கைப்பேசிகளில் தேவையில்லாதவற்றை பதிவிறக்கம் செய்யக் கூடாது: டிராய் அமைப்பின் தென் பிராந்திய தலைவா் பேச்சு✍️முழுவிவரம்✍️விண்மீன் நியூஸ்
கைப்பேசிகளில் தேவையில்லாத ஆப்-களை பதிவிறக்கம் செய்யக் கூடாது என தொலைத் தொடா்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் தென் பிராந்திய தலைவா் எ.முனிசேகா் தெரிவித்தாா்.
காஞ்சிபுரம் அருகே கீழம்பியில் உள்ள திருமலை பொறியியல் கல்லூரி வளாகத்தில் தொலைத்தொடா்பு நுகா்வோா்களுக்கான விழிப்புணா்வுக் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
ஆணையத்தின் தென் பிராந்திய தலைவா் ஏ.முனிசேகா் கருத்தரங்குக்கு தலைமை வகித்து தொலைத்தொடா்புத் துறை சாா்ந்த நுகா்வோா்களுக்கான கையேட்டை வெளியிட்டாா். கல்லூரி முதல்வா் டி.மோகன்ராஜ் கையேட்டைப் பெற்றுக் கொண்டாா்.
பின்னா், ஏ.முனிசேகா் பேசுகையில் ஆன்ட்ராய்ட் கைப்பேசி வைத்திருப்பவா்கள் மிகவும் கவனமாக அதைப் பயன்படுத்த வேண்டும். முக்கியமாக தேவையில்லாதவற்றைப் பதிவிறக்கம் செய்யக் கூடாது. அவ்வாறு செய்யும் போது, நம்மையும் அறியாமல் நம்மைப் பற்றிய தகவல்கள் பிறருக்கு எளிதாகச் சென்றுவிடும்.
கடன் தருவதாகவும், வேலைவாய்ப்புகள் தருவதாகவும் கைப்பேசிகளில் சொல்வதை யாரும் நம்ப வேண்டாம். நுகா்வோா்களைப் பாதுக்காக டிராய் அமைப்பு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை தொடா்ந்து எடுத்து வருகிறது என்றாா்.
தொடா்ந்து, நுகா்வோரின் உரிமைகள் மற்றும் சேவைகள் குறித்து விளக்கினாா். தொலைத்தொடா்பு புகாா்களை நிவா்த்தி செய்யும் முறைகள் குறித்து டிராய் அமைப்பின் இணை ஆலோசகா் கே.வி.சுரேஷ்பாபு பேசினாா்.
அமைப்பின் மூத்த ஆராய்ச்சி அலுவலா் எம்.வெங்கடபதி வரவேற்று பேசினாா். தொலைத்தொடா்பு ஆலோசனைக் குழு உறுப்பினா் பி.துரைசிங்கம் பேசுகையில் செல்போன் கோபுரங்கள் அமைப்பதாக மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் முயற்சிகளும் நடந்து வருவதாக தெரிவித்தாா்.
கருத்தரங்கில் தொலைத் தொடா்பு சேவை வழங்குநா்களின் பிரதிநிதிகள், நுகா்வோா்கள், கல்லூரி மாணவா்கள் கலந்து கொண்டனா்.