உணவு விநியோக நிறுவனமான ஸ்விக்கி, டெலிவரி ஊழியர்களுக்கான ஊதியம் மற்றும் பணி நேரம் குறித்த விதிமுறைகளில் மாற்றங்களைச் செய்ததைக் கண்டித்து, டெலிவரி ஊழியர்கள் போராட்டத்தால் சேவை பாதிப்பு – இவர்களின் ஊதியம் கணக்கிடப்படுவது எப்படி?✍️விண்மீன்நியூஸ்✍️
உணவு விநியோக நிறுவனமான ஸ்விக்கி, டெலிவரி ஊழியர்களுக்கான ஊதியம் மற்றும் பணி நேரம் குறித்த விதிமுறைகளில் மாற்றங்களைச் செய்ததைக் கண்டித்து, கடந்த 19ஆம் தேதி முதல் சென்னையில் ஸ்விக்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று ஆட்சியரிடம் தங்களுக்கு முந்தைய ஊதிய முறை, பணி நேரம் ஆகியவையே நீடிக்க வழி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஸ்விக்கி ஊழியர்களின் பிரதிநிதிகள் அளித்துள்ளனர்.
இந்த வேலை நிறுத்தம் குறித்து ஸ்விக்கி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “நிறுவனத்தின் முதுகெலும்பே டெலிவரி ஊழியர்கள் தான். அவர்களுடைய நலனைக் கருத்தில் கொண்டுதான் நிறுவனம் செயல்படுகிறது,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்விக்கியில் பணியாற்றும் டெலிவரி ஊழியர்களுக்கு தினசரி இலக்கு, வாராந்திர இலக்கு என்று இரண்டு இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டிருந்தன. இந்த இலக்குகளை அடைவதற்கு ஏற்ப அவர்களுக்கு ஊதியம் போக ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் 19ஆம் தேதி முதல் அவர்களுக்கான ஊதியம் மற்றும் பணி நேரம் குறித்த விதிமுறைகளில் அந்நிறுவனம் செய்த சில மாற்றங்கள் அமலுக்கு வந்தன. அது தங்களுடைய நலனுக்கு எதிராக இருப்பதாகக் கூறி ஸ்விக்கி டெலிவரி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய சென்னையைச் சேர்ந்த ஸ்விக்கி டெலிவரி ஊழியரான மாவீரன், “இதற்கு முன்பிருந்த விதிமுறைகள் மாற்றப்பட்டு வேறு விதிமுறைகள் அமலுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. முன்பு இருந்த பணி விதிமுறைகளின்படி, ‘தினசரி ஊக்கத்தொகை’ இருந்தது,” என்கிறார்.
“ஒரு குறிப்பிட்ட அளவு டெலிவரிகளை செய்து முடித்தால் அதற்கென குறிப்பிட்ட ஊக்கத்தொகை வழங்கப்படும். ஒரு ஆர்டரை டெலிவரி செய்வதற்கு எங்களுக்குக் கிடைக்கும் ஊதியத் தொகை குறைவாகத்தான் இருக்கும். அத்துடன் ஒரு நாளின் இலக்கை அடைவதன் மூலம் கிடைக்கும் ‘ஊக்கத்தொகை’ தான் ஓரளவுக்கு எங்களுடைய தேவையைப் பூர்த்தி செய்கின்றன. ஆனால், அந்த புதிய விதிமுறைகளின்படி இந்த ஊக்கத்தொகை கிடைக்காது,” என்கிறார் மாவீரன்.
முன்பிருந்த நடைமுறைப்படி ஒருநாளில் செய்யப்படும் டெலிவரிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து, அதற்கேற்ப கொடுக்கப்பட்ட ஊக்கத்தொகை தான் தங்களுக்குப் உதவியாக இருந்தது என்கின்றனர் ஸ்விக்கி ஊழியர்கள்.
ஸ்விக்கியில் டெலிவரி ஊழியராக பணியாற்றும் ஒருவர், ஒரு நாளில் குறிப்பிட்ட அளவு ஆர்டர்களை டெலிவரி செய்தால் மட்டுமே அவர்களுக்கு ஊக்கத்தொகை கிடைத்து விடாது என்று கூறும் மாவீரன், “அந்த ஊக்கத்தொகையைப் பெறுவதற்கு ஒரு நாளில் 12 மணி நேரம் பணியாற்றியிருக்க வேண்டும்,” என்ற விதிமுறையும் இருந்ததாகக் கூறுகிறார்.
அதாவது ஸ்விக்கி ஊழியர்கள் கூறும் கணக்குப்படி பார்க்கையில், ஒரு நாளைக்கு 12 மணிநேரம் பணியாற்ற வேண்டும். ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு 5 ரூபாய் என்ற கணக்கிலும் அதோடு, உணவகங்களில் ஆர்டரை பெறுவதற்காகக் காத்திருக்கும் நேரத்தைப் பொறுத்து ஒரு தொகை மற்றும் வாடிக்கையாளர்களிடம் டெலிவரி செய்வதற்கு ஒரு தொகை என்ற அளவில் ஒரு ஆர்டரை டெலிவரி செய்வதற்கான தொகை நிர்ணயிக்கப்படுகிறது.
