சவுதி அரேபியாவிலிருந்து புதுக்கோட்டைக்கு வந்த கோரோனா இறப்பு தொலைப்பேசி அழைப்பு? குடும்பத்தினர் அதிர்ச்சி?முழுவிவரம் – விண்மீன் நியூஸ்
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே ஆண்டிகுளப்பம்பட்டியைச் சேர்ந்தவர் கணிக்குமார் (44). இவர் சவுதி அரேபியா நாட்டில் கடந்த 13 வருடங்களாக கிரேன் ஆப்ரேட்டராகப் பணிபுரிந்து வந்துள்ளார். மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். குடும்பத்தினருடன் அடிக்கடி பேசி வந்த கணிக்குமாரிடம் இருந்து, கடந்த ஒரு மாதமாகவே அழைப்பு வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், பதற்றம் அடைந்த குடும்பத்தினர் அவரைத் தொடர்புகொள்ள முயன்றும் முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையேதான் சவுதி அரேபியாவில் கடந்த மாதம் கணிக்குமாருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், அதற்காக அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கணிக்குமாரின் மனைவிக்கு சவுதி அரேபியாவிலிருந்து தொலைபேசியில் அழைப்பு வந்துள்ளது.
இதனால், மனைவி, குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கினர். இதற்கிடையே, சவுதி அரேபியாவில் இருந்து திடீரென கணிக்குமாரின் மனைவிக்கு மீண்டும் ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில்,`கொரோனா நோய்த்தொற்றால் உங்கள் கணவன் இறந்துவிட்டார்’ என்ற தகவல்களைக் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்துவிட்டனர். தற்போது விமான சேவைகள் ஏதும் இல்லை. அதோடு கொரோனா நோய்த்தொற்று பாதிக்கப்பட்டதால், அவரது உடலை இந்தியா கொண்டு வர முடியாத நிலை. இறந்தவரின் உடல் சவுதி அரேபியாவிலேயே, அடக்கம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இறந்த கணிக்குமாரின் உடலைக் கடைசியாக ஒருமுறைகூட பார்க்க முடியவில்லை என்று உறவினர்கள் புலம்பித்தவிக்கின்றனர்.
இதுபற்றி உறவினர்களிடம் கேட்டபோது,“கொரோனா பாதிப்பால்தான் உயிரிழந்தாரா என்பதில் சந்தேகம் இருக்கிறது. கடைசியாக ஒருமுறை பார்க்கக்கூட முடியவில்லை. இறப்புக்கான காரணம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். உரிய விசாரணை நடத்தப்படுவதுடன், நிவாரணம் கிடைக்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.