பாஜக ஒன்றிய இளைஞரணி தலைவர் ஓடஓட விரட்டி வெட்டிப் படுகொலை?மர்ம கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
பாஜக ஒன்றிய இளைஞரணி தலைவர் ஓடஓட விரட்டி வெட்டிப் படுகொலை –
மர்ம கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகேயுள்ள குந்துமாரணப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ரங்கநாத் (35). இவர் பாஜகவில் ஒன்றிய இளைஞரணி தலைவராக பதவி வகித்து வந்தார். ரங்கநாத்துக்கு மனைவி கீதா, மகன்கள் தனுஞ்செயா மற்றும் ருஷிகேஷ் உள்ளனர். இவருக்கும், குந்துமாரணப்பள்ளி கிராமத்தை அடுத்த போத்தசந்திரம் கிராமத்தை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் ரங்கநாத் நேற்றிரவு இளைய மகனான தனுஞ்செயாவின் பிறந்தநாளை தனது குடும்பத்தினருடன் அவரது வீட்டில் கொண்டாடியுள்ளார். அப்போது அவரது வீட்டிற்குள் புகுந்த கும்பல் ஒன்று அவரிடம் தகறாறு செய்தது. பின்னர் ரங்கநாத்தை ஓட ஓட விரட்டி உருட்டு கட்டைகளாலும் பயங்கர ஆயுதங்களாலும் தாக்கியுள்ளனர்.
இதனால் பலத்த காயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் மர்ம கும்பல் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். கிராம மக்கள் உடலை மீட்டு ஒசூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். இதுகுறித்து கெலமங்கலம் போலீஸார் குந்துமாரணப்பள்ளி கிராமத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, ஆத்திரமடைந்த ரங்கநாத்தின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது. அவர்களை சமாதானம் படுத்தும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர் . பாஜக ஒன்றிய இளைஞரணி தலைவரை மர்ம கும்பல் ஓடஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.