கோவில்பட்டியில் டாஸ்மாக்கடை திறப்புக்கு எதிர்கட்சியினர் சமூகஆர்வலர்கள் ஆர்ப்பாட்டம்6 பேர் கைது? முழுவிவரம் – விண்மீன் நியூஸ்
டாஸ்மாக் கடை திறப்புக்கு எதிர்ப்பு – கோவில்பட்டியில் அரசியல் கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டம் – 6 பேர் கைது
கோவில்பட்டியில் டாஸ்மாக் கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஓடைக்கடை மீட்புக் குழுவினர் சார்பில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் டாஸ்மான் கடைகள் செயல்பட தொடங்கியுள்ளன.
இதைக் கண்டித்து மதிமுக தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ் தலைமையில், இளைஞரணி மாவட்டச் செயலர் விநாயகா ரமேஷ், பொதுக்குழு உறுப்பினர் தெய்வேந்திரன், நகர இளைஞரணி செயலர் சரவணன் உள்ளிட்ட பலர் கோவில்பட்டி புதுரோட்டில் கருப்புச்சட்டை அணிந்தபடி மதுக்கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர்.
அதுபோல, மார்க்கெட் சாலையில் திமுக நகரச் செயலாளர் கருணாநிதி தலைமையில், நகரச் செயலாளர்கள் பால்ராஜ் (மதிமுக), ஜோதிபாசு (சிபிஎம்), கருப்பசாமி (விசிக), காங்கிரஸ் கட்சி நகரத் தலைவர் சண்முகராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முனியசாமி, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கருப்புச்சட்டை அணிந்து டாஸ்மாக் மதுக்கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதே போன்று டாஸ்மாக் கடை திறப்புக்கு கண்டனம் தெரிவித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் அழகுமுத்துப்பாண்டியன் தலைமையில் அவரது வீட்டருகே கோஷங்களை எழுப்பினர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி கோவில்பட்டி பிரதான சாலையில் அண்ணா பேருந்து நிலையம் அருகேயுள்ள அரசு மதுபானக்கடை முன்பு நீர்நிலை ஓடை மீட்புக் குழுவைச் சேர்ந்த சங்கரலிங்கம் தலைமையில் அதன் நிர்வாகிகள் தமிழரசன், காளிதாஸ், செல்வம் என்ற செல்லத்துரை, ராஜசேகர், கருப்பசாமி ஆகியோர் முகத்தில் கருப்புத் துணியைக் கட்டியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு சென்ற மேற்கு காவல் நிலைய போலீஸார் மதுபானக்கடை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரையும் கைது செய்தனர்.