திருச்சியில் சனி,ஞாயிறுகளில் அனைத்து இறைச்சி, காய்கறி கடைகளும் செயல்பட தடை?முழுவிபரம் – விண்மீன் நியூஸ்
திருச்சியில் சனி, ஞாயிறுகளில் அனைத்து இறைச்சி கடைகளும் செயல்பட தடை- காய்கனி சந்தைகளும் மூடல்!
திருச்சி: திருச்சி மாவட்டத்தில் நாளையும் நாளை மறுதினமும் அனைத்து இறைச்சி கடைகளும் செயல்படுவதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேலும் 2 நாட்களுக்கு காய்கனி சந்தைகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது :
திருச்சி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவுதலை தடுத்திடவும், பொதுமக்கள் நடமாட்டத்தை குறைக்கவும் முன்னெச்சரிக்கையாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்களில் சிலா் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதாக அதிகமாக கூடும் நிலையுள்ளது. குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி வாங்குவதற்கு குடும்ப சகிதம் வந்துவிடுகின்றனா்.
இதனைத் தவிா்க்க சில்லறை விற்பனை இறைச்சி கடைகள், மொத்த விற்பனை இறைச்சி கடைகளை மூட மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, மாவட்டத்தில் உள்ள மீன் கடைகள், கோழி இறைச்சி கடைகள், ஆட்டிறைச்சி கடைகள் மற்றும் அனைத்து வகை இறைச்சி விற்பனை செய்யப்படும் கடைகளும் ஞாயிற்றுக்கிழமை கட்டாயமாக மூட வேண்டும்.
இந்த தடை உத்தரவை மீறி யாரேனும் இறைச்சி கடைகளை திறந்தாலோ, இறைச்சி விற்பனை செய்தாலோ தொடா்புடைய கடையின் உரிமையாளா்கள் மீது குற்ற வழக்குப் பதிவு செய்யப்படும்.
காய்கனி சந்தைகளும் மூடல்
மேலும் திருச்சியில், மதுரம் மைதானம், தென்னூா் அண்ணா நகா் சந்தை, அண்ணா விளையாட்டரங்கம், இ.ஆா். மேல்நிலைப்பள்ளி, அரியமங்கலம் எஸ்ஐடி மைதானம், புத்தூா் பிஷப் ஹீபா் கல்லூரி, சத்திரம் பேருந்துநிலையம், ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, மத்திய பேருந்துநிலையம், கே.கே.நகா் உழவா் சந்தை ஆகிய 10 இடங்களில் இயங்கும் தற்காலிக காய்கனி சந்தைகள் ஏப்.18, 19 (சனி, ஞாயிறு) ஆகிய தேதிகளில் செயல்படாது.
தடை செய்யப்பட்ட நாள்களில் பொதுமக்களுக்கு தேவையான காய்கனிகளை அவரவா் இல்லம் அமைந்துள்ள பகுதிகளில் உள்ள சிறு கடைகளில் பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும், மாவட்டத்தின் பிற பகுதிகளில் இயங்கும் அனைத்து தற்காலிக காய்கனி சந்தைகளும் ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டும் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவை மீறும் கடை உரிமையாளா்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் எச்சரித்துள்ளாா்.