கோவில்பட்டியில் கொரனா வைரஸ் ஆய்வுக்கூட்டம் அமைச்சர் கடம்பூர் ராஜு கலெக்டர், SP,பங்கேற்பு?
கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு ஆய்வுக் கூட்டம் – அமைச்சர் பங்கேற்பு
கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.நகராட்சி கூட்டரங்கில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்பாலகோபாலன், விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் சின்னப்பன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவி சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், நகராட்சி ஆணையர் ராஜாராம், பொறியாளர் கோவிந்தராஜன், உதவிப் பொறியாளர் சரவணன், சுகாதாரப் பணி துணை இயக்குநர் (பொ) அனிதா, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை உறைவிட மருத்துவ அதிகாரி பூவேஸ்வரி, பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளர் பரமசிவன், நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளர் ராஜு, பேரூராட்சி செயல் அலுவலர்கள் ஜோதிபாஸ் (கயத்தாறு), முருகன் (கழுகுமலை), மாதவன் (கடம்பூர்), கணேசன் (எட்டயபுரம்), கோவில்பட்டி நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் முருகேசன், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையர் மாணிக்கவாசகம், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) வசந்தா, காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜெபராஜ், மின்வாரிய செயற்பொறியாளர் சகர்பான் ஆகியோர் பேசினர்.
பின்னர் அமைச்சர் கடம்பூர் செ.ராஜு பேசுகையில், கோவில்பட்டி மற்றும் கயத்தாறு வட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி உள்ளிட்ட பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகளை முறையாக கையாள வேண்டும்.கிராமங்களில் எவ்வித தட்டுப்பாடும் இன்றி குடிநீர் வழங்க வேண்டும். மின்சாரம் தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும், வாறுகால் சுத்தம் செய்வது உள்ளிட்ட சுகாதாரப் பணிகளை தவறாது பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.மேலும், நியாயவிலைக் கடைகளில் ஏப்ரல் 2ஆம் தேதி (வியாழக்கிழமை) முதல் விலையில்லா பொருள்கள், ரொக்கப்பணம் ரூ.ஆயிரம் ஆகியவை வழங்கும் பணி நடைபெறவுள்ளது. அப்பணி எவ்வித தொய்வுமின்றி முறையாக நடைபெற வேண்டும். அங்கு பொதுமக்கள் கூடுவதைத் தவிர்த்து, சமூக இடைவெளியை முறையாகப் பின்பற்ற வேண்டும். முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கு அவரவர் இல்லத்திற்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யும்படியும் கேட்டுக் கொண்டார் அமைச்சர்.
முன்னதாக, புதிய பேருந்து நிலையத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வரும் நகராட்சி தினசரி காய்கனி சந்தையை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு காய்கனிகள் வாங்கும் பொதுமக்கள், வியாபாரிகள் சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு கேட்டுக் கொண்டார்.பின்னர், இனாம்மணியாச்சி ஊராட்சிக்கு உள்பட்ட அத்தைகொண்டானில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார். மேலும், நகராட்சி அலுவலக வளாகத்தில் தீயணைப்பு வாகனத்தின் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணியை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு தொடங்கி வைத்தார்.