தலைமுடியை விற்று குழந்தைகளுக்கு பசியாற்றிய பிரேமா – சேலத்தில் வறுமையில் சிக்கிய பெண்ணின் அவலநிலை?
வறுமையில் சிக்கி.. தலைமுடியை விற்று பசியாற்றிய பிரேமா
சேலம் மாவட்டம் பொன்னம்மாப்பேட்டை பகுதியை சேர்ந்த தம்பதி செல்வம் – பிரேமா. 2 பேரும் ஒரு செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்தனர். இவர்களுக்கு 3 குழந்தைகள்.
மகிழ்ச்சியுடன் சென்றது குடும்ப வாழ்க்கையில் நண்பர் ஒருவரின் குறுக்கீட்டால் துன்பம் கூடியது. அவரது தவறான வழிகாட்டலால் கடன் வாங்க ஆரம்பித்த செல்வம் கடைசியில் அதில் சிக்கிக் கொண்டு அவதிக்குள்ளானார். கிட்டத்தட்ட 4.50 லட்சம் வரை கடன் வாங்கிவிட்டார்.
நண்பரும் ஏமாற்றவே கடன், வட்டி, வறுமை, ஏமாற்றத்தில் தவித்து போன செல்வம்.. கடன் கொடுத்தவர்கள் நெருக்கவே அவமானம் தாங்க முடியாமல் 7 மாசத்துக்கு முன்பு செல்வம் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். கடனையும், அவதியையும் தாங்கி கொண்ட பிரேமாவால், கணவரின் தற்கொலையை தாங்க முடியவில்லை.. வீட்டு செலவுக்கு பணம் இல்லை.. தனியாளாகவே வீமனூரில் உள்ள ஒரு செங்கல் சூளையில் பிரேமா கூலி வேலைக்கு போனார்.. ஆனாலும் கடன் கொடுத்தவர்கள் வீட்டு வாசலில் வந்து நின்றார்கள்.. தினம் தினம் 3 குழந்தைகளுக்கும் சாப்பாடு இல்லை.. பசியால் வாட ஆரம்பித்தனர்.
என்ன செய்வதென்றே தெரியாத சூழலில் பிரேமா, குழந்தைகளை அழைத்து கொண்டு கோயிலுக்கு போனார்.. தன் தலையை மொட்டை அடித்து, அந்த தலைமுடியை 150க்கு விற்றார்.. 3 குழந்தைகளுக்கும் சாப்பாடு வாங்கி தந்தார்.. மிச்சமிருந்த பணத்தில் விஷம் வாங்கி தற்கொலைக்குத் திட்டமிட்டபோதுதான் மீட்கப்பட்டார்.
இதுகுறித்து அதே பகுதியைச் சேர்ந்த பாலா என்பவர் கேள்விபட்டு.. பிரேமாவை சந்தித்து, சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளார். அவரது நிலை அறிந்து பலர் உதவி செய்ய முன்வந்தனர். வட்டிக்கு விடும் தொழிலில் ஈடுபட்டுள்ள ஒருவரே பிரேமாவுக்கு உதவி செய்ய முன்வந்தது முக்கியமானது.
⬇⬇⬇