இந்தியாவில் முதல் பிளாஸ்மா சிகிச்சை பெற்ற கொரோனா நோயாளி பூரண குணம்?மருத்துவர்கள் சாதித்தது எப்படி?
இந்தியாவின் முதல் பிளாஸ்மா சிகிச்சை பெற்ற கொரோனா நோயாளி பூரண குணம்.. மருத்துவர்கள் சாதித்தது எப்படி?
டெல்லி: இந்தியாவின் முதல் பிளாஸ்மா சிகிச்சை பெற்ற கொரோனா நோயாளி பூரண குணமடைந்து வீடு திரும்பினார். டெல்லியில் கவலைக்கிடமான நிலையில் செயற்கை சுவாச கருவி உதவியுடன் சிகிச்சை பெற்ற அவர் பிளாஸ்மா சிகிச்சை பெற்று முழு குணமடைந்து வீடு திரும்பி உள்ளார்.
டெல்லியை சேர்ந்த 49 வயது நபர் கடந்த ஏப்ரல் 4ம் தேதி கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து கொரோனாவுக்கு சிகிச்சை அளித்து வரும் டெல்லி மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் அடுத்த சில நாட்களில் அவரின் உடல் நிலை மோசமடைய தொடங்கியது. இதையடுத்து அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. செயற்கை சுவாச கருவி உதவியுடனே வாழ்ந்து வந்த அவருக்கு அளிக்கப்பட்ட தொடர் சிகிச்சைகள் எந்த முன்னேற்றத்தையும் தரவில்லை. நாளுக்கு நாள் உடல் நிலை மோசடைந்து கொண்டே சென்றது.
மகாராஷ்டிராவில் 80% நோயாளிகள் அறிகுறி இல்லாதவர்கள்.. அடுத்த 3 மாதம் முக்கியமானது… உத்தவ் வார்னிங்
பிளாஸ்மா சிகிச்சை
இதையடுத்து நோயாளியின் உறவினர்கள் அவருக்கு பிளாஸ்மாக சிகிச்சை அளிக்குமாறு கோரிக்கை வைத்தனர். அவரது குடும்பத்தினரே பிளாஸ்மா தானக் கொடையாளியையும் ஏற்பாடு செய்து கொடுத்தனர். பிளாஸ்மா தர முன்வந்தவருக்கு இரண்டு முறை நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா இல்லை என்பது உறுதியானது. இதையடுத்து பிளாஸ்மா எடுப்பதற்காக 3வது முறையாக மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அதிலும் அவருக்கு கொரோனா இல்லை என்பது உறுதியானது.
பிளாஸ்மா பிரித்தெடுப்பு
அத்துடன் பிளாஸ்மா கொடையாளிக்கு ஹெபடைடிஸ் பி, ஹெபடைடிஸ் சி மற்றும் எச்.ஐ.வி.தொற்று உள்ளதா என்பதற்கான சோதனையும் நடத்தப்பட்டது. அதுவும் இல்லை என்பது பரிசோதனையில் உறுதியானது. அதன்பிறகே பிளாஸ்மா கொடையாளியிடம் இருந்து ரத்தம் பெறப்பபட்டு பிளாஸ்மா பிரித்தெடுக்கப்பட்டது. இதற்கிடையில் பிளாஸ்மா சிகிச்சைக்கு மத்திய அரசின் அனுமதி பெற்ற மேக்ஸ் மருத்துவமனை நிர்வாகம் டெல்லி நோயாளிக்கு இந்தியாவிலேயே முதல்முறையாக பிளாஸ்மா சிகிச்சை அளிக்க முடிவு செய்தது.
ஏப்ரல் 18ல் முன்னேற்றம்
இதன்படி டெல்லி நோயாளிக்கு கடந்த ஏப்ரல் 14ம் தேதி இரவு அரசு நிர்ணயத்த விதிமுறைகளின் படி பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டது. அடுத்த நான்கு நாட்களில் அதாவது ஏப்ரல் 18ம் தேதி அவரது உடல்நிலையில் முன்னேற்றம் தெரிந்தது. இதையடுத்து ஏப்ரல் 18ம் தேதி காலை அவரால் இயல்பாக மூச்சுவிட முடிந்ததால் செயற்கை சுவாச கருவி அகற்றப்பட்டது. தொடர்ந்து 24 மணி நேரமும் உடல் நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வந்தனர்.
வீடு திரும்பினார்
டாக்டர் ஓமேந்தர் சிங், டாக்டர் தேவன் ஜுனேஜா, டாக்டர் சங்கீதா பதாக் ஆகியோர் அடங்கிய மருத்துவக்குழு, செவிலியர்கள், அடங்கிய மருத்துவக்குழு தீவிரமாக கண்காணித்து சிகிச்சை அளித்தனர். இதன்பயணமாக டெல்லிநோயாளி விரைவாக நலம் பெற்று வந்தார். இந்நிலையில் உடல் நிலையில் முழுயைமாக தேறிய நிலையில் அவருக்கு இரண்டு முறை நடத்தப்பட்ட பரிசோதனையில் இருமுறையும் நெகட்டிவ் வந்தது. இதையடுத்து பிளாஸ்மா சிகிச்சையால் பூரணமாக குணம் அடைந்த டெல்லி நபர் ஞாயிற்றுக்கிழமையான இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தொடர்ந்து அவர் வீடு திரும்பினார். அரசின் விதிமுறைகளின் படி அடுத்த இரண்டு வாரம் தொடர்ந்து வீட்டில் தனிமைப்படுத்துதலில் இருப்பார்.