ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததையடுத்து நடிகர் ரஜினிகாந்த் 10 நாள்கள் ஆன்மிகப் பயணமாக இன்று இமயமலைக்கு புறப்படுகிறார். அங்கு கேதார்நாத், பாபாஜி குகை, பத்ரிநாத் ஆகிய இடங்களுக்கு சென்று தங்க திட்டமிட்டிருப்பதாக இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
சென்னையில் இருந்து இன்று காலை 6.40 மணிக்கு விமானத்தில் புறப்பட்ட ரஜினிகாந்த், இமயமலையின் அடிவாரமான உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் செல்கிறார். அங்கிருந்து அடுத்தடுத்த இடங்களுக்கு காரில் செல்லவுள்ளதாக தெரிகிறது. கேதார்நாத், பத்ரிநாத் போன்ற புனித தலங்களுக்கு செல்லும் அவர், பாபாஜி குகைக்கு சென்று தியானம் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தர்பார் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இமயமலைப் பயணத்தை முடித்துக்கொண்டு தர்பார் டப்பிங்கில் பங்கேற்கிறார். பின்பு, சிறுத்தை சிவா இயக்கவிருக்கும் ரஜினிகாந்தின் 168 ஆவது படத்தின் மீது முழு கவனம் செலுத்துவார் என கூறப்படுகிறது.