மயக்கமருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் 26வயது பெண்ணுக்கு சென்னையில் நடந்த கொடுமை?
26 வயது பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை : மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம்
சென்னை: சென்னை, விருகம்பாக்கத்தில், 26 வயது பெண்ணுக்கு, அதே பகுதியைச் சேர்ந்த இருவர், கோவில் பிரசாதத்தில் மயக்க மருந்து கொடுத்து, பாலியல் பலாத்காரம் செய்ததுடன், அதை மொபைல் போனில், வீடியோ எடுத்து, சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக மிரட்டி, நகை பறித்த சம்பவம் நடந்துள்ளது.
தற்கொலை முயற்சி
சென்னை, விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் சங்கர், 40; தச்சுத் தொழிலாளி. இவரது முதல் மனைவி இறந்து விட்டார். இரண்டாவதாக, 26 வயது பெண்ணை திருமணம் செய்து, குடும்பம் நடத்தி வருகிறார். இரண்டு மாதங்களாக, வேலை நிமித்தமாக, சங்கர், வெளியூர் சென்று விட்டார்.இரு தினங்களுக்கு முன், வீடு திரும்பினார். அப்போது, மனைவியின் கழுத்தில் இருந்த, 3 சவரன் நகை காணாமல் போயிருந்தது.இதுபற்றி கேட்டபோது, தனக்கு தெரிந்த ஒருவர், வாங்கிச் சென்று இருப்பதாக கூறியுள்ளார். மேலும் அவர், மூன்று முறை தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்.இதனால், சங்கருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. காரணம்தெரியாமல், மீண்டும் மனைவியிடம், ‘ஏதேனும் தவறு செய்து விட்டாயா?’ என, விசாரித்துள்ளார்.
அப்போது, அவரது மனைவி கூறியதாவது:நீங்கள் வெளியூர் சென்று இருந்தபோது, நம் வீட்டருகே வசிக்கும், ஹரீஷ்குமார் மற்றும் சதீஷ்குமார் ஆகியோர், கோவில் பிரசாதம் தந்தனர். அதில், சாக்லெட்டும் இருந்தது. அதை சாப்பிட்ட பின், எனக்கு மயக்கம் ஏற்பட்டது.
மிரட்டல்
அப்போது, வீட்டில் தனியாக இருந்த என்னை, இருவரும் பாலியல் பலாத்காரம் செய்து விட்டனர். அதை, மொபைல் போனில், வீடியோ எடுத்துள்ளனர்.சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக மிரட்டியே, பல முறை பாலியல் பலாத்காரம் செய்தனர். மூன்று சவரன் சங்கிலியை பறித்துக் கொண்டனர்.அதை கொடுத்து விடுங்கள்என, கெஞ்சினேன். தருவதாக கூறி, அம்பத்துாருக்கு வரவழைத்து, அவர்களின் நண்பர்களுக்கும், என்னை விருந்தாக்கினர்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
இதையடுத்து, விருகம்பாக்கம் காவல் நிலையத்தில், சங்கர் புகார் அளித்தார். போலீசார், ஹரீஷ்குமார் மற்றும் சதீஷ்குமார் ஆகியோரை பிடித்து விசாரித்து உள்ளனர். அப்போது, ‘அந்த பெண்ணுடன், எங்களுக்கு கள்ளத் தொடர்பு உள்ளது. அவர் கொடுத்த, 3 சவரன் செயினுக்கு பதிலாக, 90 ஆயிரம் ரூபாய் கொடுத்து விடுகிறோம்’ என கூறியுள்ளனர்.முதற்கட்டமாக, 50 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளனர். மீதமுள்ள, 40 ஆயிரம் ரூபாயை, 10 நாட்களுக்குள் தந்து விடுவதாக, எழுதிக் கொடுத்து சென்றுள்ளனர்.
ஆனால், பணத்தை தராமல், தினமும், அந்த பெண்ணின் வீட்டைச் சுற்றியே, இரு சக்கர வாகனத்தில் வலம் வந்துள்ளனர்.இதுகுறித்து, நேற்று முன்தினம், தி.நகர் துணை கமிஷனர் அலுவலகத்தில், சங்கர் புகார் அளித்துள்ளார். வடபழனி மகளிர் போலீசார், வழக்குப் பதிந்து, ஹரீஷ்குமார், சதீஷ்குமார் மற்றும் அவரது நண்பர்களை தேடி வருகின்றனர்.