மகாராஷ்ராவில் அரங்கேறிய மகாபாரதம்.
மும்பை: சிவசேனாவின் பதவி மோகத்தால், மகாராஷ்டிராவில், ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்துள்ளது. மாநிலம் உருவான, 59 ஆண்டுகளில் மூன்றாவது முறையாக, ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில், பா.ஜ., – சிவசேனா இடையே, 30 ஆண்டுகளாக கூட்டணி நீடித்தது. சிறுசிறு பூசல்கள் நிலவினாலும், இரு கட்சிகளும், ‘சகோதர அணிகளாக’ செயல்பட்டு வந்தன. இம்முறை இணைந்தே தேர்தலை சந்தித்து, அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தும், சிவசேனாவின் முதல்வர் பதவி மோகத்தால், கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாமல், இரு கட்சிகளும் ஆட்சி அமைக்க முடியவில்லை. மகாராஷ்டிரா மாநிலம், 1960ம் ஆண்டு மே முதல் தேதி உருவாக்கப்பட்டது. இங்கு இதுவரை மூன்று முறை ஜனாதிபதி ஆட்சிக்கு அமலுக்கு வந்துள்ளது.
பவாரை பழிவாங்கிய இந்திரா
கடந்த, 1978ம் ஆண்டு, காங்கிரஸ் முதல்வராக இருந்த வசந்ததாதா படேல் அரசை கவிழ்த்து, அமைச்சராக இருந்த அதிருப்தியாளர் சரத் பவார் முதல்வரானார். 1980ம் ஆண்டு, சரத் பவார் தலைமையிலான முற்போக்கு ஜனநாயக முன்னணி அரசை, அப்போதைய பிரதமர் இந்திரா, அரசியல் காரணங்களுக்காக கலைத்தார்.தொடர்ந்து, முதல் முறையாக அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. பின்னர் நடந்த சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து, அந்துலே முதல்வரானார்.
பவாரின் பதவி மோகம்
கடந்த, 2014ம் ஆண்டு, 34 ஆண்டுகளுக்குப் பின், இரண்டாவது முறையாக ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்தது. காங்கிரஸ் முதல்வராக இருந்த பிருத்விராஜ் சவான் அரசுக்கு கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸ், 2014 செப்., 28ல் ஆதரவை வாபஸ் பெற்றது. இதுவும் பதவி மோகத்தால் நடந்த மோதல் தான்.தேர்தலில் சம அளவில் தொகுதி பங்கீடு கேட்ட, தேசியவாத காங்கிரஸ் முதல்வர் பதவியையும் தங்களுக்கு தர வேண்டும் என, முரண்டு பிடித்தது. இதற்கு காங்கிரஸ் உடன்படாத காரணத்தால், கூட்டணியில் இருந்து தேசியவாத காங்கிரஸ் விலகியது. முதல்வர் பிருதிவிராஜ் சவான் பதவி விலகியதால், ஜனாதிபதி ஆட்சியின் கீழ் சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டது. பா.ஜ., கூட்டணி கட்சியான சிவசேனாவும், தொகுதி உடன்பாட்டில் திருப்தி ஏற்படாமல், தனித்து போட்டியிட்டது. நான்கு முனைப் போட்டியில், பா.ஜ., வென்று தேவேந்திர பட்னவிஸ் முதல்வரானார். பின்னர், பா.ஜ., அமைச்சரவையில் சிவசேனாவும் சேர்ந்து கொண்டது.
உத்தவ் புத்திர பாசம்
தற்போது, மூன்றாவது முறையாக, மகாராஷ்டிராவில், அரசியல் கட்சிகளின் அதிகார மோகம் காரணமாக, அரசியல் அமைப்பின், 356வது பிரிவு பயன்படுத்தப்பட்டு, ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. மகாபாரதத்தில், திருதராஷ்டிரரின் புத்திர பாசத்தால், மகாபாரதப் போர் ஏற்பட்டது. அதேபோல், மகன் ஆதித்ய தாக்கரேவை முதல்வராக்க வேண்டும் என்ற உத்தவ் தாக்கரேவின் பிடிவாதத்தால், சகோதர கட்சிகள் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இங்கு யாரும் ஆட்சியமைக்க முடியாமல், ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்துள்ளது.