ஜார்க்கண்ட்டில் 2 கிங் மேக்கர்கள்.. ஆட்சி யாருக்கு.. கைப்பற்றத் தயாராகும் பாஜக, காங்.!
ராய்ப்பூர்: ஜார்க்கண்ட் சட்டசபைத் தேர்தலில் திடீர் திருப்பமாக தற்போது பாஜகவுக்கு அதிக இடங்களில் முன்னிலை கிடைத்துள்ளது. இதனால் பாஜக மீண்டும் ஆட்சியமைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதேசமயம், 2 கிங் மேக்கர்கள் அந்த மாநிலத்தில் உருவாகியுள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு நடந்த சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது. முன்னதாக வெளியான எக்சிட் போல் கணிப்புகளில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியமைக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கேற்ப காலை தொடங்கிய வாக்கு எண்ணிக்கை முடிவுகள் காங்கிரஸ் கூட்டணிக்கு சாதகமாகவே இருந்து வந்தது.
ஆனால் தற்போது திடீரென பாஜகவுக்கு சாதகமாக மாறி வருகிறது சூழ்நிலை. தற்போதைய நிலவரப்படி பாஜக (இத்தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிட்டது) 34 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. அதேபோல பாபுலால் மராண்டியின் ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா கட்சி (பிரஜாதந்திரிக்) கட்சி 3 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. பாஜகவின் நீண்ட கால கூட்டணிக் கட்சியாக இருந்து இந்த தேர்தலில் பாஜகவால் கழற்றி விடப்பட்ட அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் யூனியன் கட்சி 7 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
ஜார்க்கண்ட் மாநிலத் தேர்தல் முடிவுகளைப் பார்த்தால் ஏஜேஎஸ்யூ கட்சியும், ஜேவிஎம் கட்சியும் கிங் மேக்கர்களாக உருவெடுத்திருப்பதை உணர முடியும். ஏஜேஎஸ்யூ கட்சியை பாஜக உதறியதால்தான் இப்போது அது திணறியுள்ளது. அதேசமயம், தனிப் பெரும் கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது. மீண்டும் அது ஆட்சியமைக்கக் கூடிய வாய்ப்புகளும் பிரகாசமாகியுள்ளன. ஏற்கனவே பாஜகவுடன் தேர்தலுக்குப் பின்னர் கூட்டணி அமைக்க தாங்கள் தயார் என்று பாபுலால் மராண்டி கூறியுள்ளார். எனவே அக்கட்சியுடன் இணைந்து பாஜக மீண்டும் ஆட்சியமைக்க முயற்சிக்கலாம்.
அதேபோல கழற்றி விட்ட மாணவர் யூனியன் கட்சியையும் தன் பக்கம் இழுத்து ஆட்சியைத் தக்க வைக்க பாஜக முயற்சிக்கும் என்பதிலும் சந்தேகம் இல்லை. அதேசமயம், ஆட்சியமைக்க 41 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
இந்த இடத்தில்தான் ஜேவிஎம், ஏஜேஎஸ்யூ ஆகியவை தங்களது விளையாட்டைக் காட்ட முயற்சிக்கலாம். காங்கிரஸ் மற்றும் பாஜக இருவரிடமும் இவர்கள் பேரம் பேசவே அதிக வாய்ப்புகள் உள்ளன. பாஜக தனது பலத்தால் ஏஜேஎஸ்யூ மற்றும் ஜேவிஎம்மை தன் பக்கம் இழுக்க முயற்சிக்கும் அல்லது அக்கட்சிகளை உடைக்க முயற்சிக்கும். எனவே பாஜகவுக்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம்.
அதேசமயம், ஏஜேஎஸ்யூ கட்சி காங்கிரஸ் கூட்டணி பக்கம் போனால் காங்கிரஸ் கூட்டணியின் பலம் 39 ஆக உயரும். மேலும் 2 உறுப்பினர்களின் ஆதரவு அதற்குத் தேவை. அப்போது ஜேவிஎம் பேரம் பேசலாம். தற்போதைய சூழலில் பாஜகவுக்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ள போதிலும், ஜேவிஎம், ஏஜேஎஸ்யூவின் நிலைப்பாடுகளைப் பொறுத்து சூழல் மாறக் கூடிய வாய்ப்புகள் உள்ளன.