கிறிஸ்துவ பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது
மதுரை: இந்துமத கடவுள்களை விமர்சித்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த கிறிஸ்துவ மத போதகர் ஜார்ஜ் பொன்னையாவை மதுரையில் போலீஸார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் கடந்த 18 ஆம் தேதி இஸ்லாமிய, கிறிஸ்துவ அமைப்புகள் இணைந்து நடத்திய சிறுபான்மை சமூகத்தின் உரிமை மீட்பு போராட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜனநாயக கிறிஸ்துவ பேரவை அமைப்பின் ஆலோசகரான, கிறிஸ்துவ மத போதகர் ஜார்ஜ் பொன்னையா சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
அந்த விடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதையடுத்து சாதி, மத மோதலைத் தூண்டும் விதமாக சர்ச்சைக்குரிய வகையில் பேசியை ஜார்ஜ் பொன்னையா கைது செய்ய வேண்டும் என பாஜக மற்றும் இந்து இயக்க நிர்வாகிகள் உள்ளிட்ட பல தரப்பினர் புகார்கள் எழுப்பினர்.
இந்த நிலையில் காவல்துறை நடவடிக்கை எடுக்க தாமதமாவதால், பல இடங்களில் போராட்டங்கள் நடத்த பாஜக மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ஜார்ஜ் பொன்னையா மீது சட்ட விரோதமாக கூடுதல் , சாதி, மதம் மற்றும் இரு தரப்பினரிடையே விரோதத்தை உருவாக்குதல், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்துதல், மத நம்பிக்கைகள் மீது அவதூறு பரப்புதல் என 7 பிரிவுகளின் கீழ் அருமனை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்நிலையில், இந்து கடவுள்கள், பிரதமர் உள்ளிட்ட தலைவர்களையும் இழிவாகவும், சர்ச்சைக்குரிய வகையில் பேசிய புகாரில் தேடப்பட்டு வந்த கிறிஸ்துவ மத போதகர் ஜார்ஜ் பொன்னையாவை மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியில் வைத்து போலீஸார் கைது செய்துள்ளனர்.