சாதிக்க வயது தடையில்லை 72 நாட்கள் பயணம் செய்து காரிலேயே 19 நாடுகளுக்கு சுற்றிய 73வயது தம்பதி?
சாதிக்க வயது தடையில்லை: 72 நாட்கள் பயணம் செய்து காரிலேயே 19 நாடுகளை சுற்றிய 73 வயது தம்பதி..!!
விமானத்தில் ஜன்னலோர சீட் கிடைத்தும், மேகத்தின் இடையில் பறக்கும் பயணத்தின் அழகை ரசிக்காமல், கீழே எறும்பு போல தெரியும் பூமியை ரசிக்காமல், அந்த நேரத்தில் உதயமான ஒரு நவீன யோசனையால் இன்று இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளனர் தம்பதி இருவர்.
மும்பையை சேர்ந்த கணவன் மனைவியான பத்ரி மற்றும் புஷ்பா 2011ல் லண்டனில் இருந்து இந்தியாவிற்கு விமானம் மூலம் திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.
அப்போது, ஜன்னல் வழியாக கீழே நிலத்தை பார்த்துள்ளார் பத்ரி. அப்போது தெரிந்த மலைகளின் வழியே சாலை மார்க்கமாக லண்டனுக்குக் காரில் பயணம் செய்ய ஆசை பிறந்திருக்கிறது.
உடனே அதை சாத்தியமாக்கும் முயற்சியில் இறங்கினார் பத்ரி. அதன் ஆராய்ச்சி முடிவுகள் அவருக்கு நம்பிக்கையை அளித்தன.
நம்பிக்கை கிடைத்த பின், இதை சோதித்துப் பார்க்க விரும்பியவர், பத்ரிநாத் கோவிலுக்கு தனது பேத்தி நிஷி உடன் காரிலேயே சென்றுள்ளார். மும்பையில் இருந்து பத்ரிநாத்துக்கு செல்ல பத்ரிக்கு 46 மணி நேரம் ஆனது.
அதனால் சோர்வடையாமல், காரிலேயே லண்டன் செல்லும் அவரது கனவுப் பயணத் திட்டத்திற்கு பத்ரிநாத் பயணம், ஒரு அடித்தளம் அமைத்துத் தந்துள்ளது
மும்பை திரும்பி வந்த பத்ரி, 64 வயதான மனைவி புஷ்பா மற்றும் பேத்தி நிஷி உடன் கடந்த மே மாதத்தில் இந்தியாவில் இருந்து லண்டனுக்குக் காரில் செல்லும் தனது லட்சியப் பயணத்தை தொடங்கினார்.
மணிப்பூரில் இம்பால் வழியாகச் சென்று முதலில் மியான்மரை அடைந்திருக்கிறார்கள். பிறகு தாய்லாந்து, சீனா, ரஷ்யா வழியாக லண்டனை நோக்கி பத்ரி, புஷ்பா மற்றும் நிஷி ஆகியோரது பயணம் தொடர்ந்தது.
ஒரு நாளில் 12 மணி நேரம் பயணித்து, முடிந்த வரை 400 கிலோ மீட்டரைக் கடக்க வேண்டும் என்பது பத்ரியின் இலக்காக இருந்திருக்கிறது.
இடைப்பட்ட நேரங்களில் பயணம் சென்ற நாடுகளில் உள்ள பிரபலமான சுற்றுலாத் தளங்களுக்கும் பத்ரி குடும்பத்தினர் சென்றுள்ளனர்.
பயணத்தில் சுவாரஸ்யம் கூடினால், பத்ரி 930 கிலோ மீட்டரை தாண்டியும் கார் ஓட்டியுள்ளார். ஒரு குறிப்பிட்ட நாளில் மூன்று நாடுகளை ஒரே நாளில் கடந்துள்ள சில நிகழ்வுகளும் இந்தப் பயணத்தில் நடந்துள்ளது.
இரவு நேரத்தில் தங்க இடம் கிடைக்காமல் அலைந்தது, சாப்பாடு ஒத்துக்கொள்ளாமல் இருப்பது, மாறுபடும் சீதோஷன நிலை என இந்தப் பயணத்தில் சில தீமைகளும் நடந்துள்ளன.
“ஜெர்மனிக்குப் பிறகு காலை, மதியம் மற்றும் இரவு நேர உணவுகள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு நாடுகளில் சாப்பிட்டோம். மலைவழி பயணம் அமைதி அளித்தது. ஐரோப்பாவில் கிராமப்புறம் சிலவற்றில் இன்னும் கழிப்பறை வசதி இல்லாதது அதிர்ச்சியாக இருந்து” என்று தெரிவித்தார்.
இந்தியாவில் இருந்து லண்டனுக்கு சாலை மார்க்கமாக 22,200 கிலோ மீட்டர். 72 நாட்கள் பயணம் செய்து பத்ரி குடும்பத்தினர் மொத்தம் 19 நாடுகளைக் கடந்துள்ளனர்.
தற்போது இந்தியாவின் பலரது கவனத்தைப் பெற்றுள்ள இந்த பயணத்தைப் பற்றி பேசிய பத்ரி, முயன்றால் முடியாதது எதுவுமில்லை என்று நிறைவாகக் கூறினார்.