அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் பணிகள் 50 சதவீதம் நிறைவு ✍️பக்தர்களின் தரிசனத்திற்காக 2024 ஜன., மாதம் மகர சங்கராந்தி முதல் திறக்கப்படும் என அறிவிப்பு✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்
அயோத்தி: அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் பணிகள் 50 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. பக்தர்களின் தரிசனத்திற்காக 2024 ஜன., மாதம் மகர சங்கராந்தி முதல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2020 ஆக.,5ல் ராமர் கோயில் கட்டுமானத்தை பூமி பூஜையுடன் பிரதமர் மோடி துவக்கி வைத்தார். அதன் பிறகு கோயில் கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம்(அக்.,23) அயோத்தி சென்ற பிரதமர் மோடி கட்டுமான பணிகளை நேரில் ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து, கோயில் கட்டுமான பணிகளை பார்வையிட பத்திரிகையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில், கோயில் கட்டுமானம் தொடர்பாக ஸ்ரீராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா டிரஸ்ட் பொது செயலாளர் சம்பத் ராய் கூறுகையில், ராமர் கோயில் கட்டுமான பணிகள் 50 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. அடுத்தாண்டு டிச., மாதத்திற்குள் கோயிலின் தரைதள பணிகள் நிறைவு பெற்றுவிடும். 2024 ஜன.,14க்குள் கடவுள் ராமர் சிலை நிறுவப்படும்.
தொடர்ந்து பக்தர்களின் தரிசனத்திற்காக கோயில் திறக்கப்படும். கோயில் கட்டுமானத்திற்காக ரூ.1,800 கோடி செலவு செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.