ஆயுர்வேதம் மற்றும் ஹோமியோபதி – இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் தெரியுமா உங்களுக்கு?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
ஆயுர்வேதம் மற்றும் ஹோமியோபதி – இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் தெரியுமா உங்களுக்கு?
ஆங்கில மருத்துவம் ஆதிக்கம் செலுத்தி வரும் இந்த காலக்கட்டத்தில், மாற்று மருத்துவ முறைகளும் படிபடியாக வளர்ந்து, அதற்கான முக்கியத்துவத்தை பெற்று வருகின்றன என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில், ஆயுர்வேதம் மற்றும் ஹோமியோபதி, ஆகிய இரண்டு மருத்துவ முறைகளும் உலக அளவில் மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
பொதுவாகவே, தேர்வு செய்வதற்கு பல காரணிகள் இருந்தால், அவற்றில் எதை தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் பலரிடம் உள்ளது. எந்த மாற்று மருத்துவம் சிறந்தது, எது நல்ல பலனளிக்கும் என்பதையெல்லாம் கூற வரவில்லை. குழப்பமாக இருக்கும் உங்களுக்கு இரண்டை பற்றியும் சற்று விவரிப்பதற்காக தான் இந்த கட்டுரை பதிவிடப்பட்டுள்ளது. இதை படித்து தெரிந்து கொண்டால், எதை பின்பற்றலாம் என்பதற்கான ஒரு விடை கிடைக்கும்.
ஆயுர்வேதம்-ஹோமியோபதி ஒற்றுமைகள்:
உலகிலேயே மிகவும் பழமையான மருத்துவ முறை என்றால், அது ஆயுர்வேதம் தான். ஏனென்றால், சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இது பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், ஹோமியோபதியோ, 1790ஆம் ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டு மருத்துவ முறைகளும் பிரச்சனைக்கான காரணத்தை கண்டுபிடித்து, அதனை வேரிலிருந்தே சரி செய்து, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தக் கூடியவை. ஆனால், இவை இரண்டுமே பிரச்சனையை சரிசெய்ய சிறிது காலங்கள் எடுத்துக் கொள்ளும். அதுமட்டுமல்லாது, பிரச்சனைக்கு நிச்சய தீர்வை வழங்கிடும் என்ற உத்திரவாதமும் தந்துவிட முடியாது. எனவே, இவற்றில் எவற்றை தேர்ந்தெடுப்பதாக இருந்தாலும், அதற்கு முன்னதாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவது அவசியம்.
இரண்டிற்கும் பல்வேறு ஒற்றுமைகள் இருந்தாலும், அவற்றிற்கிடையே சில வித்தியாசங்களும் இருக்கின்றன. வாருங்கள் அவற்றையும் தெரிந்து கொள்வோம்…
ஹோமியோபதி என்றால் என்ன?
இந்த மருத்துவ முறை 1700ஆம் ஆண்டுகளில் ஜெர்மனியில் உருவாக்கப்பட்டது. இந்த மருத்துவ முறையின் அடிப்படை நம்பிக்கையானது, நமது உடலே இதனை சரிசெய்து கொள்ளும் என்பது தான். ஒரு ஹோமியோபதி மருத்துவரானவர், தன்னிடம் வரும் நோயாளிகளின் வாழ்க்கை வரலாறு மற்றும் மருத்துவ நிலைகள் குறித்து தெரிந்து கொண்டு, அதற்கேற்ப தான் மருத்துவத்தை துவங்குவார். ஹோமியோபதி மருந்துகள் இயற்கை பொருட்களால் தயாரிக்கப்படுபவை. அதுமட்டுமல்லாது, இந்த வகை மருத்துவத்தில் எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படாது என்று நம்பப்படுகிறது.
எத்தகைய நோய்களுக்கு ஹோமியோபதி சிறந்தது
பொதுவாகவே, ஹோமியோபதி மருத்துவத்தை, அழற்சி, ஒற்றைத் தலைவலி, மன அழுத்தம், நாள்பட்ட உடற்சோர்வு, வாத பிரச்சனைகள், எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி மற்றும் மாதவிடாய் முன் நோய்க்குறி போன்றவற்றிற்கு அணுகுகின்றனர். ஆனால், உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய இதய நோய்கள், புற்றுநோய் போன்றவற்றிற்கு ஹோமியோபதியை யாரும் பரிந்துரைப்பது கிடையாது.
ஆயுர்வேதம் என்றால் என்ன?
உலகிலேயே மிகவும் பழமையான மருத்துவ முறையான ஆயுர்வேத மருத்துவம் 5000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது. வெப்எம்டி-ன் படி, இது உலகில் உள்ள அனைத்துமே (இறந்த அல்லது உயிருடன்) வான், காற்று, நெருப்பு, நீர் மற்றும் பூமி ஆகிய ஐந்து கூறுகளால் இணைக்கப்பட்டுள்ளது என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தான் ஆயுர்வேத மருத்துவம் அமைந்துள்ளது. இது மனம், உடல் மற்றும் ஆவி இடையே ஒரு சமநிலையை பராமரிப்பதாகும். இந்த நடைமுறையின் முக்கிய நோக்கம் நல்ல ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகும்.
ஆயுர்வேதத்தின் அடிப்படை நோக்கம்
ஆயுர்வேத மருத்துவத்தின் அடிப்படை, உடலுக்கு கேடு விளைவிக்கக் கூடிய, செரிக்காத உணவுகளை உடலில் இருந்து அகற்றி சுத்தப்படுத்துவது தான். அறிகுறிகளைக் குறைக்கவும், நல்லிணக்கத்தையும் சமநிலையையும் மீட்டெடுக்க பயிற்சியாளர்கள் ‘பஞ்சகர்மா’ பயன்படுத்துகிறார்கள். ஆயுர்வேத சிகிச்சையில் மசாஜ், மருத்துவ எண்ணெய்கள், மூலிகைகள் மற்றும் மருந்துகள் ஆகியவை அடங்கும்.