உதாரணமாக, ஒருவர் 5 கிமீ தூரத்துக்கு பயணம் செய்து ஒரு ஆர்டரை டெலிவரி செய்கிறார் என்றால், அவருக்கு அந்தத் தூர பயண தொகையாக 25 ரூபாயும் உணவகத்தில் காத்திருக்கும் நேரத்தைப் பொறுத்து அதற்கென ஒரு தொகையும் வாடிக்கையாளருக்கு டெலிவரி செய்தமைக்காக ஒரு தொகையும் என கணக்கிட்டு அவருக்கு ஒரு ஆர்டருக்கான ஊதியம் நிர்ணயிக்கப்படும்.
“இந்தக் கணக்கில், ஒருவர் நாளொன்றுக்கு 12 மணி நேரம் பணியாற்றி 475 ரூபாய் வரை சம்பாதிக்க வேண்டும். அப்போது தான் அவருக்கு ஊக்கத்தொகையாக கூடுதல் 225 ரூபாய் கிடைக்கும். அதுவே ஒருவர் 475 ரூபாய்க்கும் மேலாக 950 ரூபாய் வரை டெலிவரி பார்த்திருந்தால், 400 ரூபாய் வரை ஊக்கத்தொகை கிடைக்கும். இப்படியாக ஒரு நாளில் செய்யக்கூடிய டெலிவரிகளின் எண்ணிக்கை மற்றும் அதில் கிடைக்கும் டெலிவரி தொகையைப் பொறுத்து ஊக்கத்தொகை கணக்கிடப்படும்,” என்று மாவீரன் கூறினார்.
இந்தக் கணக்கில், ஒருவர் நாளொன்றுக்கு 12 மணிநேரம் பணியாற்றி 475 ரூபாய் வரை சம்பாதிக்க வேண்டும். அப்போது தான் அவருக்கு ஊக்கத்தொகையாக கூடுதல் 225 ரூபாய் கிடைக்கும். “அதுவே ஒருவர் 475 ரூபாய்க்கும் மேலாக 950 ரூபாய் வரை டெலிவரி பார்த்திருந்தால், 400 ரூபாய் வரை ஊக்கத்தொகை கிடைக்கும். இப்படியாக ஒரு நாளில் செய்யக்கூடிய டெலிவரிகளின் எண்ணிக்கை மற்றும் அதில் கிடைக்கும் டெலிவரி தொகையைப் பொறுத்து ஊக்கத்தொகை கணக்கிடப்படும்,” என்று மாவீரன் கூறினார்.
மேலும், நிறுவனங்கள் பணம் செலுத்தும் இலக்குகள், கணக்கீடுகளை அடிக்கடி மாற்றுவதால், ஊக்கத்தொகைகளை முற்றிலுமாக அகற்றுவதால், இப்போது நடப்பதைப் போல, ஆண்டுக்கு ஆண்டு வருமானம் தொடர்ந்து குறைவதோடு, தொழிலாளர்கள் அதிக நேரம் வேலை செய்யும் கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறார்கள்,” என்கிறார் ஷியாம்.
இப்போதைய புதிய விதிமுறைகளின்படி, முன்பு கட்டாய பணி நேரமாக இருந்த 12 மணிநேரம் 16 மணிநேரமாக மாற்றப்பட்டுள்ளதாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஸ்விக்கி ஊழியர்கள் கூறுகின்றனர்.
ஸ்விக்கி ஊழியர்கள் இதுகுறித்து தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தில் புகாரளித்துள்ளதாகத் தெரிவித்தனர். அதோடு இன்று மாவட்ட ஆட்சியரிடமும் மனு அளித்துள்ளனர்.
அந்த மனுவில், “புதிய திட்டத்தை அமல்படுத்தினால் கிட்டத்தட்ட 50 சதவீதம் ஊதியத்தை இழக்க நேரிடும் என்பதால் பழைய ஊதிய முறையைத் தொடர ஆவண செய்ய வேண்டும், குறைந்தது 16 மணிநேரம் வேலை செய்யுமாறு நிறுவனம் நிர்பந்தித்து வருகிறது. அதை ரத்து செய்து, இந்திய தொழிலாளர் சட்டத்தை சரிவர அமலாக்க வேண்டும்,” ஆகிய கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளன.
புதிய விதிமுறைகளின்படி, முன்பைப் போல் தினசரி ஊக்கத்தொகையோ வார ஊக்கத்தொகையோ கிடையாது. பெட்ரோல் செலவுக்கான 11% தொகையும் இனி வழங்கப்படாது. இதனால், முன்பு பணியாற்றியதைப் போல் வேலைகளைச் செய்தாலும், அப்போது கிடைத்ததைப் போன்ற ஊதியம் கிடைப்பதில்லை என்று சென்னையைச் சேர்ந்த ஸ்விக்கி ஊழியர்கள் கூறுகின்றனர்.
