சமூகவளையதளத்தில் நண்பராகி ,குறைந்த விலையில் பைக் விற்பதாக வரவழைத்து துப்பாக்கி முனையில் மிரட்டி இருவரிடம் ரூ.25,000 பறிப்பு: பேஸ்புக் நண்பர் உள்பட 6 பேருக்கு வலை✍️முழுவிவரம் -விண்மீன் நியூஸ்
குறைந்த விலையில் பைக் விற்பதாக வரவழைத்து துப்பாக்கி முனையில் மிரட்டி இருவரிடம் ரூ.25,000 பறிப்பு: பேஸ்புக் நண்பர் உள்பட 6 பேருக்கு வலை*
சென்னை: குறைந்த விலையில் பைக் விற்பதாக வரவழைத்து, துப்பாக்கி முனையில் மிரட்டி 2 வாலிபர்களிடம் ₹25 ஆயிரம் பறித்த பேஸ்புக் நண்பர் உள்பட 6 பேரை போலீசார் தேடுகின்றனர். கோவை அடுத்த கொண்டாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (33). இவருக்கு, சென்னையை சேர்ந்த ஹரி (36) என்பவர் பேஸ்புக் மூலம் நண்பராகி உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன், செல்போனில் சுரேஷ்குமாரை தொடர்பு கொண்ட ஹரி, ‘திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை பகுதியில் மலிவான விலையில் இருசக்கர வாகனம் விற்பனைக்கு உள்ளது, தேவை என்றால் வாங்கிக்கொள்ளுங்கள்,’ என்று கூறியுள்ளார்.
அதற்கு சம்மதம் தெரிவித்த சுரேஷ்குமார், கோவையை சேர்ந்த சங்கர் (34) என்பவருடன், கடந்த வெள்ளிக்கிழமை கவரப்பேட்டை வந்தார். அங்கு ஹரியை சந்தித்தனர். அப்போது அவர், ‘கவரப்பேட்டை அடுத்த கண்ணூர் தைல மர காட்டில் தான் பைக் இருக்கிறது. அங்கு செல்வோம் வாருங்கள்,’ என இருவரையும் பைக்கில் ஏற்றிக் கொண்டு புறப்பட்டார். தைல மர காட்டிற்கு சென்றபோது, அங்கு 5 பேர் இருந்தனர். அவர்களில் ஒருவர் நாட்டு துப்பாக்கி வைத்திருந்தார். அவர்களை பார்த்ததும் இருவருக்கும் பதற்றம் ஏற்பட்டது. மேலும், அங்கு விற்பனைக்கான பைக் எதுவும் இல்லை. உடனே, ஹரியிடம் இதுபற்றி கேட்டபோது, வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது, நாட்டு துப்பாக்கியை காட்டி ஹரி உள்ளிட்ட 6 பேரும் மிரட்டி, இருவரிடமும் இருந்த ₹10 ஆயிரத்தை பறித்தனர். பின்னர், கூகுள் பே மூலம் அவர்களது உறவினர்களிடம் இருந்து ₹15 ஆயிரத்தை பறித்த 6 பேரும், அங்கிருந்து தப்பி விட்டனர். இதையடுத்து சுரேஷ்குமாரும், சங்கரும் ஒரு ஆட்டோவில் கவரப்பேட்டை காவல் நிலையத்துக்கு வந்து புகார் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து ஹரி உள்ளிட்ட 6 பேரை தேடி வருகின்றனர். பேஸ்புக் நண்பரால் துப்பாக்கி முனையில் 2 பேரிடம் பணம் பறிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.