இன்று முதல் ஊரடங்கில் மேலும் தளர்வு மதுரையிலிருந்து5 மாவட்டங்களுக்கு இ-பாஸ் இல்லாமல் பயணம் செய்யலாம்? முழுவிவரம் – விண்மீன் நியூஸ்
இன்று முதல் ஊரடங்கில் மேலும் தளர்வு: மதுரையில் இருந்து 5 மாவட்டங்களுக்கு பஸ்களில் செல்லலாம் இ-பாஸ் தேவையில்லை
மதுரை,
கொரோனா பரவுதலை தடுப்பதற்காக கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு தொடங்கிய போதே மருந்து கடைகள் மற்றும் அத்தியாவசிய கடைகள் திறப்பதற்கு மட்டுமே அனுமதி தரப்பட்டது. அதன்பின் கடந்த மாதம் இந்த ஊரடங்கில் தளர்வு செய்யப்பட்டு அனைத்து தனிக்கடைகளும் திறக்க அனுமதிக்கப்பட்டது.
அதன்படி மதுரை மாவட்டத்தில் அனைத்து தனிக்கடைகளும் திறக்கப்பட்டுள்ளன. மளிகை கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரையும், மற்ற கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை திறக்கப்படுகின்றன. இதுதவிர டீக்கடை மற்றும் ஓட்டல்களில் சாப்பிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
5-வது மண்டலம்
இந்தநிலையில் மத்திய அரசு வருகிற 30-ந் தேதி வரை ஊரடங்கை நீட்டித்துள்ளது. இருப்பினும் தமிழக அரசு இன்று முதல் (திங்கட்கிழமை) பஸ் போக்குவரத்தை தொடங்க அனுமதித்துள்ளது. மேலும் மாவட்டங்கள் இணைந்து மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த மண்டலங்களுக்குள் தான் அரசு, தனியார் பஸ் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 5-வது மண்டலத்தில் மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் உள்ளன. இந்த மாவட்டங்களுக்குள் பஸ் போக்குவரத்து இன்று முதல் தொடங்கப்படுகிறது. மதுரை மக்கள் இனி எந்த தடையும் இல்லாமல் திண்டுக்கல், தேனி, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு பஸ்களில் செல்லலாம்.
பஸ் போக்குவரத்து
பல நாட்கள் கழித்து பஸ் போக்குவரத்து தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ளதால் அதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் செய்து உள்ளது. இன்று முதல் மதுரை மாவட்டத்தில் 50 சதவீத அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி மொத்தம் 450 பஸ்கள் இயக்குவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதில் 375 பஸ்கள் நகர் பகுதிகளுக்குள் இயக்கப்படும். 75 பஸ்கள் மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டங்களுக்குள் இயக்கப்படும். அந்த பஸ்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு உள்ளன.
சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதற்காக ஒவ்வொரு பஸ்களிலும் 60 சதவீத பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அதாவது 2 பேர் அமர கூடிய இருக்கையில் ஒரு பயணி மட்டுமே அமர வேண்டும். அதை குறிக்கும் வகையில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்கும். நகர் பஸ்களில் மொத்தம் 44 இருக்கைகள் உள்ளன. அதில் 22 இருக்கையில் மட்டுமே பயணிகள் அமருவார்கள். 4 பயணிகள் நின்று பயணிக்கலாம். அதேபோல் மாவட்டங்களுக்குள் இயக்கப்படும் பஸ்களில் 57 இருக்கைகள் இருக்கும். அதில் 27 இருக்கையில் மட்டுமே பயணிகள் அமருவார்கள். 5 பயணிகள் நின்று கொண்டு பயணிக்கலாம்.
பழைய கட்டணம்
அதேபோல் அரசு பஸ்களில் ஏறும்போது கண்டக்டர் தரும் கை சுத்திகரிப்பான் மூலம் கையை சுத்தப்படுத்தி கொள்ள வேண்டும். முக கவசம் அணிந்து இருந்தால் தான் பஸ்களில் அனுமதி உண்டு. 60 சதவீத பயணிகளுடன் பஸ்கள் இயக்கப்பட்டாலும், பழைய கட்டணங்கள் தான் பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை நகரை பொறுத்தவரை ஏற்கனவே செயல்பட்ட அனைத்து பஸ் நிறுத்தங்களும் செயல்படும்.
அனைத்து நிறுத்தங்களிலும் போக்குவரத்து ஊழியர்கள் சமூக இடைவெளி கடைப்பிடிப்பதையும், பயணிகள் எண்ணிக்கையையும் கண்காணிப்பார்கள். இந்த பஸ் போக்குவரத்து காலை 6 மணியில் இருந்து இரவு 9 மணி வரை இருக்கும். அரசு பஸ்களை போலவே, தனியார் பஸ்களும் மண்டலங்களுக்குள் இயங்கலாம். அதேபோல் கார்களும் அரசு அறிவித்த எண்ணிக்கையுடன் இயங்கலாம். அதே போல் அந்த மாவட்ட மக்களும் மதுரைக்கு வரலாம். இ-பாஸ் தேவையில்லை.
மாவட்ட பிரச்சினை
மண்டலங்களுக்கு இடையே பஸ் போக்குவரத்து அறிவித்து இருப்பது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும் அதில் சில பகுதி மக்களுக்கு மட்டும் பிரச்சினைகள் உள்ளன. உதாரணமாக கொட்டாம்பட்டி மதுரை மாவட்டத்தை சேர்ந்தது. ஆனால் கொட்டாம்பட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சில கிலோ மீட்டர் தூரம் உள்ள திருச்சி மாவட்டத்திற்குள் செல்ல கூடாது. ஆனால் 200 கிலோ மீட்டர் தூரமுள்ள ராமேசுவரத்திற்கு செல்லலாம். அதேபோல் விருதுநகர் மாவட்ட எல்லை பகுதியில் இருந்து தூத்துக்குடி மாவட்ட எல்லை சில கிலோ மீட்டர் தூரம் தான்.