முதல்வர் எடப்பாடியாரை சந்திக்க விரையும் பாத்திமாவின் பெற்றோர் ?மாலையில் சந்திப்பு?
முதல்வர் எடப்பாடியாரை சந்திக்க விரையும் பாத்திமாவின் பெற்றோர்.. மாலையில் சந்திப்பு.
சென்னை: “நம்பிதானே தமிழ்நாட்டுக்கு அனுப்பினோம்.. இப்படி ஆயிடுச்சே” என்று கண்ணீர் மல்க தெரிவித்த, ஐஐடி மாணவி பாத்திமாவின் பெற்றோர், இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனது மகளின் மரணம் குறித்து நியாயமான விசாரணை நடக்க வேண்டும் என்று பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப் கோரிக்கை விடுத்தார்.
ஐஐடி பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் உட்பட 3 பேராசிரியர்கள் கொடுத்த நெருக்கடியே தற்கொலைக்கு காரணம் என்றும், நடவடிக்கை தேவை என்றும், கேரள முதல்வர் நேரில் சந்தித்து புகார் மனு அளித்தார். அந்த மனுவை கேரள முதல்வர் பினராயி விஜயன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பி வைத்தார்.
கமிஷனர் விஸ்வநாதன்
பின்னர், எடப்பாடியாரும், பாத்திமாவின் தற்கொலை விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிட்டதையடுத்து, சென்னை மாநகர கமிஷனர் விஸ்வநாதனே இந்த விவகாரத்தில் நேரடியாக இறங்கினார்.. பாத்திமா தற்கொலை செய்து கொண்ட வழக்கு விசாரணையை மத்திய குற்றவியல் பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது.. தற்கொலைக்கு காரணமாக சொல்லப்பட்டவர்கள், விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு வருகிறார்கள்.
சந்திக்க முடிவு
இதனிடையே, பாத்திமாவின் பெற்றோர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளனர். இன்று மதியம் அவர்கள் விமானம் மூலம் சென்னை வர உள்ளனர். பின்னர், நேரடியாக தலைமைச் செயலகம் சென்று முதல்வரையும் சந்திக்க உள்ளதாகவும், அதற்கான அனுமதியையும் பெற்றிருப்பதாகவும் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோரிக்கை
அப்போது மாணவி பாத்திமா தற்கொலை செய்துகொண்டதில் தொடர்புடையவர்களுக்கு தண்டனை வழங்க கோரிக்கை விடுக்கப்படும் என்றும் தெரிகிறது. அதன் தொடர்ச்சியாக காவல்துறை டிஜிபி மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையரை சந்திப்பதற்கான திட்டமும் இருப்பதாக அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள் .
நீதி கிடைக்கும்
“தமிழ்நாடு பாதுகாப்பா இருக்கும்னு நினைச்சுதான் மகளை அனுப்பி வெச்சோம்.. கடைசியில இப்படி ஆயிடுச்சே” என்று பாத்திமாவின் அம்மா கண்ணீருடன் தெரிவித்திருந்தது பொதுமக்களுக்கு கலக்கத்தை தந்திருந்தது. இந்தநிலையில், தமிழக முதல்வரை மாணவியின் பெற்றோர் சந்தித்து மனு அளிக்க உள்ளது, பாத்திமாவின் மரணத்துக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் என்றே நம்பப்படுகிறது.