உலகில்2.5 கோடிப்பேர் வேலையிழக்கும் அபாயம் சர்வதேச தொழிலாளர் அமைப்பு கவலை?
உலகில் 2.5 கோடிப் பேர் வேலையிழக்கும் அபாயம்
சர்வதேச தொழிலாளர் அமைப்பு கவலை
புதுதில்லி:
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, உலகம் முழுவதும் சுமார் 2 கோடியே 50 லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச தொழிலாளர்அமைப்பான ஐஎல்ஓ (International Labour Organisation) கவலை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ், சாதி மதபேதம், நாடுகள் கண்டங்கள், ஏழை,பணக்காரன் என எந்த வித்தியாசமும் காட்டாமல், உலகம் முழுக்க சமத்துவமாக பரவிக் கொண்டு இருக்கிறது. சுமார் 2 லட்சத்து 20 ஆயிரம் பேர் இந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். 8 ஆயிரத்து 900 பேர் மரணமடைந்து இருக்கிறார்கள். இந்நிலையில், பொருளாதார ரீதியாகவும் உலக நாடுகளில் பெரும் தாக்கத்தை கொரோனா ஏற்படுத்தி இருக்கிறது. தனி மனிதர்களின் வாழ்வாதாரங்களையும் தாக்கத் தொடங்கி இருக்கிறது.
உதாரணமாக சீனாவின், கடந்த 2020 ஜனவரி மற்றும் பிப்ரவரி மாத சில்லரை விற்பனையை, 2019 ஜனவரி- பிப்ரவரியுடன் ஒப்பிட்டால் சுமார் 20.5 சதவிகித வியாபாரம் சரிந்து இருக்கிறது. அதேபோல தொழிற்துறை உற்பத்தியும் சுமார் 13.5 சரிந்துள்ளது. நிரந்தர சொத்துக்களில் செய்யப்படும் முதலீடுகள் கூட 25 சதவிகிதம் சரிந்து இருக்கிறது. மற்ற நாடுகளிலும், இதே நிலை அல்லது இதைவிட மோசமான நிலை தான் நிலவுகிறது.எனவே, உற்பத்தித்துறை, சேவைத்துறை என அனைத்தும் கடுமையான பாதிப்பைச் சந்திக்கப் போகின்றன. அவ்வாறு நிகழும்பட்சத்தில், சுமாராக 25 மில்லியன்(2 கோடியே 50 லட்சம்) வேலைவாய்ப்புகள் முற்றிலுமாக இல்லாமல் போகும் என்று சர்வதேச தொழிலாளர் அமைப்பு கூறுகிறது.
கடந்த 2008 – 2009 பொருளாதார நெருக்கடியின் போது, உலகளாவிய ஒருங்கிணைந்த கொள்கை முடிவுகளைக் கொண்டு வந்தது போல, இப்போதும் தக்க நடவடிக்கைகளை எடுத்தால், வேலை இல்லாத் திண்டாட்டத்தை கணிசமாக குறைக்க முடியும் எனக் கூறியிருக்கிறது.