பில்லி சூனிய செய்வினை மூடநம்பிக்கையால் கொலை✍️வயதாகியும் நடக்காத திருமணம்; செய்வினைதான் என நினைத்து மூதாட்டியை கொலை செய்த நபர் கைது✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்
செய்வினை வைத்ததால்தான் தனக்கு 45 வயதாகியும் திருமணம் ஆகவில்லை என நினைத்து மூதாட்டியைக் கொலை செய்தவரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம், கோபி அருகே ஒத்தக்குதிரை, கே.மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் 88 வயதான சரஸ்வதி. இவருக்கு 70 வயதில் சுகுமார் என்ற மகனும், 68 வயதில் ராதா என்ற மகளும் உள்ளனர். சுகுமார் கோபி அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி ஓய்வு பெற்ற பின்னர் சென்னையில் வசித்து வருகிறார். கணவர் இறந்ததால் சரஸ்வதி தனது சொந்த ஊரானா கோபியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், அவர் அதிகாலை வழக்கம்போல் எழுந்து வீட்டு வாசலில் கோலமிட்டு கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு மறைந்திருந்த மர்ம நபர் சரஸ்வதியை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடியுள்ளார். இவரின் அலறல் சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது சரஸ்வதி ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் சரஸ்வதியை மீட்டு கோபியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிக்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து, அவரது உடலை வீட்டிற்கு கொண்டு வந்து அவரது உறவினர்கள் இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தனர். தகவலறிந்த கோபி போலீஸார் சரஸ்வதியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.பின்னர், இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சரஸ்வதியை கொலை செய்தது அதே பகுதியைச் சேர்ந்த 45 வயதான பாலுசாமி என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இதனை அறிந்த பாலுசாமி கோபி காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
விசாரணையில், சரஸ்வதி அதே பகுதியில் கோயில் கட்டி பஜனை மற்றும் வழிபாடு நடத்தி வந்துள்ளார். சரஸ்வதி செய்வினை வைத்ததால்தான் தனக்கு 45 வயதாகியும் திருமணம் நடக்கவில்லை என்று பாலுசாமி நினைத்துள்ளார். அந்த ஆத்திரத்தில் இருந்த அவர் சரஸ்வதியை வெட்டிக் கொன்றது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் பாலுசாமியை கைது செய்தனர்.