விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி:தமிழகத்தில் விவசாய மின்னிணைப்பு பெற எளிய வழிமுறைகள்… மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு!✍️முழுவிவரம்✍️விண்மீன் நியூஸ்
விவசாய மின் இணைப்பு விண்ணப்பம் பதிவு செய்வது, மின் இணைப்பு பெறுவது, இடமாற்றம் செய்வது என இதுவரை இவற்றில் நிலவியசிக்கலை சரி செய்யும் வகையில், தமிழ்நாடு மின்சார வழங்கல் மற்றும் பகிர்மான விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு, எளிமையான வழிமுறையை நடைமுறைப்படுத்த தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஆணையை வழங்கி உள்ளது.
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பை பார்ப்போம்.
விண்ணப்பங்கள் மற்றும் தயார் நிலைக்கான விதிமுறைகளை எளிமைப்படுத்துதல்:
*மின்னிணைப்பு கோரும் விவசாயக் கிணறு கூட்டு உரிமையாக இருக்கும் பட்சத்தில், கூட்டு சொந்தக்காரர் ஒப்புதல் தர மறுத்தால் விண்ணப்பதாரர் பிணை முறிவு பத்திரம் அளித்தால் போதுமானது. விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு பதிவு செய்யப்படும்.
*விண்ணப்பத்துடன் கிராம நிர்வாக அலுவலர் அளிக்கும் கிணறு மற்றும் நிலத்திற்கான உரிமைச்சான்று ஒன்று மட்டும் போதுமானது. இதர ஆவணங்கள் தேவையில்லை. குறைந்த பட்சம் அரை ஏக்கர் பாசன நிலம் இருக்க வேண்டும்.
*மின்மோட்டார் மற்றும் மின்தேக்கி ( electric condenser ) முதலியவைகளை வாங்கிப் பொருத்தி தயார் நிலையை ஆரம்பத்திலேயே தெரிவிக்கத் தேவையில்லை. மின்னிணைப்பு வழங்குவதற்கான மின்மாற்றி (Transformer) மற்றும் மின்கும்பி சம்பந்தப்பட்ட அனைத்துப் பணிகளும் முடிவுற்ற பின் விண்ணப்பதாரருக்கு 90 நாட்கள் அவகாசம் அளிக்கப்படும். அப்போது தயார் நிலையைத் தெரிவித்தால் போதும், தயார்நிலையை தெரியப்படுத்திய மூன்று நாட்களுக்குள் மின்னிணைப்பு வழங்கப்படும்.
*ஒரே சர்வே எண்ணில் அல்லது உட்பிரிவு சர்வே எண்ணில் ஒருவருக்கு இரண்டு கிணறுகள் இருக்கும் பட்சத்தில், தலா அரை ஏக்கர் பாசன நிலம் இருப்பின் ஒவ்வொரு கிணற்றிற்கும் தனித்தனி மின்னிணைப்பு அனுமதிக்கப்படும்.
*ஒரே கிணற்றில் கிணற்றின் உரிமைதாரர்கள் அனைவரும் ஒவ்வோர் மின்னிணைப்பிற்கும் அரை ஏக்கர் பாசன நிலம் இருக்கும் பட்சத்தில், அதே கிணற்றில் தனித்தனியாக மின் இணைப்பைப் பெற்றுக் கொள்ளலாம்.
*ஒரே கிணற்றில் விவசாயம் அல்லாத பிற தேவைகளுக்காக தண்ணீர் இறைத்துக்கொள்ள அதற்குரிய வீதப்பட்டியலில் மற்றொரு மின்னிணைப்பு வழங்க அனுமதிக்கப்படும்.
மாநிலத்திற்குள் விவசாய மின்னிணைப்பை இட மாற்றம் செய்தல்:
*தமிழ்நாட்டிற்குள் எந்தப் பகுதியில் இருந்தும் எந்தப் பகுதிக்கும் விவசாய மின்னிணைப்பை இட மாற்றம் செய்ய அனுமதிக்கப்படும்.
*இடமாற்றத்திற்கான காரணம் தெரிவிக்க வேண்டியதில்லை.
*நிலம் விற்கப்பட்டு கிணறு மட்டும் இருந்தால் கூட அதில் உள்ள மின்னிணைப்பை இட மாற்றம் செய்ய அனுமதிக்கப்படும்.
*மாற்றத்திற்கான செலவை மனுதாரர் பங்களிப்பு பணிகளுக்கான வைப்பீட்டு முறையின் கீழ் ஏற்க வேண்டும்.
முறைமாற்ற திறப்பான் உபயோகிப்பதற்கான அனுமதி:
*விவசாய மின்னிணைப்பில் முறைமாற்ற திறப்பான் அமைத்து உபயோகப்படுத்துவதற்கான விண்ணப்பத்துடன் மின்மோட்டார் / மின்தேக்கி தொடர்பான விவரங்கள் தவிர எந்த வித ஆவணங்களும் இணைக்கத் தேவையில்லை.
*விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட அலுவலர் இடத்தைப் பார்வையிட்டு முறைமாற்ற திறப்பானை சீல் செய்து அனுமதி வழங்க வேண்டும்.
*மேற்கண்ட நாட்களுக்குள் உரிமதாரரிடமிருந்து அனுமதி கிடைக்கப் பெறாத நிலையில் விவசாய அவசர நிமித்தம் காரணமாக முறைமாற்ற திறப்பானை குறிப்பிட்ட விவசாய தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
*மின்நுகர்வோருக்கு முறைமாற்ற திறப்பானுக்கு ஒரு முறை அனுமதி அளிக்கப்பட்ட பின் ஒவ்வொரு முறையும் விவசாயம் சம்பந்தப்பட்ட செயல் மாற்றத்திற்கு தனித்தனியாக அனுமதி பெறத் தேவையில்லை.