மாநகரப் பேருந்து, ரயிலில் ஒரே கட்டண அட்டை முறை அடுத்த மாதம் முதல் அமல்
சென்னை: மாநகரப் பேருந்து, மெட்ரோ ரயில்கள், புறநகர் மின்சார ரயில்களில் பயணம் மேற்கொள்ள விரும்பும் பயணிகள் இனி ஒரே கட்டண அட்டையைப் பயன்படுத்தி பயணம் செய்யலாம்.
இந்த முறை அடுத்த மாதம் முதல் அமலுக்கு வரவுள்ளது.
பொதுவாக தலைநகர் சென்னையில் ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்குச் செல்ல பேருந்து, மெட்ரோ ரயில், மின்சார ரயில்களில் பயணம் செல்ல விரும்பும் பயணிகள் தனித்தனியாக டிக்கெட் எடுத்து பயணம் செய்து வந்தனர்.
ஆனால், இனி இதுபோல் எடுக்கத் தேவையில்லை. இவை அனைத்துக்கும் ஒரே பயண அட்டையை பயன்படுத்தும் முறையைக் கொண்டுவர உள்ளது தமிழக அரசு.
“சென்னையில் மாநகரப் பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் என அனைத்திலும் பயணம் செய்ய ஒரே கட்டண அட்டை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது. இதற்காகத் தனிச் செயலி உருவாக்கப்பட்டு, அடுத்த ஜூன் மாதம் 2வது வாரத்தில் இத்திட்டம் அமலுக்கு வரும்,” எனப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்காகத் தயாரிக்கப்பட்டுள்ள கட்டண அட்டைகளை மீண்டும் ரீசார்ஜ் செய்து பயணிகள் தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.