பேஸ்புக்கில் பழகி பெண்களிடம் பணம் பறித்த போலி போலீஸ் கமிஷனர்: விசாரணையில் ‘பகீர்’ தகவல்✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
பேஸ்புக்கில் பழகி பெண்களிடம் பணம் பறித்த போலி போலீஸ் கமிஷனர்: விசாரணையில் ‘பகீர்’ தகவல்
திண்டுக்கல்: சென்னை, கொளத்தூரை சேர்ந்தவர் விஜயன்(41). இவர் தன்னை போலீஸ் கமிஷனர் எனக்கூறி கொண்டு போலி அடையாள அட்டை, சைரன் வைத்த வாகனம், துப்பாக்கியுடன் கடந்த 2ம் தேதி திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள லட்சுமிபுரம் டோல்கேட்டில் கைது செய்யப்பட்டார். இவரை போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்த நிலக்கோட்டை கோர்ட்டில் பட்டிவீரன்பட்டி போலீசார் மனு செய்திருந்தனர். மாஜிஸ்திரேட் மும்தாஜ் ஒருநாள் காவலில் விசாரணை நடத்த உத்தரவிட்டார். இவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆரம்பத்தில் சிமென்ட் தொழில் செய்து வந்த விஜயனுக்கு ரூ.60 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டது. இதனை ஈடுகட்ட சென்னையில் தனியார் தொலைக்காட்சியில் நிருபராக 2 ஆண்டுகள் வேலை பார்த்து வந்துள்ளார். அந்த சமயத்தில், முன்னாள் முதல்வர்கள், ஐபிஎஸ் அதிகாரிகள், தற்போதைய கேரள முதல்வர் மற்றும் போலீஸ், சிறைத்துறை உயர் அதிகாரிகளை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களுக்கு சென்று அதன் புகைப்படங்களையும் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வருமானம் குறைவு, சரியான வேலை இல்லாததால் மனைவியிடம் சண்டை என தொடர் பிரச்னையால், குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று டிஎஸ்பியாக தேர்வானதாக பொய் சொல்லியுள்ளார். இதற்காக கடந்த 10 மாதத்திற்கு முன்பு கோவையில் ஜீப் வாங்கி தனது மனைவி, உறவினர்களிடம் உளவுத்துறை மற்றும் போலீஸ் கமிஷனராக வேலை பார்ப்பதாக கூறி வலம் வந்துள்ளார். ஏற்கனவே பல போலீஸ் உயர் அதிகாரிகளை சந்தித்து எடுத்த புகைப்படங்களை முகநூலில் பதிவிட்டதன் மூலம் ஏராளமான நட்பு வட்டாரத்தை விரிவுப்படுத்தி உள்ளார். மேலும் பெண்கள் உள்பட பல பேரிடம் பேஸ்புக்கில் பழகி லட்சக்கணக்கில் பணம் பெற்றுள்ளார்.
டிரஸ்ட் வைத்துள்ளவர்கள் மற்றும் ஒரு நண்பரிடமும் நலத்திட்ட உதவிகள் செய்வதாக கூறி பணம் வாங்கி உள்ளார். இவரை உண்மையான போலீஸ் அதிகாரி என நினைத்து பலர் பணமும் கொடுத்துள்ளனர். ஆனால் இவர் மோசடி செய்ததாக இதுவரை எந்த புகாரும் பதிவு செய்யப்படவில்லை. எனவே விஜயன் மோசடி குறித்து யாரேனும் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென போலீசார் தெரிவித்தனர்.