அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா ஆகஸ்டு 5-ந் தேதி நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.
சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்ததை தொடர்ந்து, உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக மத்திய அரசு அமைத்த ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திரா அறக்கட்டளை கோவில் கட்டுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
5 கோபுரங்களுடன் 161 அடி உயரத்தில் பிரமாண்டமாக கோவில் கட்டப்படுகிறது. 3½ ஆண்டுகளில் கோவிலை கட்டி முடிக்கு தீர்மானிக்கப்பட்டு உள்ளது.
கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவை நடத்த முடிவு செய்த அறக்கட்டளை உறுப்பினர்கள், அதில் கலந்து கொள்ளுமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தனர். இதைத்தொடர்ந்து, மோடி கலந்து கொள்வதற்கு வசதியாக ஆகஸ்டு 3-ந் தேதி அல்லது 5-ந் தேதி அடிக்கல் நாட்டு விழாவை நடத்துமாறு பிரதமர் அலுவலகம் கேட்டுக் கொண்டது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் நடைபெற்ற அறக்கட்டளை உறுப்பினர்கள் கூட்டத்துக்கு பின் நிருபர்களிடம் பேசிய பொதுச் செயலாளர் சம்பத் ராய், ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா ஆகஸ்டு 3-ந் தேதி அல்லது 5-ந் தேதி நடைபெறும் என்றும், பிரதமர் மோடி கலந்து கொள்வதற்கு வசதியாக இதில் ஒரு தேதி முடிவு செய்யப்படும் என்றும் கூறினார்.
இதைத்தொடர்ந்து, ஆகஸ்டு 5-ந் தேதி அடிக்கல் நாட்டு விழாவை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டு இருப்பதாக நேற்று அயோத்தியில் அறக்கட்டளை வட்டாரங்கள் தெரிவித்தன. அதன்படி, 5-ந் தேதி காலை 8 மணிக்கு பூமி பூஜை தொடங்குகிறது. வாரணாசியில் இருந்து வரும் புரோகிதர்கள் பூமி பூஜை நடத்துகிறார்கள்.
ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். மோடியின் பயண திட்டத்தின்படி, அவர் அன்று காலை 11 மணி முதல் பிற்பகல் 1.10 மணிக்குள் சுமார் 90 நிமிடங்கள் அங்கு இருப்பார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் மற்றும் சில மத்திய மந்திரிகள், அறக்கட்டளை உறுப்பினர்கள் விழாவில் கலந்து கொள்கிறார்கள்.