அக்னிநட்சத்திரம் என்ற கத்திரி வெயில் மே4ந் தேதி துவங்குகிறது? அதன்முழுவிபரத்தை பார்ப்போம் – விண்மீன் நியூஸ்
‘அக்னி நட்சத்திரம்’ மே 4ந் தேதி துவங்குகிறது
‘அக்னி நட்சத்திரம்‘ என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் வருகிற 4-ந் தேதி (திங்கட்கிழமை) தொடங்கி வரும் 28 ந்தேதி வரை 24 நாட்கள் இருக்கும்.
இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கியதிலிருந்தே தமிழகத்தில் பல நகரங்களில் வெப்பம் அதிகரித்து வருகிறது. சென்னை, மதுரை, திருச்சி, வேலூர், திருத்தணி ஆகிய நகரங்களில் அதிகளவில் வெப்பம் பதிவாகி வருகிறது.
இந்த நிலையில் வருகிற 4-ந்தேதி (திங்கட்கிழமை) அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் தொடங்குகிறது. தொடர்ந்து 24 நாட்கள் அதாவது வருகிற 28-ந்தேதி வரை அக்னி நட்சத்திரம் நீடிக்கிறது. இந்தக் காலகட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பது வழக்கம். நடப்பாண்டு கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக அரசு ஊரடங்கு பிறப்பித்து உள்ளது. இதனால் மாநகரப்பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் வாகனப் போக்குவரத்துகள் முற்றிலும் முடங்கி உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு வெப்பத்தின் தாக்கம் பெரிதாகத் தெரியவில்லை. ஆனால் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடப்பதால் மின்விசிறிகள், ஏ.சி., பிரிட்ஜ் உள்ளிட்ட மின்சாதனங்களின் பயன்பாடுகளும் அதிகரித்து உள்ளது.
இதற்கிடையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை மழையும் பெய்து வருகிறது. இதனால் வெப்பத்தின் தாக்கம் பகல் பொழுதில் சற்றுக் குறைந்து காணப்படுகிறது.