மத்திய தொழிற்படை பாதுகாப்பு படை வீரரை பிரபல ரவுடி ஒருவர் கத்தியால் குத்தி விட்டு மிரட்டும் வீடியோ வேகமாக பரவி வருகிறது.
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தின் இரண்டாவது சுரங்கத்தின் அருகில் இருந்து இரும்பு தளவாட பொருட்கள் திருடப்படுவதாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து மத்திய தொழில் பாதுகாப்பு படை காவலர்கள் செல்வேந்திரன், பாத்திரதாஸ், கருணாகரன் உள்ளிட்டோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ரவுடி பெங்களூரு மணி உள்ளிட்ட நான்கு பேரிடம் காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர். விசாரித்துக் கொண்டிருக்கும்போதே ரவுடி பெங்களூரு மணி காவலர் செல்வேந்திரனைக் கத்தியால் குத்தினார். பின்னர் ரவுடிகள் அனைவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இதையடுத்து காயமடைந்த தொழில் பாதுகாப்பு படை வீரரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இதுகுறித்து மந்தாரக்குப்பம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரரை ரவுடி கத்தியைக் காட்டி மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.