“முன்பு காலை 6 மணிக்குத் தொடங்கினால் இரவு 9 மணிக்குள் 12 மணி நேர வேலையை முடிக்க வேண்டும். அதில் நாங்கள் குறிப்பிட்ட இலக்கை அடைவதன் மூலம் ஊக்கத்தொகையைப் பெற்றோம். அந்த ஊக்கத்தொகை மூலமாகத்தான் எங்களுக்குக் கட்டுப்படியாகிக் கொண்டிருந்தது.
ஆனால், இப்போது பணி நேரத்தையும் அதிகப்படுத்திவிட்டார்கள், ஊக்கத்தொகை வழங்குவதையும் நிறுத்தி விட்டார்கள். முன்பு இருந்ததை அப்படியே விட்டிருந்தால் சரியாக இருந்திருக்கும். ஆனால், இப்போது மாற்றியது மட்டுமின்றி ஊழியர்கள் மீது அக்கறை இல்லாததைப் போல் செயல்படுகிறார்கள். எங்களுடைய நிலைமையை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை.
சராசரியாக ஒரு நாளைக்கு காலையிலிருந்து இரவு 9 மணி வரை வேலை செய்தால், 1300 ரூபாய் வரை கிடைக்கும். ஆனால், கடந்த இரண்டு நாட்களில் 600, 700 ரூபாய்க்கு மேல் கிடைக்கவில்லை,” என்று கூறுகிறார் பெயர் குறிப்பிட விரும்பாத மற்றொரு ஸ்விக்கி டெலிவரி ஊழியர்.
சமூக-பொருளாதார சுரண்டல்
ஊதிய பிரச்னைகள் மட்டுமின்றி சமூகரீதியாகவும் டெலிவரி தொழிலாளர்கள் பல சிக்கல்களைச் சந்திப்பதாகக் கூறுகிறார் முனைவர் ஷியாம் கிருஷ்ணா.அது குறித்துப் பேசிய அவர், “ஊதிய பிரச்னைகளுக்கு அப்பால், இத்தகைய விநியோகத் தொழிலாளர்கள் தங்கள் உடல்நலம், நல்வாழ்வு மற்றும் உழைப்பின் கண்ணியம் ஆகியவற்றில் மோசமான விளைவுகளை எதிர்கொள்கின்றனர். டெலிவரி தொழிலாளர்கள் அதிக மாசுபாடு மற்றும் சாலைகளில் ஆபத்தை எதிர்கொள்கின்றனர். மேலும், சவாலான பணி இலக்குகளை நிறுவனங்கள் விதிக்கின்றன. சிலர் வாடிக்கையாளர்களால் நியாயமற்ற முறையில் நடத்தப்படுகிறார்கள்.இதனால், ஏற்கனவே சமூக-பொருளாதார ரீதியாக ஓரங்கட்டப்பட்ட பல தொழிலாளர்கள், இப்போது இந்த சுரண்டல் நிலைமைகளால் மனம் மற்றும் உடல்ரீதியாக மேன்மேலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த அநீதியை அகற்றி இந்தத் தொழிலாளர்களுக்கு ஆதரவளிப்பதே தமிழகத்தின் முக்கிய கவனமாக வேண்டும்,” என்று தெரிவித்தார்.ஸ்விக்கி நிறுவனம் இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சென்னையில் டெலிவரி ஊழியகள் ஒரு ஆர்டருக்கு 15 ரூபாய் தான் பெறுகிறார்கள் என சொல்லப்படுவதில் உண்மையில்லை. சராசரியாக 45 ரூபாய் வரை ஒரு ஆர்டருக்கு சம்பாதிக்கிறார்கள். அதிகபட்சமாக 100 ரூபாய் வரை ஒரு ஆர்டருக்கு பெற்ற பதிவுகளும் உள்ளன.அவர்கள் பயணிக்கும் தொலைவு, காத்திருக்கும் நேரம், வாடிக்கையாளர் அனுபவம், பணி நேரத்தை முடித்தல், ஊக்கத்தொகை ஆகிய பல காரணிகள் அவர்களின் சேவைக்கான ஊதியத்தில் பங்கு வகிக்கின்றன. இந்தத் துறையில் சிறந்த ஊதியத்தை ஸ்விக்கி டெலிவரி ஊழியர்கள் பெறுவதாகச் சொல்லப்படுகிறது.எங்கள் டெலிவரி ஊழியர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் மீது அக்கறை கொண்டுள்ளோம். அவர்கள் இந்த நிறுவனத்தின் முதுகெலும்பு. அவர்களுடைய நலன் மீது மிகுந்த அக்கறை கொண்டுள்ளோம்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.