பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடையை மூடிவிட்டு கள்ளுக்கடை திறக்கப்படும்- அண்ணாமலை சூளுரை
செஞ்சி, டிச.17-பா.ஜ.க.வின் என் மண், என் மக்கள் நடை பயணம் செஞ்சியில் நேற்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு செஞ்சி பேரூராட்சியில் இருந்து திருவண்ணாமலை சாலையில் உள்ள இந்தியன் வங்கி வரை நடைபயணம் மேற்கொண்டார்.அவருக்கு வழிநெடுகிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஏராளமானவர்கள் தங்கள் குறைகளை மனுக்களாக கொடுத்தனர். செஞ்சி கூட்ரோட்டில் அண்ணாமலைக்கு கிரேன் மூலம் ஆள் உயர மாலை அணிவிக்கப்பட்டது.தொடர்ந்து திருவண்ணாமலை சாலையில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேசினார். அவர் பேசியதாவது;-தமிழகத்தில் இருக்கக்கூடிய அம்மன் தலங்களில் எல்லாம் மிகவும் பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி குடிகொண்டுள்ள ஊருக்கு நாங்கள் வந்திருக்கிறோம். 122-வது தொகுதியாக செஞ்சிக்கு வந்திருக்கிறோம். மற்ற இடங்களில் பார்த்த அதே எழுச்சி செஞ்சியில் இருப்பதை உணர்கிறோம். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் மறுபடியும் மூன்றாவது முறையாகவும், தமிழகத்தில் 2026-ல் பா.ஜ.க.வும் முதன் முறையாக வரவேண்டும் என்று நினைக்கக்கூடிய உங்களுடைய உத்வேகம் புரிகிறது. பிரசித்தி பெற்ற செஞ்சிக்கோட்டை 830 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டது. இன்றும் சிறிய சேதம் கூட இல்லாமல் முழுமையாக இருக்கக்கூடிய கோட்டையாகும்.ராஜா தேசிங்குவின் படைத்தளபதியாக இருந்த மகமத்கான், அண்ணன் தம்பிகளாக வாழ்ந்த இந்த ஊர், இந்து, முஸ்லிம் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக இருந்ததாகும். ஆனால் இன்றைக்கு மனிதர்களை மதத்தால் பிளவு படுத்தி அதை வைத்து அரசியல் லாபம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.தி.மு.க. என்றால் குறுநில மன்னர் ஆட்சி என்பதை விட ஒரு படி மேலே போய் அமைச்சர் செஞ்சி மஸ்தான் குடும்ப அரசியல் செய்து கொண்டிருக்கிறார். பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்தால் கட்டாயமாக டாஸ்மாக் கடை மூடப்படும். அதற்கு பதில் கள்ளுக்கடை திறக்கப்படும். பனை மரத்தையும், தென்னை மரத்தையும் அதில் வரக்கூடிய பொருட்களை முழுமையாக பயன்படுத்தினால் ஒரு லட்சம் கோடி ரூபாய் தமிழக அரசுக்கு வருமானம் வரும்.இந்த தொகுதியில் 2021-ல் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றினார்களா? செஞ்சி கோட்டை சுற்றுலா மையமாக அறிவிக்கப்படும். அனந்தபுரத்தில் அரசு பணிமனை அமைக்கப்படும். நந்தன் கால்வாய் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும். மேல் களவாய் தரைப்பாலம், மேம்பாலமாக மாற்றி அமைக்கப்படும். வேளாண் கல்லூரி அமைக்கப்படும் போன்ற பல்வேறு வாக்குறுதிகளில் ஒன்று கூட நிறைவேற்றப்படவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் செஞ்சிக் கோட்டை முழுமையான சுற்றுலா தலமாக மாற்றி அமைக்கப்படும். நந்தன் கால்வாய் திட்டம் முழுமையாக செயல்படுத்தி கொடுக்கப்படும்.எனவே வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் இந்தியாவில் 400 இடங்களில் வெற்றி பெற போகும் மோடிக்கு, நீங்கள் 39-க்கு 39 எம்.பி.க்களை தமிழ்நாட்டில் கொடுக்க வேண்டும். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.