில் உள்ள குழந்தை சம்பந்தர் சிலை, தேவயானை சிலை ஆகியவற்றையும் அடுத்தடுத்து மீட்டு கொண்டு வர இருப்பதாக தெரிவித்த பொன் மாணிக்கவேல், இதே போல சிங்கப்பூரில் இருந்து 16 சாமி சிலைகளை மீட்டு கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொண்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.
தமிழர்களின் இறைபக்தியை உலகிற்கு சொல்லும், பாரம்பரியமும் பழமையும் மிக்க பொக்கிஷமான சாமி சிலைகளை மீட்டு கொண்டு வரும் பொன் மாணிக்க வேலுவின் பணியை நீட்டிக்க வேண்டும் என்பதே சிவனடியார்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.