அசாமில் கொரோனாவில் இருந்து குணமான பெண் கூட்டு பலாத்காரம்..! அதிர்ச்சி சம்பவம்✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
கொரோனாவில் இருந்து குணமான பெண் கூட்டு பலாத்காரம்..! அசாமில் அதிர்ச்சி சம்பவம்
அசாம் மாநிலம் சரைடியோ மாவட்டத்தில் உள்ள கிராமத்தின் தேயிலை பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண்ணின் குடும்பத்துக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வீட்டு தனிமையில் இருந்து வந்தனர். இந்நிலையில், தாய், மகள் இரண்டு பேருக்கு காய்ச்சல் அதிகரித்ததால் இருவரும் அறிவுரையின்படி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை அன்று தாய், மகள் இருவருக்கும் கொரோனா நெகட்டிவ் என்று வந்ததால் இரவு 7 .30 மணிக்கு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
அவர்களுடைய கிராமம் மருத்துவமனையில் இருந்து 25 கி.மீ. தொலைவில் இருப்பதால் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யுமாறு மருத்துவர்களிடம் கேட்டுள்ளனர். ஆனால், கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட காரணத்தை சொல்லி ஆம்புலன்ஸ் இல்லை என்று கூறியுள்ளனர். இதையடுத்து, 40 வயதுமிக்க பெண்ணும், அவருடைய மகளும் அங்கிருந்து நடந்தே கிராமத்துக்கு வந்து கொண்டிருந்தனர்.
அப்போது இரண்டு வாலிபர்கள் அவர்களை பின்தொடர்ந்து வந்துள்ளனர். இதனால் அச்சமடைந்த தாய், மகள் இருவரும் ஓட்டம் எடுத்துள்ளனர். ஆனால், கொடூரர்களின் பிடியில் தாய் மட்டும் மாட்டிக்கொள்ளவே, கிராமத்தினருக்கு தகவல் கொடுப்பதற்காக மகள் மட்டும் சென்றுவிட்டார். இதையடுத்து, மேற்கண்ட வாலிபர்கள் பெண்ணின் தாயை மறைவான பகுதிக்கு தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர்,
அதனையடுத்து கிராம மக்களுடன் சிறுமி தனது தாயை தேடி அலைந்த நிலையில் இரண்டு மணி நேரம் கழித்து அவரை கண்டுபிடித்து மீட்டுள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் சரைடியோ போலீசார் பலாத்காரம் செய்த இரண்டு வாலிபர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சம்பவம் குறித்து எதிர்க்கட்சிகள் அசாம் அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. பாஜக ஆட்சியில் மருத்துவ உள்கட்டமைப்பின் நிலை இதுதான். ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், சிகிச்சை பெற்று குணமடைந்த நோயாளிகள் பாதுகாப்பாக வீட்டுக்கு செல்வதில் மருத்துவமனையின் பொறுப்பு இல்லையா? போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது, அதே நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் வாகனமும் இல்லை என்ற போது அவர்களுக்கு உதவி செய்திருக்க வேண்டும் அல்லவா? என்று பரவலான கேள்விகளை எதிர்க்கட்சிகள் வைத்துள்ளன.